Tuesday 28 January 2020

அவளும் அந்த ஏழு நாட்களும்


                                                  மௌனச்சிறுகதை


இது மௌனச்சிறுகதை . பேச்சு, வர்ணனை, விவரிப்பு,உவமம், எண்ணஓட்டம் போன்ற கதைசொல்லும் உபகரணங்கள் ஏதுமின்றி புறக்காட்சிகளால் மட்டுமே அடுக்கப்பட்டு இயங்கிச்செல்லும் கதை இது.

இந்தக் கதையின் வரிகளை வழக்கம் போல்
வாசிக்காமல் ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் வாசித்தபின் நிறுத்தி அவற்றை அகக்காட்சிகளாய் உணர்ந்து பின் அடுத்த வார்த்தைக்குச் செல்லுங்கள்.

இவ்வகையில் இக்கதை ஒரு கூட்டுப்படைப்பாளியாய் இயங்கிட வாசகரைக் கோருகிறது.

  ******      ******

பஸ் வந்து நிற்கிறது. அவன் ஏறுகிறான் .பஸ் நகர்கிறது பஸ் ஓடி நிற்கிறது.அவள் ஏறுகிறாள் .ஏறியதும் அவன் பக்கம் பார்க்கிறாள்.அவனும் பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் பஸ் நிற்கிறது. இறங்குகிறார்கள். வெவ்வேறு பக்கம் நடக்கிறார்கள்.



காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வர் பதவியேற்பு’.பஸ்ஸில் ஏறூகிறாள். அவன் பார்க்கிறான்.அவள் வேறுபக்கம் பார்க்கிறாள். அவன் திரும்புகிறான். பார்க்கிறாள். அவள் முகத்தில் புன்னகை.

                                ******      ******

     மழை.  குடைகளை பிடித்தபடி ஆட்கள். சாலையில் வெள்ளம். மழை. தூறல்.
மழை. புது வருட காலண்டர் மாட்டப்படுகிறது. பள்ளியின் தகவல் பலகையில் கோடை விடுமுறை . டீவி யில் சுதந்திரக்கொடி ஏறுகிறது.பேக்கரியில் கூட்டம்.  கிறிஸ்துமஸ் கேக்குகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. 
 பழைய காலண்டர் அகற்றப்படுகிறது. மீண்டும் புதுக்காலண்டர்.

******      ******

பஸ்ஸின் உட்பக்கம்.   அவன் அருகே  நிற்கிறாள். அவளது பேக் அவன்  மடியில்  . பேக்கைத் திறக்கிறான். உள்ளே சாக்லேட்டுகள். எடுக்கிறான் .அவளைப் பார்க்கிறான்.அவள் சிரிக்கிறாள்.சாக்லேட்டை வாயில் வைக்கிறான்.   

******      **

******      ******

     காலண்டரின் தேதித்தாட்கள் கொஞ்சமாய் இருக்கின்றன.

      போர்டில் ‘வருவாய்த்துறை’ என்று போட்டிருக்கிற உள்ளே  ஒரு மேசையில் அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்.

     வங்கியின் உட்புறம். கடிகாரத்தில் ஐந்தரைமணி. வாசற்படிகளில்  அவள் வெளியே வருகிறாள்.;;; பேருந்து நிலையத்தில் அவள் நின்று கொண்டிருக்கிறாள். அவன் அருகே வருகிறான்.
.  ஓட்டலின் கண்ணாடிக்கதவு திறக்கிறது.இருவரும் உள்ளே போகிறார்கள்.

                      ******      ******
காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வரின் ஐந்து வருட சாதனை விழா’..
பஸ்ஸில்  அவனைப் பார்க்கிறாள்  .மலர்ச்சியாய் அவள் முகம்.  அவனருகில் காலியாயிருக்கும் இருக்கையில் போய் அமர்கிறாள்.

     ஓட்டல் கார்டன்.  எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள.; சிரிப்புடன் சிரிப்புடன் சிரிப்புடன் ஒருவரை ஒருவர்  பார்க்கிறார்கள். தட்டுகளில் இனிப்புகள் . அவள்  அல்வாவை ஸ்பூனில் எடுத்து வாயில் வைக்கிறாள்.
 
