Friday 20 March 2020

மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் குடியுரிமை அல்லாதோரை கண்டறிதலும்


           நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்,தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன குறித்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகிற சூழலில் மத்திய அரசு ஒரே விளக்கத்தைத்தான் ஊடகங்களுக்கு திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. குடியுரிமைச் சட்டத்திற்கும் குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பில்லை; குடியுரிமை பதிவேட்டுக்கும் மக்கள்தொகை பதிவேட்டுக்கும் தொடர்பில்லை என்பதுதான் அது. அமைச்சகம் மட்டுமன்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் அடிக்கடி இதனையே சொல்லிவந்துள்ளனர்.

இச்சூழலில் எதிர் வரும் ஏப்ரல் 1 முதல் செப்டெம்பர் 30 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிக்கை தேசிய மக்கள் தொகை ஆணையாளரால் கடந்த வருடம் ஜுலை 31 அன்று வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பே தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயாரிப்பதற்கான முதற்கட்டச் செயல்பாடு என்றும், 2003 ல் ( வாஜ்பாய் அரசால் ) கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படிதான் இது செயல்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2003 குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளில்  வீடுவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அவ்விவரங்கள் உள்ளூர் மக்கள்தொகை அலுவலரால் சரிபார்க்கப்பட்டு மக்கள்தொகைப்பதிவேடு தயாரிக்கப்படும் .அதன் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி செய்யப்படும் என சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நிதீமன்றத்தில் நூறுக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 22 ல் அவற்றை விசாரணைக்கு எடுத்துகொண்ட உச்ச நீதிமன்றம்   , மார்ச் 18 க்குள் அவை குறித்த  பதில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது . இந்நிலையில் மார்ச் 17 செவ்வாய் அன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ளது.

அந்த பிரமாணப் பத்திரத்தில் , குடிமக்கள் அல்லாதோரிடமிருந்து இந்திய குடிமக்களை   பிரித்தறியவும் , சட்டதிற்கு புறம்பாக நாட்டிற்குள் வந்திருப்பவர்களை கண்டறிந்து அவர்களை சட்டபடி வெளியேற்றவும் தேசசியகுடிமக்கள்பதிவேடு அவசியமாகிறது . அவ்வறு குடிமக்களை குடிமக்கள் அல்லதோரிடமிருந்து இனங்காண  அத்தியாவசியத் தேவையாக இருக்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டின் தயாரிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்போடு இணைந்தோ அல்லது தனியாகவோ செயல்படுத்தப்படும்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை இனங்காணுதல் என்பது ஒரு அரசின் இறையாண்மை ,சட்டம் மற்றும் அற அடிப்படையிலான கடமையாகும்.. அப்படி சட்டவிரோதமாக உள்ளே வந்திருப்பவர்களை இனங்கண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் பணிகளை தொடங்குவதும் மத்திய அரசின் பொறுப்பாகும் .
1946 ல் போடப்பட்ட வெளிநாட்டினர் சட்டம்  அவர்களை வெளியேற்றும் முழு அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு தந்திருக்கிறது.   சட்ட விரோதமாக குடியேறிய எந்தவொரு நபரும் இந்தியாவில் தொடர்ந்து வசிக்கவோ அல்லது குடியுரிமை கோரவோ முடியாது . அரசியல் சாசனத்தின் 21 ஆவது பிரிவு குடியுரிமைக்கான பரந்துபட்ட வாய்ப்புகளை அளித்திருந்தாலும் அது சட்டவிரோதமாக குடியேறியவர்களை உள்ளடக்கவில்லை.வலுவான ஆதாரங்களின் அடிபடையிலேயே ஒருவர் தனது குடியுரிமையை கோர இயலும் . 

ஒருவர் தனது குடியுரிமையை நிறுவ தனது பிறந்த தேதி /பிறந்த இடம்/தாய் தந்தையரின் பிறந்த இடம், அவர்தம் குடியுரிமை / தேவைபடும் நேர்வுகளில் தாத்தா பாட்டியின் பிறந்த இடம்/  ஆகிய ஆதாரங்களை குடியுரிமை சட்ட விதி 6A (1) (d) ன் படி வழங்கவேண்டும்`.. வழங்கப்பட்ட ஆதரங்களை சரிபார்த்து மாநில அளவிலான மக்கள் தொகை அதிகாரிகள் அதனை இறுதி செய்வார்கள். மாநில அலுவலர்களால் ஏற்றுகொள்ளப்படாத சந்தேகத்திற்குரிய தனிநபர் விபரங்கள் முதற்கட்ட  சான்றுகளாக பரிசீலிக்கப்படும் சாத்தியமிழக்கக் கூடும்.

