Saturday 20 December 2014

முத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்

  -ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா)

( செம்மொழித்தமிழ்  உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது   உரை- ஜனவரி 2014, புதுக்கோட்டை)
---------------------------------------------------------------------------------------------------------------

மனிதகுல நாகரிகம் நதிக்கரையில் தோன்றி வளர்ந்ததென்று பார்க்கிறோம். உணவு தயாரிக்கவும், உடை உடுத்தவும், இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதுமான அடிப்படை தேவைகளையும் - உற்பத்தி முறைகளையும் அறிந்து கொண்டது மட்டும் நாகரிகமல்ல. ஆண் பெண் தாம்பத்ய உறவை முறைப்படுத்திக் கொண்டதும், மொழியை வடிவமைத்து சிந்தனைக்கு உருவங்கொடுத்தும் தான் உண்மையான நாகரிகம்.

அம்மாதிரியான மொழி நாகரிகத்தில் உலக அளவிலான மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, சீனம், வடமொழி ஆகியவற்றோடு கால ஓட்டத்தில் முன்னும் பின்னுமாய் ஊடாடி இன்றைக்கும் மொழிகள் குலத் தனி விளக்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பது தமிழ்.

கிரேக்கமொழி ஹோமரின் இலியட்;, ஒடிசி ஆகிய மகாகாவியங்களாலும் ஹெரடோட்டஸின் வரலாற்றுப் பதிவுகளாலும், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவ நூல்களாலும் சிறந்திருந்த காலம் உண்டு.

இலத்தீன் இனீட் ஈக்கலாக், ஜார்ஜிக்ஸ் ஆகிய காவியங்களாலும் வர்ஜில், சிசிரோ படைப்புகளாலும் சிறந்திருந்த காலம் உண்டு.

பாரசீகம் ருதகி, பிர்தௌசி ஆகியோரது காப்பியங்களாலும், நிஜாமியின் புனைகதைகளாலும், ரூமியின் மறைப்பாடல்களாலும் சிறந்திருந்த காலம் உண்டு.
   ஹீப்ரு, விவிலியத்தின் மொழியாக இருந்து தன்னுள் தேவனின் வேதத்தை தாங்கி சிறந்திருந்த காலம் உண்டு.

சீனம் கன்பூசியஸ், லாவுட்ஸ் ஆகிய தத்துவவாதிகளாலும், தாவோ நெறிகளாலும், உச்சத்தை அடைந்த காலம் உண்டு.

தமிழ் அகமும் புறமும் சார்ந்த சங்க இலக்கியங்களால் மானிட வாழ்வுப் பதிவை மாண்புறச் செய்து தன்னை செவ்வியல் மொழியாக்கிக் கொண்ட காலம் உண்டு.

வேதங்களின் தத்துவ விசாரணைகளை, தன்னகத்தே தாங்கி செழுமையான மொழியாக சமஸ்கிருதம் வெற்றிகண்ட காலம் உண்டு.
இவற்றுள் இன்றைக்கும் உயிரோடு புழக்கத்தில் வெற்றிகரமாய் வலம் வருகிற மக்கள் மொழிகளாய் திகழ்பவை. இரண்டு தான் ஒன்று சீனம், மற்றொன்று தமிழ்.

அத்தகைய செவ்வியல் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழிக்கு, உலக அறிஞர்கள் அனைவராலும் செம்மொழி என அறிவுப்பரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்மொழிக்கு, நமது இந்திய அரசு செம்மொழி தகுதி அளித்து அங்கீகரிக்க வேண்டுமென நாம் பரிதிமாற் கலைஞர் காலத்திலிருந்து நடத்திய கோரிக்கைச் செயல்பாடுகளின் விளைவாக 12.10.2004-ல் நடுவண் அரசு ஒரு அரசாணை மூலம் தமிழுக்கு செம்மொழிப் பட்டியல் தகுதியை வழங்கியது.

அந்த அரசாணை ஒரு செவ்வியல் மொழிக்கான தொன்மை, இலக்கிய மூலங்கள் மற்றும் அசல்தன்மை ஆகியவற்றை பற்றியெல்லாம் குறிப்பிடுகிறது. அவையெல்லாம் கூட நமக்கு முக்கியமில்லை.

அரசாணையின் பத்தி 1 இப்படி ஆரம்பிக்கிறது. இந்திய அரசு செவ்வியல்மொழிகள் என ஒரு புது மொழிப்பிரிவினை உருவாக்குவதென முடிவு செய்துள்ளது.

இதன்பொருள் என்ன? இப்போதுதான் செவ்வியல் மொழிப் பிரிவு என்ற ஒன்றே தொடங்கப்படுகிறது எனில் ஏற்கனவே பட்டியலில் உள்ள சமஸ்கிருதம், பாரசீகம், அரேபியம், பாலி, பிராக்கிருதம் ஆகிய மொழிகள் எப்படி செவ்வியல் மொழிப்பட்டியலில் உள்ளன என கேள்விகள் எழுவது இயற்கை.

இன்று செம்மொழி தகுதி அறிவிப்புக்கு பிறகு தமிழுக்கு வழங்கப்படும் சிறப்புகளும் ஆய்வு நிதிவகைகளும், மேற்கண்ட ஐந்து மொழிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பெற்று வருகின்றன.

அப்பட்டியல் எப்படி வந்தது? 1835-ல் மெக்கால பிரபு இந்நாட்டுக்கான கல்வித் திட்டத்தை முடிவுசெய்ய ஆலோசனைகளை பெற்ற போது ஆங்கில வழிக் கல்வி மற்றும் அறிவியல் கல்வியை ஏற்றுக் கொண்டவர்கள் மேலைச் சிந்தனையாளர்கள் எனவும் இம்மண்ணின மொழிகளையும் கலை கலாச்சாரத்தையும் கற்க வேண்டும் என்றவர்கள் கீழைச் சிந்தனையாளர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
மெக்காலே பிரபு மேலைச்சிந்தனையாளர்களின் ஆலோசனைகளை ஏற்று ஆங்கிலம் அறிவியல் கலந்த மேலைக் கல்வியை நடைமுறைப்படுத்திவிட்டு கீழைச் சிந்தனையாளர்களையும் ஆதரிப்பதற்காக பண்டைய மொழிகளை அங்கீகரிக்க அவற்றின் வழியாகவும் கல்வி வழங்க ORIENTAL SCHOOLS   ஏற்பாடு செய்தார்.

அந்த காரணத்தில் பட்டியலில் அமைந்த அம்மொழிகள் நாளடைவில் இந்தியாவின் செம்மொழிகள் என்று ஆகிப்போயின.

ஆக எந்த அரசாணையின் மூலமும் இன்று நாம் புரிந்து கொள்கிற செம்மொழி என்ற பொருளில் அம்மொழிகள் அறிவிக்கப்படவில்லை.

ஆக இந்தியாவின் அரசாணைப்படியான முதல் மற்றும் ஒரே செம்மொழி தமிழ் மட்டும்தான்.

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம், தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்குவதற்கான பரிசீலனைக் கோப்பில் 41 தமிழ்நூல்களை ஆதார நூல்களாய் வைத்திருந்தது.

அவை பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய மேற்கணக்கு நூல்கணக்கு நூல்கள் 18, அறநூல்களில் பதிணென் கீழ்கணக்கு நூல்கள் 18, காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை – 2, தொல்காப்பியம் 1, இறையனார் அகப்பொருள் 1, மற்றும் முத்தொள்ளாயிரம் 1 ஆகியவை அந்த 41 நூல்களாகும்.

ஆக தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்த 41 நூல்களுள் ஒன்று என்ற சிறப்பை “முத்தொள்ளாயிரம்” பெறுகிறது.

அம் முத்தொள்ளாயிரத்தை அழகியல் நோக்கில் நாம் காணக் கிடைத்திருக்கிற இவ்வாய்ப்பினை எண்ணி மகிழ்கிறேன்.

நண்பர்களே, தமிழ்க்கவிதை இரண்டாயிரமாண்டு கால வாழ்வியல் அனுபவத்தைக் கொண்டது. நம் ஒவ்வொருவரின் அணுத்திரளிலும் நம் முன்னோர்களது கவிப்பிரதிகள் மிதந்துகொண்டிருக்கின்றன.
அதனால்தான் அனைத்துமே உரைநடையாயிருக்கிற இந்த நவீன காலத்திலும் ஒரு நவீன இளைஞன் கவிதை வரிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிற வாழ்த்து அட்டைகளின் மூலம் தம் அன்பை பரிமாறிக் கொள்ள விரும்புகிறான். ஒரு சமானியன் தன் காதல் பெண்ணை கவிதைகளால் அர்ச்சிப்பதையே விரும்புகிறான்.

திரையரங்குகளில் எதுகை மோனைகளோடு உள்ள வசனங்களை தமிழன் கைதட்டல்களால் ஆர்ப்பரித்து ரசிக்கிறான்.

நுட்பமாக கவனித்தால் தமிழின் அடுக்குகளும் அலங்காரங்களும் சிலேடைகளும் அணிநயங்களும் இலக்கிய வரிகளும் தமிழ் மண்ணில் ஆட்சி அதிகாரங்களை சாத்தியப்படுத்தி இருப்பதை நாம் பார்க்க முடியும்.

இவற்றிலிருந்தெல்லாம் தப்பி ஒருவன் பேருந்தில் ஏறினால் கூட கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்று இரண்டாயிரம் ஆண்டுகால கவி மரபு கையைப் பிடித்து இழுக்கிறது.

அப்படி தமிழ்க்கவிதை நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாதையில் சென்று முத்தொள்ளாயிரத்தின் அழகியல்களைக் காணலாம்.

படைப்பு அனுபவங்களின் அடிமனச் சர ஓடையில் இறங்கி உணர்வுகளின் அழகை வகைப்பிரித்து உணர்தலே அழகியல் பார்வை.

தமிழில் அழகியல் என்றும் ஆங்கிலத்தில் AESTHETICS என்றும் இந்திய மரபில் ‘ரசம்’ என்றும் இவ்வுணர்வு குறிக்கப்படுகிறது.

தமிழில் காதல், நகை, இரக்கம், கோபம், வீரம், அச்சம், வெறுப்பு, வியப்பு, தன்மை என்று வகைபெறும் அழகியல் கோட்பாடு வடமொழியில் சிருங்கார், ஹாஸ்யம், கருணை, ருத்திரம், வீர், பயனாகம், பீபஸ்தம், அற்புதம் மற்றும் சாந்தம் என்று நவரசக் கோட்பாடாகிறது.
   நகை அழுகை  இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை
என்று மெய்ம்மை அழகியலை தொல்காப்பியம் பேசுகிறது.

என்றாலும் கோட்பாடுகளின் வழிகளில் நில்லாமல் நம் மனம் சார்ந்த ரசனையின் அடிப்படையிலேயே,  அனுபவப்புரிதல்களின் அடிப்படையிலேயே, முத்தொள்ளாயிர அழகியலை நாம் அணுகலாம்.


பாடலெங்கும் கதவுகள்… அழகின் திறப்புகள்

உள்ளே நுழையும்போது வாயில் இருக்கிறது. வாயிலெங்கும் கதவுகள் இருக்கின்றன. கதவுகள் தோறும் அழகின் மூடலும் திறப்பும் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கின்றன.

கதவு1
சேரன்கோதை உலாவருகின்றான் அவனை  காணவிடாமல் தாயார்கள் கதவுகளை அடைக்க, காணும் ஆர்வத்தில் இளம்பெண்கள் கதவுகளைத் திறக்க கதவுகளின் உச்சியில் அமைந்துள்ள நிலையோடு பொருந்திய இணைப்புக் குமிழ் தேய்ந்தது என்கிறான் கவிஞன்.
“தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே ”  என்று மட்டும்  சொல்லி நிறுத்தவில்லை. அடுத்து வருகிற சில குறியீட்டுச் சொற்கள் நுட்பம் வாய்ந்தவை.
“ஆய்மலர் வண்டு உலா அங்கண்ணி”

சேரனின் மாலையில் தேர்ந்தெடுக்கப்பெற்ற மலர்கள்: மன்னனின்  மார்பை அலங்கரிக்கும் மலர்களல்லவா! வண்டுகள் உலாவும் மாலை.
ஆவலுடன் பார்க்கும் பெண்களுக்கு மலர்களை குறியீடாக்கினால் ஒரு பொருளும் வண்டுகளை குறியீடாக்கினால் எதிர்ப்பொருளும் வருவது அழகு.

