Wednesday 5 April 2023

புதுகை சஞ்சீவியின் கடிதம்

 

                    08.08. 2008

 

பேரன்புமிக்க ராசி சார் அவர்களுக்கு

இருகரம் கூப்பிய வணக்கம்.

 

இன்று  முழுவதும் உறக்கம் வராமல் , நெகிழ்ந்த மனதோடு புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். கண்கள் இறுக மூடியிருந்தாலும் என் சிந்தனை முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது.

 

நான் ஆசைப்பட்ட மாதிரியே காவ்யாவில் இன்னும் பதினைந்து நாட்களில் புத்தகம் தயாராகி விடும் என்கிற செய்தி கேள்விபட்டதிலிருந்தே மனம் உங்களைத்தான் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

இந்த கடிதம் எழுதத் தொடங்கும் போது என் கண்களில் ஈரம் படர்கிறது. இதுதான் ஆனந்தக்கண்ணீர் என்பதா ?எழுத்தில் வடிக்க முடியாத ஒரு உணர்வு தேகமெங்கும் சிலிர்த்தோடுகிறது. நெகிழ்ச்சியா? பரவசமா? சந்தோசமா ?புரியவில்லை. 

என் தந்தை இறந்த தினத்தில் சொட்டுக்கண்ணீர்கூட வந்த்தில்லை எனக்கு.அப்பா செத்துக்கிடக்குறாரு கல்லுப்போல இருக்கான்னு நினைப்பார்களே ,என்பதற்காகவாவது ரெண்டு சொட்டுக் கண்ணீர்கூட வரக்கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன்.வாசலில் கூடியிருக்கும் உறவினர்கள் கூட்டம் என்னைப் பார்த்துப் பார்த்து என் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருக்க நான் பிரேதத்தைப் பார்த்தாலாவது  அழுகை வருமா என்கிற யோசனையோடு வீட்டுக்குள்சென்று அவருடைய காலடியிலேயே கால் மணி நேரம் நின்று பார்த்தும் கொஞ்சமும் கலங்காத மனதுடன் வெளியே வந்திருக்கிறேன்.இத்தனைக்கும் அப்பாவின் மேல் பாசம் இல்லாமல் தந்தையின் மீது வெறுப்பாகவோ வளர்ந்த பிள்ளை இல்லை நான்.