மேற்கண்ட விவரங்கள் உள்ளிட்ட தனது 129 பக்க பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மேலும் அதில் , குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முழுவதும் சட்டப்பூர்வமானது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது, இது நாடாளுமன்றத்தின் இறையாண்மைக்குத் தொடர்பான விசயம்.. இது குறித்து நீதிமன்றத்தின் முன்பு கேள்வி கேட்க முடியாது . குடியுரிமை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது . இச்சட்டம் தற்போது உள்ள எந்த உரிமைகளையும் பறிக்காது  இது மக்களின் சட்டபூர்வ ஜனநாயக மதச்சார்பற்ற உரிமைகளை பாதிக்காது .இந்த சட்டம் எந்த இந்தியர்களுடனும் தொடர்பு கொண்டதல்ல. என்றும் கூறப்பட்டுள்ளது.

மத அடிப்படையிலான சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என நீதி மன்றத்திலேயே பிராமண பத்திரம் தாக்கல் செய்யும் துணிவு மோடி அரசுக்கே உள்ள சிறப்பு. . 2003 ல் திருத்தப்பட்ட சட்டத்தில் மக்கள் தொகைப்பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைதான் தொடர்பு படுத்தப்பட்டதே தவிர மத அடிப்படை ஏதும் பேசப்படவில்லை.


ஆக தற்போது மக்கள் தொகைப் பதிவேட்டுடன் இணைந்த குடிமக்கள் பதிவேட்டினைத் தயாரிப்பதுதான் அரசின் பிரதான நோக்கம் எனில் அதற்கு 2003 திருத்தச்சட்டமே போதும்.   .ஆனால் இவ்வளவு முனைப்புடன் குடியுரிமை திருத்த சட்டத்தை  நிறைவேற்றியதன் உள்நோக்கம் மத அடிப்படையிலான பிரிவினைவாதத்தைப் பேணி ஒரு ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதுதான் .
2014 டிசம்பருக்கு முன்பு ஆப்கானிஸ்தான் ,பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்து ,சீக்கியர் ,பார்சி, புத்தம் ,சமணம் மற்றும் கிருத்துவ மதத்தினர் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்பதுதான் புதிய சட்டத் திருத்தம் . இதில் இஸ்லாம் மதத்தினர் சேர்க்கப்படாததும் ஏனைய இலங்கை மியான்மர் உள்ளிட்ட நாடுகள் சேர்க்கப்படாததும் வன்மத்தின் கோரமுகத்தையே காட்டுகின்றன.


2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டு என்பதால் அதை சாதகமாக்கி வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புதான் என ஏப்ரல் 1 தொடங்கும் கணக்கெடுப்பை அரசு காட்டிக்கொள்ள விரும்புகிறது.

ஆக மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரித்து அதன் அடிப்படையில் குடியுரிமைக்கு தகுதி இல்லாதோரை கண்டறிந்து வெளியேற்றும் செயலுக்கு முன்னதாக சட்டவிரோத குடியேறி யார் என்று வரையறுத்து கொள்ளவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் .
     2014 டிசம்பருக்கு  முன்பு சட்டவிரோதமாக குடியேறிவர்களில் யார் குடியேறியது சட்டவிரோதம் அல்ல என்று முடிவு செய்வதற்கு மதத்தை எடுத்திருப்பது மதவாத சக்தியான பா ஜ க என்கிற ஆர் எஸ் எஸ் சின் 75 வருட கால கனவு செயல்திட்டம். அந்தக் கனவுகள் செயல்படுத்தப்படுகின்றன.








Tuesday 28 January 2020

அவளும் அந்த ஏழு நாட்களும்


                                                  மௌனச்சிறுகதை


இது மௌனச்சிறுகதை . பேச்சு, வர்ணனை, விவரிப்பு,உவமம், எண்ணஓட்டம் போன்ற கதைசொல்லும் உபகரணங்கள் ஏதுமின்றி புறக்காட்சிகளால் மட்டுமே அடுக்கப்பட்டு இயங்கிச்செல்லும் கதை இது.