தாயார் கதவுகளைச் சாத்துவதிலும் உட்காட்சி இருக்கிறது. அவர்களின் மனக் கதவுகளும் ஒரு காலத்தில் திறந்து மூடியவை தானே காதல் மாயையை கண்டுமயங்கும்  மகளை காக்கத் துடிப்பது நியாயந்தானே.

“கண்டுலா அம் வீதிக் கதவு” என பாடல் முடியும் அம் - என்பதை அழகிய என்றும் கொள்ளலாம். உ.வே.சா. உரைப்பது போல் அகம் என்றும் கொள்ளலாம்.

கதவு2
சேரன் மீது காதல் வயப்பட்ட பெண்ணை வீட்டுக்;குள் வைத்து கதவினை அடைத்தாள் அனிக் கதவம் அன்னை
சேரனையும் என்னையும் இணைத்து பேசும் வாய்களை அடைக்க அவனால் முடியுமோ எனக் கேட்கிறாள்தலைமகள்.
‘என்னை யவன்மே லெடுத்துரைப்பார்
வாயு மடைக்குமோ தான்”.
இதை அலர்நாணல் என மெய்ப்பாடு காண்பார் தொல்காப்பியர்

கதவு 3
சேர மன்னனைக் காண கதவருகே செல்கிறாள் அவள். ஆர்வத்தால் முன்சென்ற அவள் நாணத்தால் பின்வாங்குகிறாள்.

“காணிய சென்று கதவடைத்தேன் - நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு.
செல்வம் படைத்தவரிடம் பொருள் கேட்க செல்லும் வறுமையுற்றவர் போல... வரும் செல்லும் நெஞ்சம்.


கதவு 4
சேரனைக் காணச் செல்கிறாள் அவள்.

பனியின் மார்கழியில் அரண்மனைக் கதவருகில் குளிருக்கு இரண்டு கைகளாலும் போர்த்திக் கொண்டு நிற்கிறாள்.

வீட்டுக்கதவைத் தாண்டி வெளியே போய்விட்டாளே என்று ஆச்சரியப்பட்டால் கடைசி வரி அதை கலைத்து விடுகிறது.

கடைசி வரி ..... “காணிய சென்றவென் னெஞ்சு”
மனம்’ கிடந்து அலைந்து திரிகிறது. மன்னவனைப் பார்க்க....

“பொறி நுதல் வியர்த்தல்” என்று மெய்ப்பாடு கண்ட தொல்காப்பியர் ... இந்த பொறி மனம் சென்றலைதலை “மடன்” என்பார்.

 கதவு 5
     பாண்டிய மன்னனின் பகைவர்களிடம் சொல்லப்படுவதான பாடல்
“கண்ணார் கதவந் திறமின்...” உங்கள் கண்கவர் கதவுகளைத் திறந்து விடுங்கள் பகைவர்களே .. பாண்டியன் தான் பிறந்த இந்த நட்சத்திரத்தில் உங்களுடன் போர்புரிய வரமாட்டான் என்கிறது அந்தப்பாடல்.
கதவு 6
பகைவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் தும்பை மாலை அணிந்திருக்கும் பாண்டியனின் யானையின் ஒரு தந்தம் பகை மார்பை கிழிக்கும் மறுதந்தம் கோட்டைக் கதவை உடைக்கும்.

“பெருகோடு மாற்றார் மதில் திறக்குமால்”

கதவு 7
அன்னை காவல் நிறைந்த வீட்டில் வைத்து இரண்டு கதவுகளையும் அடைத்துவிட்டுச் சென்ற பிறகும் பாண்டியனின் காண முடிகிறது தாம் அவளுக்கு எப்படி அவள் நன்றி தெரிவிக்கிறாள். கதவில் சாவித்துளையை வைத்தவருக்கு..

நன்னலங் காண கதவந் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி.

பொன்னூறிய பசலை
      காதல் நினைவுகளால், பிரிவின் ஏக்கத்தால், ஆற்றா முடியாத ஆவலால், காதல் மகளிர் நலிவுற்று அழகுவாடி தளர்கின்ற, சோழை இழக்கின்ற “பசலையைத் தான் தமிழின் இலக்கியச் சாளரங்களில் நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால் இங்கு ஒரு இளம்பெண் கூறுகிறாள்.

மாமையிற் பன்னூறு கோடி பழுதோ என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு”

சேரன் உலாவை கண்ட பெண்கள் காதல் விரகத்தில் அயர்களது அழகை வேண்டுமானால் இழக்கலாம்.  ஆனால் அவர்கள் அடையும் “பசலை” யானது அழகைவிட பலநூறு கோடிப்பங்கு உயர்ந்தது “என்கிறாள் அதுவும் அப்பசலை பொன்ஊறித் ததும்பி மேனியில் பிரகாசிப்பது போல் இருக்கிறது.
இப்படியொரு பசலையை அநேகமாக இங்குமான் பார்க்கின்றோம்.

நவீன கவிதைப் பாணியில்
வினை ஒரு இடத்திலும் அதன் விளைவு ஒரு இடத்திலும் அழகுற அமைந்து தொடர்புகொண்டு பொருள் தருவது நவீன கவிதை வடிவத்தில் ஒன்று.

மகளை கரைசேர்த்த தந்தை முழுகிப்போனார்.
அவன் குடித்தான், குடும்பம் தள்ளாடியது.
அவன் பொட்டில் அடித்தான், அவன் மனைவி பூவை இழந்தாள்.
அவன் ரிக்ஷாவின் பெடலை மிதித்தான் குடும்பம் ஓடியது.

இந்த நவீன பாணியில் முத்தொள்ளாயிரத்தை பாடல் இருப்பது அதுதான் இப்போது நவீனமாகியிருக்கிறது என நமக்கு புரிய வைக்கிறது.

கிள்ளி வளவனின் யானை காலை எடுத்து வைத்தால், சங்கிலிப் பிணைப்பு மட்டும் விடுபடுவதில்லை. பகை மன்னர்களின் மான் போன்ற பார்வையினை உடைய மனைவியரின் மங்கலநாணும் அறுபட்டு விழுமாம்.
“புல்லாதார் – மானனையார் மங்கல நாண் அல்லவோ – தான
மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேற்கிள்ளி
புழைத்தடக்கை நால்வாய் பொருப்பு”
யானை சங்கிலியை அறுத்தால் - அங்கு
மங்கலநாண்கள் அறுபடுமாம்.

சுடும் பனிக்காற்று

இளம் மகளிரின் பசலைக்கும் தீராத் தாபத்திற்கும் குழலிசையும், இனிய பனிவாடையும் கூட காரணமாக இருக்கின்றன.

மண்ணுலகைக் காப்பதில் சிறந்தவனாகிய சோழன் மாலைப்பொழுதில் கோவலர்கள் இனிமையாக இசைக்கும் குழல் ஒலியால் துன்புறும் என்னைக் காக்க மாட்டானோ,

“காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்”
என்று வினவுகிறாள் ஒரு பெண்.

0 இன்னொரு பெண்ணோ “பேயோ பெருந்தண் பனிவாடாய்” என்று குளுமை வீசும் பனிவாடைக் காற்றைக் கேட்கிறாள். பிரிவில் நாங்கள் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து துன்புறுத்துவது நியாயமா? எனக் கேட்கிறாள்.

அத்திக்காய்  ஆலங்காய் வெண்ணிலவே பாடல்களுக்கெல்லாம் மூலாதார சுருதி முத்தொள்ளாயிரத்தில் அல்லவா. ஒலித்துக்கொண்டிருக்கிறது.
“அலமரல் அசைவளி அலைப்ப என் உயவு நோய் அறியாது துஞ்சும்
ஊர்க்கே” என்ற ஒளவையின் குறுந் தொகை பாடலையும் இது நினைவூட்டுகிறது.



புண்ணின் பெருமை
 வீரன் மார்பிலே புண்பட வேண்டும் என்கிறது புறநானூறு. புறமுதுகு காட்டி முதுகிலே புண்பட்டால் அதைப்போன்ற இழிவு வேறெதுவும் என்ற வீரவாழ்வு வாழ்ந்தான் தமிழன்.

ஆனால் முத்தொள்ளாயிரத்திலோ ஒரு உன்னதமான புண் பேசப்படுகிறது.
சோழனுக்கு திரை  செலுத்த வந்தவர்களில் மணிமுடிகள் அவர்கள் குனிந்து வணங்கிய போது அவனின் பாதங்களில் அழுத்தி அழுத்தி நேற்றைக்கு பலபேர் திரைசெலுத்த முடியாமல் போனது இன்றைக்கும் அப்படித்தான். ஆகவே பொறுத்திருந்து திரை செலுத்த மன்னர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மார்பு புண் வீரத்தின் பெருமிதம் என்றால் பாதப்புண் வெற்றியின் பெருமிதம் அல்லவா?
“முன்றந்த மன்னர் முடிதாக்க - இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி யிலனே”

கவிதை வலைக்குள் உவமை மீன்கள்

உலா வருகின்ற சோழனை சாளரங்கள் வழியாக காண்கிறார்கள் இளம்பெண்கள்.

சாளரத்தின் வெளியிலிருந்து அக்காட்சியைக் காணும்போது வலைகளில் சிக்கிக்கொண்ட கெண்டை மீன்களைப்போல் பெண்ணின் கண்கள் பிறழ்ந்து நகர்கின்றன.
“நீல வலையிற் கயல்போற் பிறமுமே
சாலேக வாயில் தொறுங் கண்”

இக்காலத்தில் ‘விழிமீனே தூண்டில் போடுதே’ என்று நவீன கவி கேட்பதற்கு இங்கல்லவா இருக்கிறது அடிப்படை.




விலங்குகள் காக்கும் வீரமரபு
0 பாண்டியன் மாறனுடைய களிறு தனது தந்தத்தை எழுது கோலாகவும் பகை மன்னர்களின் மார்பு பனை ஓலையாகவும் கொண்டு செல்வம் நிறைந்த இவ்வுலகம் எம்முடையது என எழுதிச் செல்லும்.


“உருத்தரு மார்போலை யாகத் - திருத்தக்க
வையக மெல்லா மெமாதன் றெமுதுமே”

மாறனை கண்டு மட்டுமல்ல ; மாறனின் யானைகளை கண்டே பகைவர்கள் பறந்தோடி விடுவார்கள் என யானையின் வீரம் சொல்லப்படுகிறது.

0 சோழனின் குதிரைகள் பகை மன்னர்களின் மார்பை உதைத்துத் தாக்கியதில் கீழே விழுந்த மணிமுடிகளையும் அணிகலன்களையும் காலால் மிதித்துக் கடந்ததால் அவற்றின் குளம்புகள் பொன் உரைத்த கல் போல விளங்குவதாக அமைகிறது என அழகிய காட்சியில் குதிரை வீரம் பதிவு செய்யப்படுகிறது.

“மன்னது முடியுதைத்து மார்பகத்து பூணுழக்கிப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு.

அகிற் புகையின் வளையங்களாய் கமழும் கனவுகள்

கன்னடத்தில் பழமையான நாகர்ஜுன மானஸ சரித படைப்பில் ஒரு கனவுக் காட்சி அகிற் புகையின் வளைங்களாய் தவழ்ந்தோடும்.

“அக்கா கேளுவா நானொந்து கனாச கண்டே
அக்கி அடுக்கி தெங்கின காயி கண்டே நோவா
மிக்கி மீறி போவேனோ வெம்பதி விளிதனு
சந்திர மல்லிகார்சுனரு கண்டே நோவா...”
என்று அந்த காதற்கன்னியின் கனவு தவழும்...