     அவனும் ஸ்பூனில் எடுத்துக் குனிந்து வாயில் வைக்கிறான். சுவைத்தவாறே நிமிர்கிறான். சற்றே முந்தானை விலகியிருக்கும் அவளின் வலதுபக்கம் ..குனிந்து தட்டைப் பார்க்கிறான் . அவள் கண்களில் படபடப்பு.  இயல்பாய் முந்தானைத் தலைப்பை சரிசெய்துகொள்கிறாள்.

     திரும்பி வேறுபக்கம் பார்க்கிறாள். எழுந்து சென்று (கொஞ்சம் வேகமாய்)
கையலம்புகிறாள்.  எழுந்தவாறே  பார்க்கிறான். அவளின் தட்டில் பாதி ஸ்வீட் இருக்கிறது.


                       


                                                     ******      ******

    அம்மா சாப்பாட்டைப் பார்க்கிறாள். தட்டில் சாப்பாடு அப்படியே இருக்கிறது.எதிரே அவன் உட்கார்ந்திருக்கிறான். அம்மா அவன் அருகே வந்து தொடுகிறாள். எழுந்து தன் அறைக்குள் போகிறான்.அவனையே பார்த்தவாறு  சாப்பாட்டைமூடுகிறாள் . கூடத்து விளக்குகளை அணைக்கிறாள்  . படுக்கையில் குப்புறவிழுகிறான். முகம் தலையணைக்குள் புதைந்திருக்கிறது.  உடல் குலுங்குகிறது.
  
கடிகாரத்தில் ஒரு மணி. படுக்கையில் புரண்டவாறு இருக்கிறான். எழுந்து  உட்காருகிறான். கண்கள் கலங்கிப்போய்  வீக்கத்துடன் இருக்கின்றன.

                                   ******      ******

  காலண்டரில் வியாழன். .பஸ்ஸில் இருக்கிறான்.அவள் ஏறும் நிறுத்தம். ஆட்கள் ஏறுகிறார்கள் கழுத்தை வளைத்து ஏறுபவர்களையே பார்க்கிறான்.அவள் இல்லை.

  வெள்ளி. அவள் இல்லை.                                   

   வீட்டில் தன்அறையில் ஷேவ் செய்யாத முகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். மேசையில் தட்டில் தோசை இருக்கிறது.காபி ஏடு படிந்து இருக்கிறது. காலண்டரில் சிவப்பில் ஞாயிறு.
 
    பள்ளிப்பிள்ளைகள் பஸ்ஸில் ஏறுகிறார்கள். அவள் இல்லை. அலுவலகத்துக்குள் செல்கிறான். தொலைபேசியில் எண்களை சுழற்றுகிறான்.சுழற்றுகிறான் . வைக்கிறான்.கண்களை மூடித் திறக்கிறான்

   காலண்டரில் செவ்வாய்.

   அவள் பஸ்ஸில் இல்லை .அவன் அலுவலகத்துக்குள் நிற்கிறான் விடுமுறை விண்ணப்பம் என போடப்பட்டிருக்கும் தாளை எடுக்கிறான்.பேனா இரண்டு நாட்கள் என எழுதுகிறது. வெளியில் வருகிறான். பஸ்ஸில் ஏறி வீட்டுக்குள் செல்கிறான்.

                        ******      ******


     ‘ஆடிட் அர்ஜென்ட்’ என்று எழுதப்பட்டிருந்த பத்து பனிரெண்டு ஃபைல்களுக்குப் பின்னால் மறைந்து போய் ;கையை உதறிக்கொண்டு உதறிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறாள் அவள்.

     ஃபைலை மூடிவிட்டு எழுந்து  தொலைபேசியைச் சுழற்றுகிறாள்.

      காதிலேயே வைத்துக்கொண்டிருக்கிறாள்.மீண்டும் சுழற்றுகிறாள். பேசாமல் தலையை மட்டும் அசைத்தபடி வைக்கிறாள் .நெற்றியை துடைத்துக்கொண்டு; ஸீட்டில் வந்து உட்கார்கிறாள்.

      வெள்ளைத் தாளெடுத்து  எழுதுகிறாள்.உறைக்குள் வைத்து முகவரி எழுதுகிறாள்.  பியூனிடம் கொடுக்கிறாள்.