இந்தக் கதையின் வரிகளை வழக்கம் போல்
வாசிக்காமல் ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் வாசித்தபின் நிறுத்தி அவற்றை அகக்காட்சிகளாய் உணர்ந்து பின் அடுத்த வார்த்தைக்குச் செல்லுங்கள்.

இவ்வகையில் இக்கதை ஒரு கூட்டுப்படைப்பாளியாய் இயங்கிட வாசகரைக் கோருகிறது.

  ******      ******

பஸ் வந்து நிற்கிறது. அவன் ஏறுகிறான் .பஸ் நகர்கிறது பஸ் ஓடி நிற்கிறது.அவள் ஏறுகிறாள் .ஏறியதும் அவன் பக்கம் பார்க்கிறாள்.அவனும் பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் பஸ் நிற்கிறது. இறங்குகிறார்கள். வெவ்வேறு பக்கம் நடக்கிறார்கள்.



காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வர் பதவியேற்பு’.பஸ்ஸில் ஏறூகிறாள். அவன் பார்க்கிறான்.அவள் வேறுபக்கம் பார்க்கிறாள். அவன் திரும்புகிறான். பார்க்கிறாள். அவள் முகத்தில் புன்னகை.

                                ******      ******

     மழை.  குடைகளை பிடித்தபடி ஆட்கள். சாலையில் வெள்ளம். மழை. தூறல்.
மழை. புது வருட காலண்டர் மாட்டப்படுகிறது. பள்ளியின் தகவல் பலகையில் கோடை விடுமுறை . டீவி யில் சுதந்திரக்கொடி ஏறுகிறது.பேக்கரியில் கூட்டம்.  கிறிஸ்துமஸ் கேக்குகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. 
 பழைய காலண்டர் அகற்றப்படுகிறது. மீண்டும் புதுக்காலண்டர்.

******      ******

பஸ்ஸின் உட்பக்கம்.   அவன் அருகே  நிற்கிறாள். அவளது பேக் அவன்  மடியில்  . பேக்கைத் திறக்கிறான். உள்ளே சாக்லேட்டுகள். எடுக்கிறான் .அவளைப் பார்க்கிறான்.அவள் சிரிக்கிறாள்.சாக்லேட்டை வாயில் வைக்கிறான்.   

******      **

******      ******

     காலண்டரின் தேதித்தாட்கள் கொஞ்சமாய் இருக்கின்றன.

      போர்டில் ‘வருவாய்த்துறை’ என்று போட்டிருக்கிற உள்ளே  ஒரு மேசையில் அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்.

     வங்கியின் உட்புறம். கடிகாரத்தில் ஐந்தரைமணி. வாசற்படிகளில்  அவள் வெளியே வருகிறாள்.;;; பேருந்து நிலையத்தில் அவள் நின்று கொண்டிருக்கிறாள். அவன் அருகே வருகிறான்.
.  ஓட்டலின் கண்ணாடிக்கதவு திறக்கிறது.இருவரும் உள்ளே போகிறார்கள்.

                      ******      ******
காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வரின் ஐந்து வருட சாதனை விழா’..
பஸ்ஸில்  அவனைப் பார்க்கிறாள்  .மலர்ச்சியாய் அவள் முகம்.  அவனருகில் காலியாயிருக்கும் இருக்கையில் போய் அமர்கிறாள்.

     ஓட்டல் கார்டன்.  எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள.; சிரிப்புடன் சிரிப்புடன் சிரிப்புடன் ஒருவரை ஒருவர்  பார்க்கிறார்கள். தட்டுகளில் இனிப்புகள் . அவள்  அல்வாவை ஸ்பூனில் எடுத்து வாயில் வைக்கிறாள்.
 
     அவனும் ஸ்பூனில் எடுத்துக் குனிந்து வாயில் வைக்கிறான். சுவைத்தவாறே நிமிர்கிறான். சற்றே முந்தானை விலகியிருக்கும் அவளின் வலதுபக்கம் ..குனிந்து தட்டைப் பார்க்கிறான் . அவள் கண்களில் படபடப்பு.  இயல்பாய் முந்தானைத் தலைப்பை சரிசெய்துகொள்கிறாள்.

     திரும்பி வேறுபக்கம் பார்க்கிறாள். எழுந்து சென்று (கொஞ்சம் வேகமாய்)
கையலம்புகிறாள்.  எழுந்தவாறே  பார்க்கிறான். அவளின் தட்டில் பாதி ஸ்வீட் இருக்கிறது.