களியானை தென்னன் கனவின்வந் தென்னை
யளியா னளிப்பானே போன்றான்”

என்று முத்தொள்ளாயிர தலைவிக்கும் கனவில் தென்னன் பாண்டியன் வருகின்றான்.

யானைக்கும் மெய்ப்பாடு
அவள் சோழன் உலாவை லயித்து நின்று பார்க்கிறாள். அவனைச் சுமந்துசெல்லும் யானையின் மீது அவளுக்கு பொறாமை வருகிறது.
அது ஒரு பெண் யானை – பிடி
அவள் கேட்கிறாள். சோழ நாட்டு பெண் யானையே சேரன் எனும் அழகன், வீரன் உன்மேல் அமர்ந்திருந்திருக்கிறானே அவ்வுணர்வு சிறிதும் இன்றி சோழநாட்டு பெண்டிருக்கு உண்டான நாணம் சிறிதும் இன்றி சுமந்து செல்கிறாயே உனக்கு கூச்சம் இல்லையா எனக் கேட்கிறாள்.

நாணின்மை யின்றி நடத்தியால் - நீனிலங்
கண்டன்ன கொண்டல் வருங்கா விரிநாட்டு
பெண்டன்மை யில்லை பிடி.

0 பாண்டியனின் யானை கோட்டை மதிலின் மீது மோதி மதிலை சாய்த்ததில் மதில் அழிந்தது. அதனால் சிதைந்த தன்னுடைய உடைந்த தந்தத்தோடு பெண் யானையிடம் செல்ல நாணம் கொண்டு மணி முடி அணிந்த பகை மன்னர்களின் குடலால் தந்தந்தை மறைத்துக் கொண்டு செனறதாம்.

வெற்றிப் பெருமையை விட நாணமே யானைக்குப் பெரிதாய்ப் போய்விட்டது. காதலின் வலிமைதான் என்னே!
மன்னர் குடறால் மறைக்குமே செங்கனல்வேற்
றென்னவர் கோமான் களிறு”




தரைக்கு வந்த வானவில்

சோழனின் உறையூர் நகரில் மாலைப்பொழுதில் பூக்களை விலை கூறி விற்பவர்கள் கிள்ளி எடுத்துப் போட்ட பூவின் இதழ்கள் வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன.

காலையே
விற்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை யகம்

காலையில் தரைகளில் வானவிற்கள் தோன்றிக் கிடப்பதை போல இருந்து என்று அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

0 இந்தக் காட்;சியை அப்படியே பாண்டிய மன்னனுக்கு கொண்டு செல்கிறது மற்றொரு பாடல்....

பூமிப்பரப்பெங்கும் ஆட்சி செய்யும் மன்னர்கள் தங்கள் தலையில் சூடியிருக்கிய பூக்கள் வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்திருக்கும் பாண்டியன்p மாறனின் காலடியில் குவிந்து கிடக்கும் என்கிறது அப்பாடல்...

“முடிமன்னா சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப்படும்”...

நாராய் நாராய் ....

தமிழில் நாரை பிரபலமானது. ஒரே பாடலில் புகழ்பெற்றார் சத்திமுத்தப்புலவர்.
“பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவள கூர்வாய்”
அழகில் மெய்மறந்து போயிருக்கிறோம் நாம்.
இங்கும் ஒரு நாரை தூது விடப்படுகிறது.

“செங்கான் மட நாராய்” யைப் பார்த்து தூது சொல்கிறாள் அவள். மருதநிலத்தின் இருபுறங்களிலும் கரைகளில் மீன்கள் எதிர் ஏறிவரும் காவிரிநாட்டு சோழனுக்கு என்னுடைய காதல் நோயை எடுத்துக் கூறு என்கிறாள்.

“காவிரி நீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய்”
நாரையிடம் சொல்லும்போது எவ்வளவு கவனமாய் மீன்களை நினைவுபடுத்துகிறாள்  பாருங்கள்.

“யாருமில்லை தானே கள்வன்” எனத் தொடங்கும் குறுந்தொகைப்
பாடலில் “தினைத் தாள் அன்ன சிறு பசுங்கால குருகும் உண்டு ஞான் மணந்த ஞான்றே” என்று தங்களின் காந்தர்வ மனத்திற்கு நாரையை சாட்சி வைப்பாள் தலைவி.. இங்கு தலைவி தூது அளவிலேயே நாரையை வைக்கிறாள். கவனமான தலைவிதான்.


அலர் நாணம்
அவள் வைகை ஆற்றின் குளிர்ந்த நீரில் நீராடினால் இவள் பாண்டியன் மேல்கொண்ட காதலால்தான் இவ்வாறு மகிழ்ந்து நீராடுகிறாள் என்பார்கள். நீராடாமல் இருந்தால் கொண்ட காதலை மறைக்க முயற்சிக்கிறாள் என்று கூறுவார்கள். இவை எல்லாமே துன்பத்தை தருகின்றன என்று கூறுகிறாள்.

“ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றியிருந்தாள் எனவுரைப்பார்”

ஊடலின் சந்தனச் சேறு
மதுரைச் தெருக்களில் மாளிகையின் மேல் மடத்தில் இருந்து இரவுப் பொழுதில் தங்கள் கணவர்களோடு ஊடல் கொண்டு உதிர்த்து விட்ட குளுமையான சந்தனமும் குங்குமமும் தெருவெல்லாம் நிறைந்திருக்க நடந்த செல்வார்க்கு தடுமாற்றம் ஏற்படுகிறது.

மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழுக்கி”

குதிரை வணக்கம்
காதல் தலைவன் கால்வரும் திசை கூட மகளிர்க்கு இன்பம் தருவதாகும். காதல் தலைவனை நினைவூட்டக்கூடிய அல்லது அவனுக்கு தொடர்புடைய அனைத்துமே அவளுக்கு வணங்கத் தக்கதாக இருக்கிறது.

அதனால்தான் அவள் சோழன் உலா வரும்போது சோழனை அல்ல அவனது குதிரையைப் பார்த்தே பரவசமடைந்து காதலால் கசிகிறாள். உணர்ச்சிப் பெருக்கால் கலங்கி நிற்கிறாள்.

ஆனால் தோழியிடமோ தூசியினால் கண் கலங்கிற்று என்பர்.

“பொங்கும் படைபரப்ப மீதெழுந்த பூந்துகள் சேர்ந்
தெங்கன் கடலுழ்ந்தனவால் என்று”

அன்னையின் உன்னதம், அன்னையின் பேதமை
தோழியிடம் சொல்கிறாள் அவள். தோழி, பாண்டியனிடம் என்னைப் பற்றியோ என் ஊரைப் பற்றியோ சொல்லவேண்டாம். உன் நினைவால் கண்துயிலாமல் இருக்கிறாள் என்பதை மட்டும் சொல். அவள் இன்னொன்றும் சொல்கிறாள்.
“நம் அன்னை இப்படிப்பட்டவள்” என்றும் சொல்ல வேண்டாம் அன்னை எப்படிப்பட்டவள் எத்தகைய நடப்பும் குணமும் வாய்ந்தவள் என்ற அடிப்படையில் அவள்தம் மகளை, மக்களை மதிப்பிடும் வழக்கம் அப்போது இருந்திருக்கிறது என்பதை இது சுட்டுகிறது.
 
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், தாயைப் போலப் பிள்ளை போன்வற்றிற்கு அடிப்படை வேர் புரிகிறது.

0 அதே அன்னையின் பேதமையை இன்னொரு தலைமகள் குறிப்பிடுகிறாள். அவளின் நெஞ்சமோ ஒரு பறவையாய் கூட்டைவிட்டு வெளியேறி பாண்டியனைக் கூடி இன்புற எண்ணி சென்றுவிட்டது அதனையறியாத தாய், பறவை வெளியே சென்றறியாமல் வெறுங்கூட்டினை காவல் காக்கும் வேடன்போல் உயிரற்ற என் உடம்பை வீட்டுக்குள் வைத்து பாதுகாக்கிறாள் - என்கிறாள்.

தன் உடம்பை உயிரற்ற வெறுங்கூடு என்றும் உயிர்ப்பறவை மன்னனை நோக்கி சென்றுவிட்டது என்றும் சொல்வதற்கு ஒரு யோகி நிலை வேண்டும் அது முத்தொள்ளாயிரத் தலைவிக்கு வாய்த்திருக்கிறது.

கண் திறந்தால் காட்சி மறைந்துவிடும்
  கம்பனின் சீதை தான் கண்களுக்கு மை தீட்டாத காரணத்தை தோழி நீலமணியிடம் சொல்வாள். கண்ணுக்குள் இராமன் இருக்கிறான் அவன் இருக்கும்
கண்ணுக்குள் கறுப்பை ப+சலாமா !.. அதனால்தான் நான் கண்ணுக்கு மை எழுதவில்லை என்பாள்

இங்கு முத்தொள்ளாயிரத்தில் இரு கைகளாலும் கண்களை மூடிக் கொண்டாள் ஒரு தலைவி  பாண்டியன் என் கண்களுக்குள் புகுந்த விட்டான்.என் உயிர் பிரிந்தாலும் கண்களை மூடிய கைகளை எடுத்து அவனை வெளியே விடமாட்டேன் என்கிறாள் அவள்.
“ஆவி களையினும் என் கை திறந்து காட்டேன் “

அழகியலும் வீரமும்
இலக்கியங்களில் பெரும்பாலும் சொல்லப்படும் வீரத்தின் விளைவுகள் என்ன?
இரத்த நதியில் மிதக்கும் உடலங்கள் .. மனித அன்பின் கல்லறைகள் மீது
அடுக்கி கட்டிய வெற்றிக்கோட்டைகள் ..கொம்புகளின் முழக்கத்தினை தோற்கடிக்கும் உயிர் பிரியும் ஓலங்கள் …
அவற்றை  அழகியல் காட்சியாகத்தான் காண வேண்டுமா ?.நம் மனது இதை ஒப்புவதில்லை ஏனெனில் அடிப்படை மனித தர்மம் அவற்றில் இல்லை.  தமிழ் வீரத்தை அழகியலில்தான் சேர்க்கிறது..வடமொழி மரபும் ருத்ரத்தை ரசங்களில் ஒன்றாகத்தான் குறிக்கிறது.
குவிந்திருக்கும் மண்டை ஓடுகளும் குடல்களில் விளக்கெரிக்கும் பேய்களும் ஊளையிடும் நரிகளும் நிறைந்திருக்கிற முத்தொள்ளாயிரம் நம்மை அழகியல் ரசனைக்குத்தான் இட்டுச் செல்கிறதா ?
யுhனைகள் மன்னர் மார்புகளை கிழிப்பதும் குதிரையின் குளம்புகள் மணிமுடிகளை உதைத்து பொன்னுரைக்கும் கல்லாக மாறிப்போவதும் அழகுதானா? அழகியலுக்குரியதுதானா ?
பூக்களை எரித்து விட்டு அவர்கள் எந்த சாம்பலில் ஒப்பனை செய்து கொண்டார்கள்.
இப்படி,  பொதுவாக போரின் வெற்றிகளை சொல்லுகிற இலக்கியங்களில் அவ்வளவாக எளிதில் காணக்கிடைக்காத ஒரு பாடல் அதுவும் ஒரே ஒரு ஒற்றை வரி.... வீரத்தை அழகியலில் வைத்திருப்பதன் உண்மைப்பொருளை வெளிப்படுத்துகிறது இம் முத்தொள்ளாயிரத்தில்……

அக்காட்சி… கண்களை  உருட்டி முறைத்தபடி ,கீழ் உதட்டைக்   கடித்து  மடித்த வாயுடன் எய்யும்படி கையில் பிடித்த வேலுடன் ஆண் யானையையே படுக்கையாகக் கொண்டு தம் மண்ணை விட்டுக்கொடுக்காமல் இறந்து கிடக்கும்   பகை மன்னனைப் பார்த்து தம் கையில் வெற்றிக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு நின்றான் பாண்டியன்.
 எப்படி நின்றான் என்று முத்தொள்ளாயிரக் கவிஞன் கூறுகிறான் தெரியுமா…
கொடித்தலைத்தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான்”
பரணிகளையெல்லாம்  புரட்டிப்போடும் வரிகளல்லவா இவை.
ஒற்றை வரியில்... அழகியல் காட்டும் வீரம் என்பது மானுடத்தை காத்தல்
மன்னுயிர் காத்தல் என்ற பொருளிலேதான் அமைகிறதே தவிர அழித்தலில் அல்ல ஆதிக்க வெறியை நிலை நாட்டல் அல்ல என்பதை முத்தொள்ளாயிரக் கவிஞன் நிறுவிச்செல்கிறான்.
வெற்றியைப்போல் அது பொய் முகம் காட்டினாலும் அவலத்தால் அது தோல்வி என்றான்.இரண்டு தரப்பினருமே வீரத்தை காத்தலுக்கே தர வேண்டும் என்பதே அழகியல் வீரம்’.