                           ******      ******

      புதன். பஸ்ஸில் அவன் நின்று கொண்டிருக்கிறான்.பஸ் போகும் திசையில் சாலையையே பார்த்தபடி.  அவளின் நிறுத்தம் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது.

      நெருங்குகிறது. வருகிறது. பஸ் நிற்கிறது.ஆட்கள் ஏறுகிறார்கள.அவள் இல்லை
அவன் அங்கேயே இறங்குகிறான்.; அவள் நிற்கும் தரையையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.

              ******      ******

      வீட்டில் தன் அறையில் உட்கார்ந்;திருக்கிறான். மேசையில் கிடக்கும் வார இதழைப் ;புரட்டுகிறான்.

       முந்தானை விலகிக் கிடக்க மோகமாய்ப் பார்க்கும்  நடிகையின் படம். ஒருஆணை கோபமாய் முறைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் படம். வாரஇதழை வீசி அடிக்கிறான். தலையைப் பிடித்துக்கொள்கிறான். விளக்கை அணைக்கிறான். மேசை விளக்கு மட்டும் ஒளிர்கிறது. தாள் எடுக்கிறான். பேனா எழுதுகிறது.

        ‘தாரிணி அன்று ஓட்டலில் சாப்பிடும்போது நான்…..’

காலை செய்தித்தாள் வந்து விழுகிறது. ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம்.

         அம்மா அறைக்குள் வருகிறாள். மேசையில் கண்ணாடிக் குவளையில் பாதிப்பால். மஞ்சள் நிறத்தில்.

          குனிந்து ,மேசையில் நெற்றியைப்பதித்து , நாற்காலியில் உட்கார்ந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறான்.

          அம்மா  முதுகில் கைவைத்து உலுக்குகிறாள். அவன் கழுத்து சடக்கென தொங்கிச்சாய்கிறது. உதடுகளில் எறும்புகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன
          ஐந்தாறு எறும்புகள் வாயில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

        ******      ******

          அவள் மேசையில் ஒரு கடிதம் வைக்கப்படுகிறது. அதில் அவனது முகவரி. பக்கத்தில் ‘திருப்பப்படுகிறது’ என சிவப்பு மையில் எழுதப்பட்டிருக்கிறது.

 வீங்கியிருக்கும் அவளது கண்கள்  கலங்கியிருக்கின்றன.கடிதத்தைப்  பிரிக்கிறாள்.
 ‘என் உயிர் பாபு.
           ஸாரிப்பா… பேங்கில் ஆடிட். எட்டேகால் பஸ்ஸிலேயே  வந்துவிடுகிறேன்.வேலை கை ஒடிகிறது.
   உனக்கு மூன்று தடவை போன் பண்ணினேன் தெரியுமா..நீ இல்லையே…சாயங்காலத்தில் பஸ்ஸ்டாண்டுக்குக்கூட வரவில்லையே... என்ன ஆயிற்று உனக்கு.
நாளை ஆடிட் முடிகிறது. நாளை பஸ் ஸ்டாண்டில் என்னைப்பார்… ப்ளீஸ்.
டேய் படவா… உன்னைப் பார்க்காமல்  உயிரே போய்விடும்போல் இருக்கிறதடா ….ஏமாத்திடாதே’
                             --------------------------------------------------------------------------                 

குறிப்பு: 1992ல் நான் எழுதிய இக்கதை என்னிடமே இருந்து- பின் அனுப்பப்பட்டு 9.4.1995 ஆனந்தவிகடன் இதழின் இணைப்பு விகடனில் ‘தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு புதிய பங்களிப்பு’ என்ற குறிப்போடும் கதையின் அமைப்பு குறித்த விளக்கத்தோடும் என்புகைப்படத்தோடும் பிரசுரமானது.
                                           -ராசி.பன்னீர்செல்வன்





1 comment:

  1. மிக நல்ல கதை தோழர். புதிய கதை சொல்லல் முறை. கதை மௌனமாக இருந்தாலும் கதை காட்சி விரிவாக பேச வைத்துவிடுகிறது,,,தமிழ் சிறுகதை வெளியில் வடிவத்தால் புதிது. வாழ்த்துக்கள்

    ReplyDelete