                       


                                                     ******      ******

    அம்மா சாப்பாட்டைப் பார்க்கிறாள். தட்டில் சாப்பாடு அப்படியே இருக்கிறது.எதிரே அவன் உட்கார்ந்திருக்கிறான். அம்மா அவன் அருகே வந்து தொடுகிறாள். எழுந்து தன் அறைக்குள் போகிறான்.அவனையே பார்த்தவாறு  சாப்பாட்டைமூடுகிறாள் . கூடத்து விளக்குகளை அணைக்கிறாள்  . படுக்கையில் குப்புறவிழுகிறான். முகம் தலையணைக்குள் புதைந்திருக்கிறது.  உடல் குலுங்குகிறது.
  
கடிகாரத்தில் ஒரு மணி. படுக்கையில் புரண்டவாறு இருக்கிறான். எழுந்து  உட்காருகிறான். கண்கள் கலங்கிப்போய்  வீக்கத்துடன் இருக்கின்றன.

                                   ******      ******

  காலண்டரில் வியாழன். .பஸ்ஸில் இருக்கிறான்.அவள் ஏறும் நிறுத்தம். ஆட்கள் ஏறுகிறார்கள் கழுத்தை வளைத்து ஏறுபவர்களையே பார்க்கிறான்.அவள் இல்லை.

  வெள்ளி. அவள் இல்லை.                                   

   வீட்டில் தன்அறையில் ஷேவ் செய்யாத முகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். மேசையில் தட்டில் தோசை இருக்கிறது.காபி ஏடு படிந்து இருக்கிறது. காலண்டரில் சிவப்பில் ஞாயிறு.
 
    பள்ளிப்பிள்ளைகள் பஸ்ஸில் ஏறுகிறார்கள். அவள் இல்லை. அலுவலகத்துக்குள் செல்கிறான். தொலைபேசியில் எண்களை சுழற்றுகிறான்.சுழற்றுகிறான் . வைக்கிறான்.கண்களை மூடித் திறக்கிறான்

   காலண்டரில் செவ்வாய்.

   அவள் பஸ்ஸில் இல்லை .அவன் அலுவலகத்துக்குள் நிற்கிறான் விடுமுறை விண்ணப்பம் என போடப்பட்டிருக்கும் தாளை எடுக்கிறான்.பேனா இரண்டு நாட்கள் என எழுதுகிறது. வெளியில் வருகிறான். பஸ்ஸில் ஏறி வீட்டுக்குள் செல்கிறான்.

                        ******      ******


     ‘ஆடிட் அர்ஜென்ட்’ என்று எழுதப்பட்டிருந்த பத்து பனிரெண்டு ஃபைல்களுக்குப் பின்னால் மறைந்து போய் ;கையை உதறிக்கொண்டு உதறிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறாள் அவள்.

     ஃபைலை மூடிவிட்டு எழுந்து  தொலைபேசியைச் சுழற்றுகிறாள்.

      காதிலேயே வைத்துக்கொண்டிருக்கிறாள்.மீண்டும் சுழற்றுகிறாள். பேசாமல் தலையை மட்டும் அசைத்தபடி வைக்கிறாள் .நெற்றியை துடைத்துக்கொண்டு; ஸீட்டில் வந்து உட்கார்கிறாள்.

      வெள்ளைத் தாளெடுத்து  எழுதுகிறாள்.உறைக்குள் வைத்து முகவரி எழுதுகிறாள்.  பியூனிடம் கொடுக்கிறாள்.

                           ******      ******

      புதன். பஸ்ஸில் அவன் நின்று கொண்டிருக்கிறான்.பஸ் போகும் திசையில் சாலையையே பார்த்தபடி.  அவளின் நிறுத்தம் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது.

      நெருங்குகிறது. வருகிறது. பஸ் நிற்கிறது.ஆட்கள் ஏறுகிறார்கள.அவள் இல்லை
அவன் அங்கேயே இறங்குகிறான்.; அவள் நிற்கும் தரையையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.

              ******      ******

      வீட்டில் தன் அறையில் உட்கார்ந்;திருக்கிறான். மேசையில் கிடக்கும் வார இதழைப் ;புரட்டுகிறான்.