முத்தொள்ளாயிரத்தை முன்வைத்து  ஒரு உரையாடல்…

 ஆக, நண்பர்களே ...சில குறுக்கு வெட்டு உரையாடல்களோடு உரையை நிறைவு செய்ய எண்ணுகிறேன்....

1)  முத்தொள்ளாயிரம் ஒரு தொள்ளாயிரமோ மூன்று தொள்ளாயிரமோ கிடைத்திருப்பவை மிகக்குறைவான பாடல்களே .  இருக்கின்ற பாடல்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக மூவேந்தர்களை மட்டுமே பேசுவதால் மற்றவை மறைக்கப்பாட்டு இவை மட்டும் பொறுக்கி எடுத்து தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

2)  பெண்கள் முழுவதும் தாயார்களால் வீட்டுக்குள் வைத்து அடைக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.  சதாகாலமும் மன்னன் மீதான காம இச்சையில் உழல்பவர்களாக இருக்கிறார்கள்.  உண்மையில் அக்காலப் பெண்கள் அப்படியா இருந்திருப்பார்கள்?  (காதலும் களவும் இங்கு பேசப்படவில்லை).

3)  “வினையே ஆடவருக்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என்று சங்கப் பாடல் பேசினாலும்… “அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ” என்று எழுச்சிகரமான பெண்சமத்துவத்தை பெண்விடுதலையை குறுந்தொகை 63ல் உகாய்க்குடி கிழார் ஆரம்பித்து வைக்கிறார்.   ஆனால் அநேகமாக அதற்குப் பின்னால் எழுதப்பட்டிருக்கும் இதில் பெண் காம மடமைக்குள் தள்ளப்படுகிறாள்.

மன்னனைப் பார்த்த மாத்திரத்தில் குடத்து விளக்காய் இருந்து காமம் மலையுச்சி விளக்காய் மாறிவிட்டது, ஏறிவிட்டது என்று பேசப்படும்போது (பாடல்கள் 122) பெண்மையை முத்தொள்ளாயிரம் கொச்சைப்படுத்தவும் செய்திருக்கிறது என நாம் துணிய வேண்டியிருக்கிறது.

4)  எந்தவித தத்துவார்த்தப் பின்புலமும் இன்றி வாழ்க்கையை உய்விக்கும் உன்னதப் பதிவுகள் இன்றி அதீதப் புனைவுகளாக ஒரே மாதிரியான வார்ப்பில் எழுதப்பட்டிருக்கிறது முத்தொள்ளாயிரம்.

5)  என்றாலும் புனைவுகளின் ஊடாக அடுக்கடுக்காய் அகக் காட்சிகளில் கசிந்து பரவுகிற படைப்புச்சுவையின் வசீகரம் நம்மை முத்தொள்ளாயிரத்தை வாசிக்கச் செய்கிறது. வணக்கம் .
                                         
                                               ...............................................................................................

                                            

Sunday 26 October 2014

இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி

இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன்.

'எளவட்ட முறுக்கிலே எவளோடயாவது போறவன்... கம்மாக்கரை, கிணத்தடி, படப்படிப் பக்கம் போயிறுங்க. தப்பி நடந்தா... காளி கண்ணைக் கெடுத்திடும்’ என்பார்கள். மற்றபடி பகம் பூராவும் வெட்டுச் சீட்டு, ரம்மி, தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் நடக்கும். தென்புறம் இருளாண்டித் தேவர் படுத்திருந்தார். அவர் தலைமாட்டில் கந்தையாத் தேவர். வட ஓரம் ஏழு பேர் ரம்மி, ஏழு பேரில் இருளாண்டித் தேவர் மகன், மகள் புருஷன், கந்தையாத் தேவர் மகன், தம்பி மகன் ஆடிக் கொண்டிருந்தார்கள். மேலப்புறம் வெட்டுச் சீட்டு, கிழக்கே பத்ரகாளி பார்வையில் தாயக் கட்டம். இருளாண்டித் தேவரின் கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம். எல்லோரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு சொந்தம். தகப்பன், மகன், மாமன், மச்சினன்.
சீட்டுப் பிடிக்க கை பழகாத சின்னப் பயலுகளுக்கு நிறைகுளத்தம்மன் கோயில் ஆலமரத்தில் காக்கா குஞ்சு விளையாட்டு. ஊர்க் கிணறுகள் அத்தனையும் குட்டப்புழுதி ஆகிவிடும். குதியாட்டம்தான்.
இருளாண்டித் தேவரின் இடதுகை மடங்கி தலைமாட்டில் பாந்தப்பட்டிருந்தது. இரண்டு தொடை இடுக்கிலும் வலது கையைக் கொடுத்திருந்தார். தொடை இடுக்கில் கிடந்த தழும்புகள் மேடு தட்டிக் கிடந்தன. கவுல்பட்டியில் ஆடு திருடப்போய் பிடிபட்டு பெருநாழி போலீஸார் கம்பியைக் காய வைத்து இழுத்தத் தழும்பு.
பெருநாழிக்கு மேற்கே நாலாவது மைலில் கவுல்பட்டி. தெலுங்கு பேசுகிற ரெட்டிமார் ஊரு. வண்ணான் குடிமகனைத் தவிர்த்து எல்லோரும் ரெட்டிமார்கள் தான். சம்சாரிகளுக்கான எல்லாக் கோப்புகளும் உள்ள ஊர். வீட்டு வீட்டுக்கு உழவு மாடு. கிடை கிடையாக ஆடு, ஊரைச் சுற்றி பெரும்பெரும் படப்புகள். வாய் அகன்ற மண்பானை போல் ஊரணி. மாட்டுக்கும் மனுசருக்கும் அதுதான் குடிதண்ணீர். யாரும் கால், முகம் கழுவக் கூடாது. கட்டு செட்டான ஊர். களவுக்கு இடங்கொடுக்காத ஊர்.
பத்து பேர் எதிர்த்து வந்தாலும் அடித்து விரட்டுகிற வீரன் இருளாண்டித்தேவர். அன்றைக்குக் கவுல்பட்டி களவுக்குப் போனவர்களில் யாரும் குறைந்த ஆளில்லை. முருகேசத் தேவர், ஒத்தையிலே நின்னு ஊரையே அடிக்கிற தாட்டியன். அதே மாதிரி கந்தையாத் தேவர், நாகுத்தேவர், கருப்பையாத் தேவர், முத்துத்தேவர், சுந்தரத்தேவர், குருசாமித் தேவர் எல்லாரும் வீரவான்கள். இத்தனை பேரும் கம்பு கட்டி நின்றால் எந்தப்படையும் பின்வாங்கும்.
அன்றைக்குச் சாமத்துக்கு மேலே எல்லாரும் கிளம்பி வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள். பின் நிலாக் காலம். ராத்திரி ஒரு மணிக்கு மேலே தான் நிலா கிளம்பும்.
ஆலமரம். பாறையில் வேர்ப்பிடித்து உச்சியில் நின்றது. ஆலமரத்துப் பட்சி உத்தரவு கொடுத்தால்தான் களவுக்குக் கிளம்புவது வழக்கம். ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தால் நல்ல சகுனம். போகிற இடத்தில் ஆபத்தில்லை. இடமிருந்து வலம் ஆகாது. வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். எல்லோர் கையிலும் வேல் கம்பு. கனத்த செருப்பு, கருப்புப் போர்வை, குத்துக்காலிட்டு காத்திருந்தார்கள். வெகுநேரம் கழித்து ‘கீச்ச்....’ என்ற சத்தத்தோடு ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தது.
இருளாண்டித் தேவர் எழுந்தார்.
“வைரவன் உத்தரவு கொடுத்துட்டாரு ஒரு குறையும் வராது. எல்லாரும் கெளம்புங்க”. கிளம்பினார்கள், பத்துப் பேருக்கு மேல் இருக்கும். நிலா கிளம்பி விட்டது. நாலு மைலும் வண்டிப்பாதை. ரெண்டு பக்கமும் முள்ளுக்காடு. இருளாண்டித்தேவர் முன்னால் போனார். பேச்சும் சிரிப்புமாக நடந்தார்கள்.
வனாந்தரம். இருட்டு. யாராவது கொஞ்சம் பலத்து பேசினாலோ, சிரித்தாலோ இருளாண்டித்தேவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

இடையிலே ரெண்டுமூணு ஓடைக்காடு. முழங்காலுக்கு வண்டல் இறக்கியது. செருப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடைகளைக் கடந்தார்கள்.
மணிப்பத்தா ஓடையைத் தாண்டி பத்து எட்டு நடந்திருப்பார்கள். வண்டிப்பாதையின் இந்தத் தடத்துக்கும் அந்தத் தடத்துக்கும் சரியாக ஒரு பாம்பு புழுதியைக் குடித்துக்கொண்டு படுத்திருந்தது. தொடைக்கனம். முன்னே போன இருளாண்டித்தேவர் ரெண்டு எட்டு இடைவெளியில் பாம்பைப் பார்த்துவிட்டு நின்றார். நாகம் தலை தூக்கிச் சீறுமுன், வேல்கம்பால் தலையில் ஒரு குத்துக் குத்தி முள்வேலிக்குள் தூக்கி எறிந்துவிட்டு நடந்தார். கவுல்பட்டி ஊரணிக்கரையைச் சுற்றி பெரும் பெரும் புளிய மரங்க்ள் பேயாய் நின்றன. நிலா வெளிச்சத்தில் ஊரணி புளியமரங்கள் தட்டுப்பட்ட உடனே இருளாண்டித்தேவர் உதட்டில் விரல் வைத்து ‘உஸ்... உஸ்...’ என்று எச்சரித்தார். செருப்புச் சத்தம் கேட்காதபடி பொத்தி பொத்தி நடந்து முன்னேறினார்கள். ஊர்க்கிட்டே அண்ட முடியாது. வீட்டு வீட்டுக்கு நாய் கெடக்கும். ராஜபாளையத்துக்கோம்பை நாய்கள். துரத்திப் பிடித்தால் தொடைக் கறியை தோண்டி எடுத்துவிடும்.