       முந்தானை விலகிக் கிடக்க மோகமாய்ப் பார்க்கும்  நடிகையின் படம். ஒருஆணை கோபமாய் முறைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் படம். வாரஇதழை வீசி அடிக்கிறான். தலையைப் பிடித்துக்கொள்கிறான். விளக்கை அணைக்கிறான். மேசை விளக்கு மட்டும் ஒளிர்கிறது. தாள் எடுக்கிறான். பேனா எழுதுகிறது.

        ‘தாரிணி அன்று ஓட்டலில் சாப்பிடும்போது நான்…..’

காலை செய்தித்தாள் வந்து விழுகிறது. ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம்.

         அம்மா அறைக்குள் வருகிறாள். மேசையில் கண்ணாடிக் குவளையில் பாதிப்பால். மஞ்சள் நிறத்தில்.

          குனிந்து ,மேசையில் நெற்றியைப்பதித்து , நாற்காலியில் உட்கார்ந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறான்.

          அம்மா  முதுகில் கைவைத்து உலுக்குகிறாள். அவன் கழுத்து சடக்கென தொங்கிச்சாய்கிறது. உதடுகளில் எறும்புகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன
          ஐந்தாறு எறும்புகள் வாயில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

        ******      ******

          அவள் மேசையில் ஒரு கடிதம் வைக்கப்படுகிறது. அதில் அவனது முகவரி. பக்கத்தில் ‘திருப்பப்படுகிறது’ என சிவப்பு மையில் எழுதப்பட்டிருக்கிறது.

 வீங்கியிருக்கும் அவளது கண்கள்  கலங்கியிருக்கின்றன.கடிதத்தைப்  பிரிக்கிறாள்.
 ‘என் உயிர் பாபு.
           ஸாரிப்பா… பேங்கில் ஆடிட். எட்டேகால் பஸ்ஸிலேயே  வந்துவிடுகிறேன்.வேலை கை ஒடிகிறது.
   உனக்கு மூன்று தடவை போன் பண்ணினேன் தெரியுமா..நீ இல்லையே…சாயங்காலத்தில் பஸ்ஸ்டாண்டுக்குக்கூட வரவில்லையே... என்ன ஆயிற்று உனக்கு.
நாளை ஆடிட் முடிகிறது. நாளை பஸ் ஸ்டாண்டில் என்னைப்பார்… ப்ளீஸ்.
டேய் படவா… உன்னைப் பார்க்காமல்  உயிரே போய்விடும்போல் இருக்கிறதடா ….ஏமாத்திடாதே’
                             --------------------------------------------------------------------------                 

குறிப்பு: 1992ல் நான் எழுதிய இக்கதை என்னிடமே இருந்து- பின் அனுப்பப்பட்டு 9.4.1995 ஆனந்தவிகடன் இதழின் இணைப்பு விகடனில் ‘தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு புதிய பங்களிப்பு’ என்ற குறிப்போடும் கதையின் அமைப்பு குறித்த விளக்கத்தோடும் என்புகைப்படத்தோடும் பிரசுரமானது.
                                           -ராசி.பன்னீர்செல்வன்





குடியரசு தின சிறப்புக் கருத்தரங்கம்


வேதக்கவியும் எழுதாக்கிளவியும்

வேதங்களின்உள்ளடக்கம்-
அறநெறிப்பண்பு கொண்டவையா 

என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகளை மருத்துவர் நா. ஜெயராமன் தொகுத்துள்ளார்.


அந்நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை.
-------------------------------------------------------------------------------------------


2019  மார்ச் ஏப்ரல் மாதங்களில் தமிழகமெங்கும் கடும் வறட்சி நிலவியது அச்சூழலில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பணீந்திரரெட்டி அத்துறையின் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் 

“வரும் 2019-2020 ஆம் ஆண்டு விகாரி வருடத்தில் நல்ல பருவமழை பெய்து நாடுசெழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள கோயில்களில் அந்தந்தக் கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து செயல் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம், வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், அருள்மிகு நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர்நிரப்பி வழிபாடு செய்தல்,  சிவபெருமானுக்கு சீதளகும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர்;விட்டு அபிஷேகம் செய்தல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல்…….

மேற்கண்டவாறு அந்தந்தக் கோயில்களின் பழக்கவழக்கத்திற்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட, இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களை தேர்வுசெய்து மழைவேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோயில் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.”

இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்ட அவ்வாணையின் அடிப்படையில் பெரும்பாலான கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு நகரமெங்கும் பதாகைகள் கட்டி விளம்பரப்படுத்தப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக வளைவுகள் தோரணங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி சார்ந்த அமைச்சர்கள் முன்னிலையில் மழைவேண்டி யாகங்கள் நடைபெற்றன புரோகிதர்கள் பெரியபெரிய பித்தளை அண்டாக்களில் கழுத்தளவு நீரில் அமர்ந்து செய்த யாகங்களையும் வேள்விக் குண்ட யாகங்களையும் குறித்து செய்தித்தாள்கள் விரிவான செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தன.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிற்கும் சற்றும் குறையாத அளவில் இந்தியா வளர்ந்திருக்கும் காலத்தில், முழுவதும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட சந்திரயான் போன்ற செயற்கைக்கோள்கள் ஏவப்படுகிற காலத்தில் மழைக்கு புரோகிதர்களை வைத்து யாகம் வளர்ப்பதை புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் செல்ல வேண்டும். 

வேள்விகளையும் சடங்குகளையும் இம்மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவை வேதங்கள். இந்தியாவிற்கு வெளியிலிருந்து இங்குவந்த ஆரியர் கொண்டுவந்த பண்டைக்கவிகளின் பாடல்களின் தொகுப்பே வேதங்கள்.

வேதங்கள் ரிக், யஜீர், சாம, அதர்வணம் என நான்கு. ஒவ்வொரு வேதத்திலும் மூன்று பகுதிகள். அவை சம்ஹிதை பிராமணம், ஆரண்யகம்.

சம்ஹிதை வழிபாட்டுப் பாடல்களையும், பிராமணம் வேள்விச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும், ஆரண்யகம் வனப்பாடல்களையும் உள்ளடக்கியவை.

இதில் ஆரண்யகங்களில்தான் உபநிடதங்கள் எனப்படும் தத்துவ விசாரணைகள் உள்ளன இவை வேதங்களின் இநுதிப்பகுதியாக இருப்பதால் வேதாந்தம் என்றும் கூறப்படுகிறது.

சம்ஹிதைகள் காலத்தால் முந்தியவை. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது இந்திய தத்துவம் நூலில் சம்ஹிதைகள் 3500 ஆண்டுகளுக்கு முந்தியவை என்கிறார். உபநிடதங்கள் காலத்தால் பிந்தியவை

“வேத நாகரிகம் வைதிகச் சடங்குகளாலான ஒன்று. வேள்விகளில் சோமரசத்தை அளிப்பதே வேதஆரியரின் சமயவாழ்வின் முக்கியச் சிறப்புப் பகுதி. ஆழ்ந்து சிந்திக்கும் கருத்துக்கள் வளராதவாறு சடங்குச் செயல்கள் மிகுதியாக இருந்தன”. 

இந்த மேற்கோள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை பதிப்பாசிரியராகக் கொண்டு இந்திய அரசு வெளியிட்டுள்ள “ கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியில்வரலாறு” எனும் பெருநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வைதிகர்களும் இந்துத்துவாவாதிகளும் போற்றுகிற வேதங்களின் மூலப் பாடல்கள் அதாவது சம்ஹிதை – பிராமணம் எனப்பட்ட முற்பகுதிகளின் தன்மை இவ்வளவே. அந்த சடங்குமயமான வேதமரபில் தத்துவ விசாரணைக்கு போதிய வெளி இல்லை. தீயின் புகையும், பலியிடப்பட்ட ஆடு மாடுகளின் ஓலமும், சோமபானப் போதையுமே அடைத்துக் கொண்டிருந்தன. 

மிகவும் பிந்திய காலத்தில் எழுந்த உபநிடதங்களிலேயே விவாதிக்கத்தக்க தத்துவச் சிந்தனைகள் வெளிப்பட்டன.

                                000 000 000

வேத வேள்விமரபு தமிழ்ச் சமுதாயத்திற்குள் நுழைந்ததை சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்றும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்றும் மன்னர்கள் தங்களுக்கு சூடிக்கொண்ட பெயர்களே அதற்குச் சான்று.

தஞ்சை மாவட்டத்தின் பூஞ்சாற்றூரை ஆண்ட கௌணிய விண்ணந்தாயன் என்ற மன்னனைப் பற்றி ஆவூர் மூலங்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் இவ்வாறு செல்கிறது.