குளிருக்குக் குன்னிப் படுத்திருக்கும் அனாதைக் கிழவி மாதிரி ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரை தெற்கே விட்டு, ஊரணிக்கு வடக்காக நடந்தார்கள். ஆட்டுக்கிடை ஊருக்கு வெளியே மந்தைக் காடுகளில்தான் கெடக்கும்.
“யோவ்.... குருசாமித் தேவரே.... எட்டி நடங்க...”
ஊரணிக்கு வடக்கே நாலு புஞ்சை கடப்புக்கு ஆட்டுச் சத்தம் கேட்டது.
இருளாண்டித்தேவர் வலது கையை லாத்தி காட்டினார். எல்லோரும் வடக்காக எட்டி நடந்தார்கள்.
சுந்தரத்தேவருக்கு இருமல் முட்டியது. நெஞ்சுக்குள் அமுக்கினார்.
“கந்தையாத்தேவரே.... செருப்பு சத்தம்....”
கந்தையாத் தேவர் பொதுமலாய் நடந்தார்...
எல்லா ஆடுகளும் படுத்துக்கிடந்தன. ஒரு ஆடு ‘புர்ர்ர்ர்.... ர்....ர்...’ எனத் தும்மியது. தென்கோடியில் ஒரு கயிற்றுக்கட்டில். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெரியாமல் போர்த்திக்கொண்டு கிடைக்காரன் படுத்திருந்தான். கட்டிலில் ஒரு வேல்கம்பு சாத்தி இருந்தது. கட்டிலுக்கடியில் நாய். சுருட்டிப்படுத்திருந்தது.
‘நேய் படுத்திருக்கு.”
அடுத்த புஞ்சைப் பொழியில் எல்லாஅரும் பதுங்கி உட்கார்ந்தார்கள். வேல் கம்புகளைக் கிடத்தி விட்டு போர்வைகளை இறுக்கிப் போர்த்தினார்கள். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டார்கள்.
”தெற்கயும் மேற்கயும் யாரும் போகாதீங்க. வடக்க பாதிப்பேரும் கிழக்கப் பாதிப்பேரும் போகணும். சுருக்கா முடியணும்.”
வேல்கம்பை கையில் எடுத்துக் கொண்டார்கள். இருளாண்டித் தேவரோடு சேர்ந்து பாதிப்பேர் கிழக்கேயும், முருகேசத் தேவரோடு பாதிப்பேர் வடக்கேயும் பிரிந்தார்கள்.
பச்சைப் பனை ஓலையைக் கிழித்ததுபோல் குட்டி ஆடுகள் சிணுங்கின. சின்னச் சின்ன சத்தங்களோடு ஆடுகள் கிடந்தன. கிடைக்காரனும், நாயும் அசையவில்லை. நல்ல தூக்கம். நிலா வெளிச்சத்தில் ஆடுகளின் நிறம் தெரியும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள். சுந்தரத்தேவர் மறுபடியும் இருமலை நெஞ்சுக்குள் அமுக்கினார்.
’புர்ர்...ர்...ர்’ என்று ஒரு ஆடு தும்மியது. பத்தடி நெருக்கத்திலேயே நின்று அவரவருக்குத் தகுதியான ஆடுகளை இனம் குறித்தார்கள். கிடாயாக இருந்தால் கறி நல்லா இருக்கும். பெருத்த கிடாயாக இருந்தால் தோளில் போட்டுக் கொண்டு நாலு மைல் தூரம் ஓட வேண்டும். இருளாண்டித் தேவரின் சைகைக்காக காத்திருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்த கிடைக்காரன் புரண்டு படுத்தான். நாய் அசையவில்லை. கிழக்கே இருந்து இருளாண்டித் தேவர் துண்டை வீசினார்.
அவரவர் குறித்து வைத்திருந்த கிடாய்களை நெருங்கி இடது கையால் வாயை இறுக்கிப் பிடித்தார்கள். வலது கையால் குரல்வளையை ‘கடக்’ என நெறித்து ஒதுக்கி விட்டார்கள். கிடாய்கள் கால்களை உதறிய சத்தந்தான் லேசாய் கேட்டது. கத்த முடியவில்லை. கைக்கு இரண்டு கால்களைப் பிடித்துத் தூக்கி, துண்டைப் போர்த்துவதைப் போல் தோளில் போட்டார்கள்.
கிடைக்காரனுக்கும், நாய்க்கும் நல்ல தூக்கம். இடது கையால் ஆட்டுக் கால்களையும் வலது கையில் வேல் கம்பையும் பிடித்துக் கொண்டு ‘லொங்கு... லொங்கு’ என ஓடக் கிளம்பினார்கள். மூன்றாவது புஞ்சைப் பொழியைக் கடந்தால்தான் வண்டிப்பாதை. முருகேசத் தேவர் முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். தோளில் கிடந்த ஆட்டின் சூடு, இந்தக் குளிர்ந்த நேரத்தில் எல்லோருக்கும் இதமாக இருந்தது. வண்டிப்பாதைக்கு வந்து விட்டார்கள். யாரும் வாய் திறக்கவில்லை. ஓட்டம் குறைந்து ’ஓட்டமும் நடையு’மாகப் போனார்கள்.
முத்துத்தேவரின் கழுத்தில் கிடந்த கிடாயின் குரல்வளை சரியாக நெறிபடவில்லை

‘ம்மே... ம்மேய்... ம்மேம்...’ என்று கத்தக் கிளம்பி விட்டது. முத்துத்தேவரின் பிடி தவறியது. கிடாய் துள்ளவும் பிடியை விட்டு விட்டார்.
கீழே குதித்த கிடாய், ‘ம்  மே... மே... மேம்... ய்..’ என்று கத்தித் தீர்த்து விட்டது.
முத்துத்தேவர் சுதாரித்து, கிடாயின் குரல்வளையை கடித்துத் துப்பினார். கிடாய் சத்தம் நின்றது.
‘லொள்... லொள்... லொள்...’
இராஜபாளையத்தைக் கோம்பை கிளம்பி விட்டது. கிடை ஆடுகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன.  கிடைகாரன் போர்வையைச் சுருட்டி வீசிவிட்டு வேல் கம்பை கையில் எடுத்துக் கொண்டு ஊரைப் பார்த்துக் கத்தினான்.
“ஏய்..... கள்ளன்... கள்ளன்.... ஓடியாங்க...”
இருளாண்டித் தேவரோடு சேர்ந்து எல்லோரும் வண்டிப்பாதையில் கெதியாய் ஓடினார்கள். முத்துத்தேவர் கடைசியாக வந்தார். வாயில் ஆட்டு ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. முதல் புஞ்சைப் பொழியை நாய் தாண்டி விட்டது. ஊர் எழுந்து கொண்டது.
ஹூ...ஹூவெனக் கூச்சல்.
சுந்தரத் தேவருக்கு மூச்சு இரைத்தது. எல்லோரும் வேல் கம்பு இருந்த வலது கையில் செருப்பைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள்.
மணிப்பத்தா ஓடை வண்டலுக்குள் சதக்.. பொதக்.. என மிதித்து வெளியேறி ஓடினார்கள். நாய் ஒரு புஞ்சைக் கடப்பில் வந்து கொண்டிருந்தது. ஊர்ச்சனங்கள் கம்புகளோடும் ஆயுதங்களோடும் வண்டிப் பாதையில் ‘திமு திமு’ என ஓடி வந்தனர்.
‘வேய் ரா.... வேய் ரா...”
நாய், வண்டலைக் கண்டதும் மலைத்து நின்று குரைத்தது. ஓடையின் தென்கரையில் கொஞ்ச தூரம் ஓடியது. வண்டல் மாறி தண்ணீர் தட்டுப்பட்டது. பாய்ந்து நீந்தி வடகரையில் ஏறிக் கிழக்கே வண்டிப் பாதையில் விரட்டி ஓடியது.
அதற்குள் முருகேசத் தேவர் கூட்டத்தினர் எட்டிப் போய்  விட்டார்கள். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம்தான் இவர்களுக்குக் குறி. கெதியாக ஓடினால் ஒன்னுக்கு இருக்கும் நேரம்தான். எல்லையைத் தொட்டு விடலாம். அப்புறம் வெளியூரான் நெருங்க மாட்டான்.
நாய், நாலுகால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. கவுல்பட்டிச் சனம் மணிப்பத்தா ஓடையைக் கடந்து விட்டது.
“வேய் ரா..... வேய் ரா....”
களவாணிப் பயலுகளை ஒரு தடவை ஊருக்குள் விட்டுவிட்டால் அப்புறம் ஒண்ணும் மிஞ்சாது. மனுஷன் குடியிருக்க நீதி இல்லாமல் போயிரும். இதுவரைக்கும் அக்கம்பக்கத்திலே, அடுத்த ஊரு மூணாவது ஊருலேதான் களவுபோனது. கவுல்பட்டிக்குக் களவாணிப்பயலுக வந்தது இதுதான் முதல் தடவை. அவிழ்ந்த தலைமயிரைக் கூட அள்ளி முடியாமல் பெண்கள் சேலையை ஏத்திச் செருகிக் கொண்டு ஓடி வந்தார்கள்.
“வேய்  ரா... வேய்   ரா...”
கடைசியாகப் போய்க் கொண்டிருந்த முத்துத்தேவரை நாய் எட்டிக் கவ்வியது. வேட்டி பிடிபட்டது. முத்துத்தேவர் செருப்பை ஓங்கி நாயின் வாயில் அடித்தார். வேட்டியை விட்டுவிட்டது. போர்வையைக் கவ்வியது. பிடறியில் கிடந்த கிடாயை கீழே போட்டார். செருப்புக்களையும் கீழே போட்டார். போர்வையை உதறி விட்டார். வேல் கம்பு மட்டும் கையில் இருந்தது. நாய், நெஞ்சில் குதறியது. இடது கையால் நாயின் மூஞ்சியில் அடித்தார், வேல் கம்பை ஓங்கினார். வலது மணிக்கட்டை கவ்விக் கொண்டது. திமிர முடியவில்லை. வேல் கம்பு நழுவியது. இடது கையால் நாயின் மேல் வாயைப் பிடித்து, வாய்க்குள் மாட்டி இருந்த வலது கையை கீழே அமுக்கினார். நாய், பக்கத்து முள் வேலியில் விழுந்தது. குனிந்து வேல் கம்பை எடுப்பதற்குள் நாய் முதுகில் பாய்ந்தது. கீழே சாய்ந்தார்.
முன்னால் போனவர்கள் வெகு தூரம் போய்விட்டார்கள். பின்னால் ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது.
“வேய் ரா... வேய் ரா....”
நிலா வெளிச்சத்தில் சனம் வருவது தெரிந்தது.
நாயைப் புரட்டினார். கால் நகத்தால் உடம்பைப் பிறாண்டியது. நாயோடு முள் வேலியில் புரண்டார். பாளம் பாளமாய் முள் குத்திக் கிழித்தது. மறு புரட்டில் வண்டிப் பாதைக்கு வந்தார். மேலே கிடந்த நாயின் வாயெல்லாம் ரத்தம் ஒழுகியது. இரண்டு கைகளையும் நாயின் வாய்க்குள் கொடுத்துக் கிழித்தார்.
பலமான சத்தத்தோடு நாய் மல்லாக்க சரிந்தது. முத்துத் தேவரின் வாய், கை, உடம்பெல்லாம் ரத்தம்.
”வேய் ரா... வேய் ரா...”
சனம் நெருங்கிக் கொண்டிருந்தது.
முத்துத்தேவர் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டினார். போர்வையைக் காயங்களின் மேலே போர்த்திக் கொண்டார். கிடாயைத் தூக்கி தோளில் போட்டு, வேல் கம்பு, செருப்புகளை வலது கையில் எடுத்துக் கொண்டு கெதியாய் ஓடினார். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம் நெருங்கித் தெரிந்தது.
மறுநாள், பெருநாழி போலீஸ் நிலையத்தில் கவுல்பட்டி கிராமமே வந்து நின்றது.
முதல்நாள் ராத்திரி களவுக்குப் போனவங்க, போகாதவங்க எல்லா ஆம்பளைகளுக்கும், போலீஸார் கம்பியைக் காய வைத்து துடிக்கத் துடிக்க, கதறக்கதற சூடு போட்டார்கள். கன்னத்திலே, தொடையிலே, கையிலே, கழுத்திலே, வயிற்றிலே, முதுகிலே என்று பலமாதிரி சூடு. அன்றைக்கு இழுத்த சூடுதான், இருளாண்டித் தேவரின் தொடை இடுக்கில் தழும்பேறிக் கிடந்தது.
இருளாண்டித் தேவர் புரண்டு படுத்தபோது, கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த நாகுத் தேவரின் இடுப்பில் கால் பட்டுவிட்டது.
“நல்லா மிதிங்க மச்சான்.”
நாகுத் தேவர் நக்கலாய்ச் சிரித்தார்.
“எங்கிட்ட மிதி வாங்கணும்னா முன் ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருக்கணும் மாப்ளேய்...”
இருளாண்டித் தேவர் உதட்டோரம் சிரித்தபடி கால்களை ஒடுக்கி மறுபடியும் தலை சாய்த்துக் கொண்டார்.
ரம்மி ஆட்டத்தில் ஜோக்கர் வெட்டியதில் தகராறு. தாயக் கட்டத்தில் ஒருநாய் வெட்டுப்பட்ட சந்தோஷம். சிரிப்பும் கேலியுமாய்ச் சத்தம்.
கிழக்கே இருந்து முருகேசத் தேவர் வந்தார்.
“ஏய்ய்... நம்ம மூத்தவர்மகன் சேது வந்திருக்குதாம்...”
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். சீட்டாட்டம், ஆடு புலி, வெட்டுச் சீட்டு, தாயக்கட்டம் எல்லாவற்றையும் கலைத்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த இருளாண்டித் தேவரையும் கந்தையாத் தேவரையும் எழுப்பினார்கள்.
எல்லோரும் கிளம்பி மூத்தவர் வீட்டுக்கு நடந்தார்கள்.
சேது, கால், முகம் கழுவி துடைத்துவிட்டு அப்பாவுடைய போட்டோவுக்கு முன்னால் நின்றான். அய்யாவின் நெற்றியில் குங்குமம் இட்டிருந்தது. உச்சிநத்தம் காசிநாதன்செட்டி வீட்டில் கன்னம் போட்டு களவாடப் போனபோது அந்த ஊர்ச் சனங்களோடு நடந்த சண்டையில் வெட்டுப்பட்டு அய்யா இறந்து போனார். சேதுவுக்கு அருகில் அம்மா நின்றது. படத்தில் இருந்த கணவரையும் பக்கத்தில் நின்ற மகனையும் மாறி மாறிப்பார்த்து அம்மா அழுதது. சேதுவுக்குக் கண்கலங்கிப் பார்வையை மறைத்தது. வீட்டு வாசலில் ஆள் அரவாட்டம் தெரிந்ததும் சேது திரும்பி வாசலைப் பார்த்தான்.
“மருமகனே”.. கூட்டத்துக்கு முன்னால் முருகேசத் தேவர் நின்றார். சேது வாசலுக்கு வந்தான்.
“கும்பிடுறேன் மாமா.. கும்பிடுறேன் சின்னய்யா.. கும்பிடுறேன் மச்சான்.. வாங்க எல்லாரும் வாங்க...”
கண்டதும் சேது, கையெடுத்துக் கும்பிட்டதில் எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியலே.
“எப்போ வந்தீங்கப்பூ...?”
”இப்போதான் மாமா.”
அம்மா திண்ணையில் பாய்களை விரித்தது. எல்லோரும் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள்.
“டூட்டி ஒப்புக்கொண்டுட்டீங்களா?” - நாகுத்தேவரின் கன்னத்தில் தழும்பு கிடந்தது.
“நாளைக்குப் போயி ஜாய்ன்ட் பண்றேன் மாமா.”
”எங்கே டூட்டி?” - குருசாமித் தேவரின் வலது கையில் தழும்பு இருந்தது.
“பழனி பக்கத்திலே மடத்தாகுளம் போலீஸ் ஸ்டேசன்லே”
“சப்-இன்ஸ்பெக்டருதானே?” - கந்தையாத் தேவருக்குப் பிடறியில் தழும்பு.
“ஆமாம், சின்னய்யா, ஒரு வருசம் ட்ரெயினிங் முடிஞ்சு... முதல் போஸ்டிங்”
திண்ணையின் மூலையில், ஓரத்தில் உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் எம்பி எம்பி சேதுவைப் பார்த்தார்கள்.
‘உடுப்பு போட லாயக்கான ஆளு.’ எல்லோருக்கும் பெருமை தாங்கலே.
“உங்க அண்ணனை எங்கே காணோம்?”
“எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கெடைச்சா.. இருளப்ப சாமிக்குக் கிடாவெட்டி பொங்கல் வைக்கணும்னு அம்மா நேர்த்திக் கடன் வச்சதாம். அதுக்கு ஒரு கிடாக் குட்டி வெலைக்கு வாங்க அண்ணன் வெளியே போனாரு.”
முருகேசத் தேவர் கன்னத்தில் கிடந்த தழும்பைத் தடவிக்கொண்டே “என்னது..! கிடாக்குட்டியை வெலைக்கு வாங்கப்போனாரா? பைத்தியக்காரப் பிள்ளைக. நம்ம வீட்டுப் பிள்ளைக்கு சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கெடச்சிருக்கு. நம்ம சனமெல்லாம் சேர்ந்து கொண்டாட வேண்டாமா? நம்ம குலதெய்வம் இருளப்பனுக்கு நாளைக் காலையிலே ஒரு கிடாய் இல்லே.. இருபத்தியோரு கிடாய் வெட்டுப்படுது.” என்றவர் திண்ணையில் இருந்த எல்லோரையும் பார்த்து “ஏய்...ய்... வீட்டு வீட்டுக்கு ஒரு கிடாயைப் பிடிச்சுக் கொண்டு வந்து இங்கே கட்டுங்கடா” என்று உத்தரவிட்டார்.
“எதுக்கு மாமா.. வேண்டாம்...” சேது மருகி மருகி எல்லோரையும் பார்த்தான்.
“கள்ள ஆடு இல்லே மருமகனே.. எல்லாம் நம்ம சொந்த ஆடு.”
சேதுவின் கண்களில் குபுக் என நீர் அடைத்தது. காலமெல்லாம் காயம் பட்ட சனங்கள்.
“தம்பி சேதூ... இந்தப் பயலுகளுக்கு ஒரு ஆசை...”
“என்ன மாமா சொல்லுங்க”
“நீங்க சப்-இன்ஸ்பெக்ட்டர் உடுப்பு மாட்டிக்கிட்டு வந்து, கொஞ்ச நேரம் எங்க எல்லாரோடயும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும்.”
முருகேசத் தேவரின் கைகளைச் சேது பிடித்துக் கொண்டான்.
“இதோ வர்றேன் மாமா.” வீட்டிற்குள் போனான். எல்லோரும் உள்வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் சேது சப்-இன்ஸ்பெக்டர் உடுப்போடு திண்ணைக்கு வந்தான். எல்லோரும் பதறியெழுந்து, தோளில் கிடந்த துண்டைக் கையில் எடுத்தபடி திண்ணையைவிட்டு இறங்கிக் கீழே நின்றார்கள்
*******