"நீர்நாண நெய் வழங்கியும் , எண் நாணப் பல வேட்டும் , மண்நாணப் புகழ் பரப்பியும்…"

வேள்விநெய் கண்டு நீர் வெட்கப்பட்டதாம். வேள்விகளின் எண்ணிக்கையில் எண்ணே வெட்கப்பட்டதாம்

விண்ணந்தாயனின் புகழ்கண்டு பூமியே வெட்கப்பட்டதாம். வேள்வி மரபு எந்த அளவுக்கு ஊடுருவி நின்றது என்பதும் புரிகிறது.

வேள்விக்காகவே பிராமணர்களுக்கு அரசர்கள் தானம் வழங்கினர். இன்றும் சதுர்வேதி மங்கலங்களும், உத்தமதான புரங்களும், பிரமதேயங்களும் சான்றாக இருக்கின்றன.

வேள்வியின் மூலமே தங்களுக்கு கிடைத்ததெல்லாம் கிடைத்தது என நம்பவைக்கப்பட்டது. வேள்வியே அகவாழ்வின் மையப் பொருளானது. அதற்கான சடங்குகளைக் கூறும் வேதங்கள் புனித மானவையாக கொள்ளப்பட்டன. அவை மதமாக தத்துவமாக முன்மொழியப்பட்டன.
                            
                              000 000 000


சங்க இலக்கியங்களில் பத்துபாட்டு எட்டுத்தொகை நூல்களில்  பல பாடல்கள் வேதங்கள் குறித்து பேசுகின்றன “எழுதாக் கிளவி, எழுதாக் கற்பு” ஆகிய மிக நுட்பமான சொற்களால் வேதங்களின் மீது விமர்சனங்களை வைக்கின்றன .

மேற்கண்ட சொற்கள், வேதங்கள் அவற்றின் தொடக்க காலத்திலிருந்து எழுதப்படாத வாய்மொழிப் பாடல்களாகவே இருந்து வந்திருக்கின்றன எனபதை நமக்கு உணர்த்தும் முக்கியச் சான்றுகள்.

நீண்ட காலத்திற்கு வேதங்கள் எழுதப்படாமலே வாய்மொழியாக ஒதப்பட்டு வந்து மிகப் பிந்திய காலத்திலேயே எழுத்துருவாக்கம் பெற்றிருக்கலாம்.

கீழ்கண்;டவற்றை அதனை உறுதிசெய்யும் சான்றுகளாகக் கொள்ளலாம். எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் கற்பூரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் கற்பூரத் தீபாராதனை குறித்து அதர்வண வேதத்தில் உள்ளது

வேத மறுப்பாளரான புத்தரைப்பற்றிய செய்திகள் அவர் பிறப்பதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னாலேயே உள்ள யசூர்  வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து நமக்குப்புரிவது இதுதான். எழுதாமல் வாய்மொழியாகவே வைத்துக்கொண்டு இந்தியா முழுமைக்கும் வெளிப்பட்டு வளர்ந்து வந்த மற்ற தத்துவ மரபுகளை உள்வாங்கி செரித்து தனதாக்கிக் கொண்டு பின்னர் எழுத்து வடிவம் அளிக்கப்பட்டிருக்கலாம்.

காலத்தால் முந்திய சம்ஹிதை பிராமணம் ஆகிய வேதங்களின் முற்பகுதிகள் வேள்விகளையும் சடங்கு சம்பிரதாய மந்திரங்களையும் மட்டுமே பேசுகின்றன. பிந்திய கால உபநிடதங்கள் பேசும் தத்துவ விசாரணைகளில் மற்ற மரபு சார்ந்த கலப்பிருக்கலாம். ரிக் வேதத்தில் உள்ள அறிவுப் பூர்வமான தத்துவப்பாடல்களுக்கு கீழ் அடிக்குறிப்பாக ‘திராவிட ரிக்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைத் தென்னாட்டின் பங்களிப்புக் கலப்பாக கருத இடமுண்டு.

                            000 000 000

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தனது ஆய்வு நூலான “இந்துமதப் புதிர்கள்” என்னும் நூலில் வேதங்கள் குறித்த தனது ஆய்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் எழுதியுள்ளார்.


வேதங்கள் சனாதனமானவை, அதாவது என்றென்றும் இருந்து வருபவை, பொய்யாதவை, கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை, ஆகவே மிகுந்த புனிதத்தன்மை வாய்ந்தவை. இவ்வாறுதான் அவை கட்டமைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் பிரம்மாவின் நினைவில் பாதுகாக்கப்பட்டு ஒரு கல்ப காலத்திலிருந்து அடுத்த கல்ப காலத்திற்கு அவை கடத்தப்படுவதாகச் சொல்லப்படுவது ஒன்று. ஒரு கல்பகாலம் என்பது பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் (சிருஷ்டி) அழிவிற்கும் (பிரளயம்) இடைபட்ட காலம். இவ்வாறு சொல்லப்படுவதற்கு காரணம் வேதங்கள் பிரபஞ்சம் தோன்றியபோது கடவுளால் அருளப்பட்டவை என்றும் அவை மனித முயற்சிக்கு அப்பாற்பட்டவை எனவும் நிறுவத்தான்.
இவ்வாறு கூறப்படும் “வேதங்களின் புனிதத் தன்மை ஏற்கப்படவேண்டுமானால் அவை அறநெறிப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கவேண்டும். மனித மாண்புகளை சிறிதளவேனும் உயர்த்தக் கூடிய அறநெறிகள் இல்லாத ஒன்றினை புனிதமாகக் கொள்வது ஒரு புதிர்தான்” என விளக்குகிறார் டாக்டர் அம்பேத்கர்.

ஆய்வாளர் மூயிர் இவ்வாறு கூறுகிறார் “வேதங்கள் அவற்றைப் பாடிய பண்டைக்கால கவிகளின் சொந்த நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாடேயன்றி வேறில்லை. தாங்கள் வணங்கும் கடவுள்களின் புகழைப் பாடி நிவேதனங்களை அளித்து, எல்லோரும் விரும்புகிற ஆசிகளை, உடல்நலம், செல்வம், நீண்ட ஆயுள், கால் நடைகள், குழந்தைகள், எதிரிகள் மேல் வெற்றி, பாவமன்னிப்பு, சொர்க்கபோகம் ஆகியவற்றை அருளும்படி அவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்” ஆக வேதங்களின் உள்ளடக்கங்களின் தன்மை இதுதான்.

அம்பேத்கர் தனது நுட்பமான ஆய்வுகளின் மூலம் வேதங்களில் உள்ளவற்றின் தன்மைகளை பலவகையான சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

ரிக் வேதம் முழுக்க விரவிக்கிடக்கும் பிரார்த்தனைப் பாடல்களை வாயு, அக்னி, இந்திரன், மித்ரன், ஆதித்தியன் ஆகியோரை வேண்டிப் பாடும் பாடல்களை பட்டியலிட்டு அவற்றின் பொருளோடு எடுத்துரைத்துள்ளார். அதர்வண வேதத்தில் உள்ள 250 க்கும் மேலான, அடுத்தவரை வசியம் செய்யும் மந்திரங்களை பட்டியலிட்டு காட்டியுள்ளார்.
ஆக, அன்றாட வாழ்வியல் தேவைகளுக்காக இறைவனை இறைஞ்சிப் பாடும் பண்டைக்கவிகளின் பாடல்களாகவே வேதங்கள் பார்க்கப்படுகின்றன.

“இந்துமதப் புதிர்கள்” நூலில் அவர் ஆய்ந்து வெளிப்படுத்தும் முடிவுகள் அறிவுலகத்தால் வியந்து ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இதுவரை யாரும் மறுத்துரைத்து எழுத முடியாத தன்மையுடையவை.
அந்த ஒப்பற்ற நூலிலிருந்து வேதங்களின் அறநெறிப் பண்பு குறித்த கட்டுரைகள், இந்துக் கடவுளர்களை அவர்கள் ஏன் சண்டையிட வைத்தார்கள் என்பதான கட்டுரைகள், நான்கு வருணங்கள் நான்கு ஆசிரமங்கள் குறித்த கட்டுரைகள், வேதங்களின் புதிர்கள் குறித்த கட்டுரைகள் ஆகியன இந்நூலில் அப்படியே தொகுத்து தரப்பட்டுள்ளன.

அபெகா வெளியீட்டு வரிசையில் வரும் இந்நூல் வாசிப்பவரின் சிந்தனையின் கதவுகளைத் திறந்து வெளிச்சம் பாய்ச்ச வல்லவை.


       ராசி. பன்னீர்செல்வன்.
       புதுக்கோட்டை