Sunday 7 September 2014

வனம்மாள் - அழகிய பெரியவன்

     0   சிறுகதை 
  
 சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள்.
சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுடAlakiyaperiyavan ன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து ஆடும் கருஞ்சுவாலைக் கூட்டம்போல தூரத்தில் ஊசிமலை அவளுக்குத் தென்பட்டது.

வயோதிகத்தின் நியதிகளைத் தட்டாமல் ஏற்றிருந்த சாலம்மாளின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது. முந்தானையைச் சுருட்டித் தலைச்சும்மாடாகவும், முக்காடாகவும் மாற்றிக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே பேசியபடியும் போய்க்கொண்டிருந்தாள் அவள். இரண்டு மூன்று குடங்கள் சுமந்து வந்ததற்குள் களைத்து ஒரு மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டாள்.

வெப்பக் காற்று மாந்தளிர்களில் பட்டு தணிந்து வீசியது. கருகும் தளிர்களின் வாசம்போல மாம்பூக்களின் வாசம் மெல்லக் காற்றிலே பரவி அடங்கியது. அவளைப் போலவே பக்கத்துத் துண்டுகளிலும் சிலர் மாஞ்செடிகள் வைத்திருந்தனர். சிலர் அப்படியே தரிசாகவிட்டு வைத்திருந்தனர்.

ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். அப்போது சாலம்மாளுக்கு நல்ல புத்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த ஊரிலும், சுத்துப்பட்டிலும் இருக்கிற வானம்பார்த்த பூமி கொண்ட ஏழை விவசாயிகள் சிலருக்கு இயேசுகாரர்கள் இலவசமாகவே மாங்கன்றுகளைத் தருவதாகக் கேள்விப்பட்டாள். உடனே முந்திக்கொண்டாள் சாலம்மாள். அவளுக்கிருந்த கையளவு நிலத்துக்கு அவர்கள் கொடுத்த சில செடிகளே போதுமானதாக இருந்தன. கிடைத்த மாஞ்செடிகள் எல்லாமுமே மெங்களூரா, நீலம் வகைகளாகவே இருந்துவிட்டதால் சாலம்மாளின் மனசு கேட்கவில்லை. மேல் ஆலத்தூர் அரசாங்கப் பண்ணை வரை போய் காதர், பீத்தர், பங்கனப்பள்ளி, மல்கோவா என்று வகைக்கொன்றாகவும், சிலவற்றை வாங்கி வந்து வைத்தாள். செடிகளின் ஒட்டு பிரிந்துவிடாமல் தொட்டிகளை கவனமாக உடைத்து, பச்சைப்பிள்ளைகளை கையாள்வது போல நட்டு, குளம் குட்டை என்று விடாமல் அலைந்து நீர் ஊற்றினாள் சாலம்மாள். 

புதிய இடத்தில் பொருந்தாமல் இருப்பவர்களைப் போல இருந்த செடிகள் பச்சை பிடித்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது. மரஞ்செடிகள் என்றாலே சாலம்மாவுக்கு உயிர்தான். கையில் கிடைப்பதையெல்லாம் கொண்டு வந்து வைத்து அவள் வீட்டை நந்தவனமாக்கியிருந்தாள். கொத்திக் கொண்டும், நீர்வார்த்துக்கொண்டும், சருகுகளை அள்ளிக்கொண்டும் இருப்பது தான் அவள் வேலை. பூத்துக் குலுங்கும் அவள் தோட்டத்துப் பூக்கள் ஊர்ப்பெண்டுகளின் தலைகளிலெல்லாம் சிரிக்கும். அவள் தோட்டத்துக் காய் கனிகளுக்கே தனி ருசிதான் என்று சொல்வார்கள்.

“மரம், மரமின்னு பைத்தியமா கீறாளே! காட்டுலேர்ந்து எறங்கிவந்துட்டாளா!”

“புள்ளைங்க, திக்குதெச இல்லாததுக்கு எதுமேலியாவது ஆச இருக்க வேண்டியதுதான். ஆனாலும் இப்பிடியா?”

“நம்ம வேலூர் பக்கமா யாரோ ஒருத்தரு வீட்டு மரங்களுக்கு பத்திரிக்க அடிச்சி கல்யாணம் செஞ்சிவெச்சாராமே. அப்பிடி இவுளும் செய்வாளோ எனுமோ?” ஊரார் பேசிக்கொள்வதும் உண்டு.

சாலம்மாளின் மரப்பிரியத்தை எவராலும் புலங்காண முடிந்ததில்லை. ஊரிலிருக்கும் அத்தனை மரங்களும் அவளுக்குத் தாய்மடிதான். தினமும் ஒன்றின் நிழலிலாவது செத்த நேரம் ஒக்காந்து மனக்குறைகளைத்தானே புலம்பியபடி இருப்பது வாடிக்கையாயிருந்தது சாலம்மாளுக்கு.
காற்றும் மழையுமாக இயற்கை ஒருமுறை சாடிவிட்டுப் போய்விட்ட போது வானத்தைப் பார்த்து நெட்டி முறிப்பதும், மழையைச் சபிப்பதுமாக இருந்தாள் சாலம்மாள். கொய்யாவின் இளங்கிளையையும், முருங்கையையும் பேய்க்காற்று பதம் பார்த்துவிட்டுச் சென்றிருந்தது. முறிந்த கிளைகளைச் சேர்த்து செம்மண் துணி சுற்றிவிட்டாள் சாலம்மாள். சிரித்துவிட்டுப் போனவர்களையெல்லாம் சட்டை செய்யவில்லை அவள். இப்படித்தான் போன மாதம் கிராம அபிவிருத்தித் திட்டம் ஒன்று அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தது. ஊர்முச்சையருகே கிளை விரித்திருந்த அரசமரத்தையும், ஊர் எல்லையிலிருக்கும் நாகமரத்தையும் படிப்பகம் கட்டவும், நீரேற்று அறை, தொலைக்காட்சிப் பெட்டி அறை கட்டவும் வெட்டிவிடுவது என்று தீர்மானமாகிவிட்டது. சாலம்மாளுக்கு இது தெரியவந்ததும் ஆங்காரியாகிவிட்டாள். மரத்தின்மீது முதல் வெட்டு விழுந்தபோது தலைவிரி கோலமாய் குறுக்கே மறித்து விழுந்தாள் சாலம்மாள். ஓடிவந்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது.
“டேய் நாங்க அக்கா தங்கச்சிங்க தங்கியிருக்கண்டா இதுல..எங்களெ ஓட்டப்பாக்குறவன் எவன்டா?”
“தாயே பொறுக்கணும். நீ யாரு?”
“நாகலம்மா, பூவுலம்மா, எல்லம்மாடா எங்க இருப்பிடன்டா இது. நாங்க எடுத்து அடி வெக்கிறது எல்ல நாகமரம்டா. நாங்க இருக்கிற மரங்களெ வெட்டி எங்கள ஓட்டப்பாத்தா ஊரையே துவம்சம் பண்ணிடுவம்டா”
கத்திகளும், வாள்களும் கீழே விழுந்துவிட்டன. மரங்களை வெட்டுவதில்லை என்று பதில் பெற்றவுடன் மலையேறிவிட்டது சாமி. மரங்களைக் காப்பாற்றின அன்றெல்லாம் சாலம்மாள் அரசமரத்தடியிலேயேதான் கிடந்தாள். சாலம்மாள் தனிக்கட்டை. பிள்ளையில்லாததால் புருஷன் துரத்திவிட வாழாமல் வந்து ஊரோடு தங்கிவிட்டவள். நாதி என்றிருந்த ஒரே அண்ணனும் வேலை, வாழ்க்கை என்று ஊரைவிட்டுப் போய்விட்டான். கிராமத்து வீடும் கொஞ்சம் மேட்டுநிலமும் அவள் பாடு என்றாகிவிட்டது. யாரும் கண்டுகொள்ளாத அந்த மேட்டு நிலத்தில் வலு இருக்கும்வரை விழுந்து எழுவது என்று அல்லாடி வந்தாள். சும்மாடைப் பிரித்து முகம் துடைத்துக்கொண்டாள் சாலம்மாள். நேற்றுதான் நட்ட மாதிரி இருக்கிறது. அதற்குள் வளர்ந்துவிட்டன. பூவெடுத்திருக்கும் கவைகளை உடைத்துவிட வேண்டும். காப்புக்கு விட இன்னும் கொஞ்சம் போகட்டும் என நினைத்துக்கொண்டாள். கானலின் ஊடாக சுழன்ற அவள் பார்வை கிழக்காக இருந்த வெற்றிடத்தில் நிலைகுத்தித் தவித்தது. அங்கிருந்த கானலும், வெம்மையும் அப்படியே பெயர்ந்து அவள் மனதுக்குள் வந்து இறங்கியது. பழசை நினைத்துக்கொள்ள கண்கள் மடைதிறந்துகொண்டன.

கேட்க நாதியில்லை என்பதால் ஊரிலே சாலம்மாள் என்றாளே இளக்காரந்தான். நடுத்தெரு இடைச்சி ரங்கமணிக்கும், அவள் மச்சினன்மார்களுக்கும் ரொம்பவுமே கிண்டல்தான். ஒருநாள் விறகு பொறுக்கிக்கொண்டு தன் நிலத்தின் வழியே வந்த ரங்கமணி மாவிலைகளைப் பிய்த்து கசக்குவதைப் பார்த்துவிட்டாள் சாலம்மாள். வேர் கிளம்பிவிடுமே என்று பதைபதைத்து திட்டித் தீர்த்துவிட்டாள் ரங்கமணியை. கன்றுகளை வைத்து கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. 

மறுநாள் சாலம்மாள் நிலத்துக்குப் போனபோது பாதி மாஞ்செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பதை பார்த்தாள். தன் கழுத்தை யாரோ அறுத்திவிட்டது போல வலித்தது வலித்தது அவளுக்கு. “ அய்யோ எம் புள்ளிங்களே! என் செல்லங்க போச்சே” வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, வீழ்ந்திருக்கும் செடிகளை ஓடிஓடி எடுத்து அழுதாள் சாலம்மாள். சாலம்மாளின் பக்கத்து நிலம் ரங்கமணியுடையது. இவளின் நிலம்மீது ஒரு கண் ரங்கமணிக்கு இருந்தே வந்தது. “சின்னதுக்குத்தான் சின்னங் கொலையறதுன்ற மாதிரி ஆயிடுச்சே. அய்யோ எங் கொறையே. வேர் கெளம்பிடுமே, ஏண்டி இப்படி செய்யறன்னதுக்கேவா இப்படி பன்னிர்றது? ஒஞ் சாதித்திமிர எஞ் செடிங்க மேலியா காட்டறது?” ஊர்ப் பஞ்சாயத்துக்குப் பிராது கொடுத்துவிட்டு அன்று முழுவதும் இழவு வீட்டுக்காரி மாதிரி இருந்தாள் சாலம்மாள். “மரங்களுக்குப் போய் இப்படி மாரடிக்கிறாளே” என்று சொல்லிக் கொண்டனர் ஊரார். பொழுது அமர கூடிய பஞ்சாயத்தில் வெட்டியது யார் எனத் தெரியாமல் பேச முடியாது என்று தீர்ப்பு வந்தது. இவரிவர்கள்தான் வெட்டியிருப்பார்கள். தாட்டிமமான, அரக்கி அரக்கி நடந்திருக்கும் காலாடித் தடங்கள் ரங்கமணியினுடையதுதான் என்று சாலம்மாள் சொன்னதை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.
அவுக்கென்றாகிவிட்டது சாலம்மாளுக்கு, மனசு ஆறாமல் மறுநாள் காலம்பரமே மாஞ்செடிகள் தந்த இயேசுக்கார அய்யா வீட்டுக்குப் போய் ஒப்பாரி வைத்தாள் சாலம்மாள்.
”நீ இப்படி அழவேண்டியதே இல்ல, வேற செடிகளுக்கு ஏற்பாடு பண்ணுவேன்” என்றதும் வேகமாய்த் தலையசைத்தாள் சாலம்மாள்.
வெட்டினவங்களுக்கு நீ தண்டென வாங்கித் தரணும் சாமீ, பாதி புள்ளைங்க களுத்த அறுத்துப்புட்டாங்களே”
“சரி நீ போயி போலீசுல சொல்லு. நான் பின்னாடியே வரேன்”
இயேசுக்கார அய்யா சொன்னதும் காவல் நிலையம் போய்விட்டாள் சாலம்மாள்.
“மரம் வெட்டின கேசெல்லாம் இங்க எடுத்துக்கறதில்ல பாட்டி” என்ற பதிலெல்லாம் அவளை அசரச் செய்யவில்லை. பகலுக்கும் காவல் நிலைய வாசலிலேயே மூக்குச் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.
“சரி உன்னெ அடிச்சுப்புட்டு, மரத்தெ வெட்டிப்புட்டாங்கன்னு ஒரு மனு எழுதினு வா”
மனுகொடுத்தபிறகு காவல் நிலையத்துக்கும், இயேசுக்கார அய்யா வீட்டுக்கும் என நடந்தபடியே இருந்தாள். வழக்கு பதிவாகி முதல் சம்மன் வந்தபோதுதான் அவளுக்கு மனது ஆறியது. “என்னாதான் காலங்கெட்டுக் கெடந்தாலும் நியாயஞ் செத்துப் போகுமா? இருங்கடி இருங்க. துன்னத் துடிக்க எஞ்செடிகளெ வெட்டந்துக்கு இன்னிக்கு இருக்குது உங்குளுக்கு”
சம்மன் வந்த நாளெல்லாம் கோர்ட்டு வாசலில் தவம் கிடந்தாள். ஆனால் அவள் நினைத்தபடியெல்லாம் எதுவுமே நடக்காமல் அவளுக்கு ஏமாற்றமாய்ப் போனது.
ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே, “தப்பு தப்புத்தான்னு சொல்லிப்புட இந்த மனுசங்களுக்கு இத்தினி தயக்கமா?” என புலம்பிக் கொண்டே அண்ணன் மகன் தம்பிதுரை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள் சாலம்மாள்.
அவள் அண்ணன் போனபிறகு அவளுக்கென்று இருந்த ஒரே ஆதரவு தம்பிதுரைதான், அவன் தூரத்தில் இருந்தாலும் மாதத்துக்கு ஒருகால் பஸ் பிடித்துப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவாள் அவள். அவனின் எல்லா பிள்ளைகளையும் மார்மேல்போட்டு சாலம்மாள் தான் வளர்த்துவிட்டாள். அதிலும் சின்னவள் சிவப்பி என்றால் சாலம்மாளுக்கு கொள்ளை ஆசை. தம்பிதுரை அரசாங்க வழக்கறிஞரைப் போய்ப் பார்க்கச் சொன்னான். மறுநாளே விசாரித்துக் கொண்டு வழக்கறிஞரிடம் போய்ச் சேர்ந்தவள், ஒப்பாரியும், முறையிடலுமாக நெளியவைத்ததுவிட்டாள் அவரை.

“ஏம்பாட்டி, தேக்கு மரத்தெ வெட்டிட்டாப்பில ஏன் அழற? மரந்தானெ பாக்கலாம் வுடு”
“அய்யா அதுங்க மரம் இல்லய்யா, என் வயித்துல பொறந்த பொறப்புங்க மாதிரி, அந்தக் கொலகாரப் பாவிகளுக்கு நீதான் தீர்ப்புச் சொல்லணும்”
வாய்தாவுக்கு வாய்தா சாலம்மாளின் ஒப்பாரி அதிகமாகிக் கொண்டே போனது. இனிமேல் அலுவலகம் பக்கம் வந்தால் கேசை தோற்கடித்துவிடுவேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் வழக்கறிஞர்.

பிராது கொடுத்து மறுநாளே ரங்கமணியின் கூட்டாளிகளுக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று நினைத்தவளுக்கு இன்னும் எதுவுமே நடக்காதது அதிர்ச்சியாய் இருந்தது. நடையாய் நடந்து யார் யாரையோ பார்த்துவிட்டாள். எத்தனையோ வாய்தாக்களுக்கும் போய்விட்டாள். வேறு செடிகளுக்காக இயேசுக்கார அய்யாவை பலமுறை சென்று பார்த்ததிலும் ஒன்றும் நடக்கவில்லை. சாலம்மாள் ஓய்ந்துவிட்டாள்.
செங்கம்புதரிலிருந்து காடை ஒன்று ‘புர்’ என பறந்து போனதும்தான் சாலம்மாளுக்கு நினைவு திரும்பியது. வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. காற்றில் சலசலக்கும் மாஞ்செடிகளைப் பார்த்தபோது அவளுக்கு ஆயாசமெல்லாம் மறைந்துபோனது. மிச்சமிருக்கும் மரங்களைப் பராமரிப்பதும், தண்ணீர் விடுவதும், நெட்டி முறிப்பதும், அவைகளுடன் பேசுவதுமாக இத்தனை நாட்களை கழித்துவிட்டாள். வயல் வரப்புகளிலும், தண்ணீர் தொரவுகளிலும் ரங்கமணியைப் பார்த்துக்கொள்ளும்படி நேர்ந்துவிடும்போதெல்லாம் அவளின் ஏளனச் சிரிப்பில் சருகுகள் மிதிபடுவதுபோல் ஆகிவிடும் சாலம்மாளுக்கு. அதைத் தவிர்க்கவும் இந்த மோட்டாங்காடே கதியென்றும் ஆகிவிட்டது அவளுக்கு. அடுத்த வருடம் மகசூலுக்கு விடும்படி மரங்கள் ஆகிவிட்டிருப்பது சாலம்மாளுக்கு சந்தோஷத்தைத் தந்தது. நாளைக்குத்தான் கடைசி வாய்தா. தீர்ப்பு வந்துவிடும் என்று வக்கீல் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்து மேலும் சந்தோஷம் தந்தது. முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு குடத்தைத் தூக்கியபடி, வீட்டுக்குப் போகும் சரிவில் இறங்கினாள் சாலம்மாள்.

கோர்ட்டு வாசலில் பூவெடுத்துக் குலுங்கும் மாமரத்தின் கிழே சாலம்மாள் உட்கார்ந்திருந்தாள். வெய்யில், குட்டிகளைக் கவ்வும் பூனையென பாரித்திருந்தது. சாலம்மாளின் தேகக் கூட்டினுள் இருந்த இதயம் சிறு பிராயத்துப் பிள்ளையென ஓடியாடிக்கொண்டிருந்தது. மாமரத்தின் குதியாட்டத்தைக் கண்டதும் அடிவயிற்றில் நீர்கழித்துப் புரள்வது போல அவளுள் பொருமல் எழுந்தது. அந்த மரத்தை அவள் கைகள் வாஞ்சையுடன் தடவி நெகிழ்ந்தன. கண்களில் நீர் ஊற்றெடுத்து சொட்டிவிடத் திரண்டு தயங்கியது.

கோர்ட்டுக் கட்டிடம், மனிதர்களின் புழக்கத்துடன் களை கட்டியிருந்தது. வக்கீல்களும், காவலர்களும், மக்களும் ஓடியாடிக் கொண்டிருந்தனர். ரங்கமணியும் அவள் மச்சினன்மார்களும் தூரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததை சாலம்மாள் பார்த்தாள். அவர்கள் பேசிச் சிரிப்பது தன்னைப் பற்றித்தான் என நினைத்துக்கொண்டாள் சாலம்மாள். கோபம் அவளின் வறண்ட திரேகத்துள் பரவியது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தன்னுடைய நடுவயது முதல் இந்த நாள் வரையிலாக கோர்ட்டு வாசலிலேயே தவம் கிடந்துவிட்டது போல் எண்ணி மலைத்துக் கொண்டாள். சாலம்மாளுக்கு என்று வானத்திலிருந்து கூப்பிடும் குரல் போல டவாலியின் அழைப்பு அப்போது கேட்டது. உள்ளே ஓடினாள் சாலம்மாள். நீதிபதி பேசினார். “மரங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வெட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவை புதிதாக நடப்பட்டிருந்த மாஞ்செடிகள் என்பதனால் வேர் பிடிக்காமலும் செத்திருக்கலாம்”.
அதைக் கேட்டதும் சாலம்மாளிடம் பேச்சில்லை. அவளின் குரல்வளை உள்ளிழுத்து கேவலின் அவல ஒலி கேட்டது.
“அதுங்க செடிங்க இல்லய்யா. எம்புள்ளைங்க. இந்த கொட்டி* நம்பியிருந்தது அதுங்களைத்தான்யா”
பைத்தியமாய் பிதற்றியபடி கோர்ட்டு வாசல் மாமரத்தின் அடியிலேயே இருந்தாள். அவமானமும், கோபமும், துக்கமுமாக இருந்தது அவளுக்கு. அந்தச் செடிகளுக்காக எத்தனை நடை, எத்தனை படியேறல், எத்தனை முறையிடல்... வயிறு பற்றிக் கொண்டது.
ஒருபாவமும் அறியாத பாலகனுங்க. என்ன பண்ணுச்சிங்க அதுங்களெ வெட்ட? அதுங்களுக்கு வாயிருந்தா என்னா பேசியிருக்குங்க. வீட்டுக்கு வந்தும் கூட சோறு பொங்காமல் நடுராத்திரி வரை ஒப்பாரி வைத்து சன்னமாகப் பாடி அழுதுகொண்டிருந்தாள்.
காலையில் எழுந்த கையோடு அடுக்களைப் பானைகளைத் தூர எடுத்து வைத்துவிட்டு பிரிமனைகளை நகர்த்தினாள். அடியில் புதைந்திருக்கும் உண்டியல்களைத் தோண்டி எடுத்தாள். ஐந்து உண்டியல்களும் நிரம்பியும் நிரம்பாமலும் இருந்தது. எல்லாவற்றையும் போட்டு உடைத்து காசுகளைச் சேர்த்தால் சாலம்மாள். மூட்டையாக முந்தானையில் முடிந்துகொண்டபோது பாரத்தினால் அவள் உடலே கீழ்நோக்கி குஞ்சியது. நேராய் பக்கத்து ஊர்ப் பண்ணைக்கு விறுவிறுவென்று நடந்தாள். மாங்கன்றுகளுக்கு சொல்லிவிட்டு தன் நிலத்திற்குத் திரும்பினாள்.

சுள்ளென்று உறைப்பதற்குள் பத்துப் பதினைந்து குழிகளை தோண்டிவிட்டாள் அவள். மண் ஆவியடித்து வாசம் கிளம்பியது. திடீரென சாலம்மாளுக்கு பேத்தி சிவப்பியின் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு வருசமும் கோடை விடுமுறையில் சிவப்பி சாலம்மாவுடன் வந்து இருந்து போவாள். கூலி நாழி என்று வருசமெல்லாம் சேர்த்த பணத்தில் சிவப்பி போகும்போது, துணிமணி என்று ஆனதை செய்து அனுப்புவாள் சாலம்மாள். இந்த வருசம் உண்டியல்களை உடைத்து மாஞ்செடிகளுக்கு சொல்லிவிட்டது சாலம்மாளுக்கு மனம் பாரமாய் இருந்தது.
“ராசாத்தி புள்ளெ வந்து ஏமாறுமே”
ஆற்றாமையோடு தோப்பைப் பார்த்தாள் சாலம்மாள். சிலுசிலுவென்று காற்றுக்கு துளிர்கள் ஆடிக்கொண்டிருந்தன.
“போட்டும், இந்த ஒரு வருசம். பொறகால எம்புள்ளிங்க நீங்களே பாத்துகுக மாட்டீங்களா ராசாத்தியெ”
மாமரங்கள் காற்றுக்கு மேலும் குலுங்கின. அவள் பேச்சை கேட்டபடியே குழிந்து கொண்டிருந்தது மண்.

மகாகவி பாரதியின் இரண்டு கடிதங்கள்

தம்பி விசுவநாதனுக்கு கடிதம்
புதுச்சேரி, 3 ஆகஸ்டு, 1918
ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனாimages (1)ல் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப்  பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அது முதல் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு வார்த்தைகூட எழுதாமலிருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்தமான பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன். தம்பியுள்ளோன் படைக்கஞ்சான் என்ற வாக்கியத்தின் உண்மையை உன் விஷயத்தில் நம்பியிருக்கலாமென்றே நம்புகிறேன்.

எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிர்தத்திலே காயிதம் எழுது. திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் 'விநாயகர் ஸ்தோத்திரம்' (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும் அவர் 'பாஞ்சாலி சபதம்' அச்சிடும் சம்பந்தமாகப் பணம் சேகரித்துப் பட்டணத்துக் கனுப்புவதாகச் சொன்னார். அங்ஙனம் அனுப்ப முடியுமானால் உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக்கனுப்பும்படி ஏற்பாடு செய்.

அது மாத்திரமேயன்றி, 'விநாயர் ஸ்தோத்திரம்' வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு. உடம்பையெண்ணிப் பயப்படாதே. அடிக்கடி பால் குடி. ஜலத்தை எப்போதும் காய்ச்சிக் குடி. வேறு எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதே. பொறுமையாலும் பயமின்மையாலும் இவ்வுலகத்தில் மனிதன் தேவத்தன்மை அடைகிறான். அந்நிலைமை உனக்கு மஹாசக்தி அருள் செய்க.

உனதன்புள்ள ஸஹோதரன், 
சி.சுப்பிரமணிய பாரதி
மனைவிக்குக் கடிதம்
ஓம்
ஸ்ரீ காசி 
ஹநுமந்த கட்டம்
எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.
உனதன்பன் 
சி.சுப்பிரமணிய பாரதி

Saturday 6 September 2014

நா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை




நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருக்கும் முகவுரை -
(“பூ“ திரைப்படக் கதாசிரியரும் இவரே என்பது ஒரு கூடுதல் தகவல்)
--------------------------------------------------------
எங்கெங்கோ அழைத்துச்செல்லும் கட்டுரைகள்
       கவிஞர் தோழர் நா.முத்துநிலவனின் இக்கட்டுரைத்தொகுப்பை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தொகுக்கப்படும்போதுதான் எழுதியவருக்கு (தனக்கே) ஓர் அடையாளம் கிடைக்கும்.இந்தப் பதினாறு கட்டுரைகளும் தமிழ் இலக்கிய உலகில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற  சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே நடந்து செல்வதால் 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டாக ஒரு முக்கியத்துவம் இத்தொகுப்பிற்குக் கிடைக்கிறது.
ஒரு பெண்ணை அவள் பெண் என்பதாலேயே இச்சமூகம் அவளை நடத்தும் விதமும்  அதில் உறைந்திருக்கும் பாலியல் வன்முறையும் ஆணாதிக்க உளவியலும் இன்றைய தமிழ்ப் பெண்கவிகளின்   கவிதை வரிகளில் எங்கனம் தெறித்து வருகின்றன என்பதை இன்றைய தமிழில் பெண் கவிகள் என்கிற கட்டுரையில் தொகுக்கிறார்.தன்னுடைய கருத்தை துறுத்தலாக முன் வைக்காமல் கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து தன்னுடைய பார்வையை இடையியையே வைத்துச்செல்கிறார். ஆணாய்ப்பிறப்பது இயற்கை தரும் லாட்டரிப்பரிசு  என்கிற நிர்மலா சுரேஷ் வரிகளைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து அதுவும்மேல்சாதி ஆணாய்ப் பிறப்பது பம்பர் பரிசு’ என்பதை அவர் சொல்லவில்லை ,நாமாகப் புரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று தன் கருத்தைப் பதிவு செய்யும் விதம் ரசமாக இருக்கிறது.
        புதுக்கவிதையின் வரவு செலவுக்கணக்கைப் பார்க்கும் அடுத்த கட்டுரை உண்மையிலேயே என்னைப் பழைய காலத்துக்கு இழுத்துச்சென்றது.புதுக்கவிதைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அன்று நடந்த விவாதங்களைத் தொகுத்துத்தரும் இக்கட்டுரை வல்லிக்கண்ணன் இல்லையே என்கிற குறையைத் தீர்க்கிறது.அன்றைய சில கவிதைத் திருட்டுகளையும்கூட இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.நமது முற்போக்குக் கவிஞர்கள் குறித்து முத்துநிலவன் கொள்ளும் நம்பிக்கையும் பெருமிதமும் எனக்கு இல்லை.அவர்களின் ஊக்கமும் நோக்கமும் பாராட்டும்படி இருப்பதுபோல் கவிதைகள் இன்னும் வந்துசேரவில்லை என்பது என் கருத்தாக இருக்கிறது.
         சங்க இலக்கியமும் தமிழ்ச்சமூக வரலாறும் குறித்துப் பேசும் கட்டுரை ஓர் அரிய வகைக்கட்டுரை.சங்கப்பரிச்சயமும் ஆழ்ந்த வாசிப்பும் இல்லாத வாசகர்களுக்கு எளிமையாக ஓர் அறிமுகத்தைச் செய்கிற கட்டுரை இது.சங்க காலத்து மக்கள் நிலை என்னவாக இருந்த்து என்பதைப் பேசும் கட்டுரையின் இறுதிப்பகுதி முக்கியமானது. மேலாண்மை பொன்னுச்சாமியின் “கொலை“ சிறுகதையை முன் வைத்து அவர் நட்த்தும் கருத்துப்போர், ஒரு சக படைப்பாளிக்குக் கேடயமாக நிற்கும் ஆவேசமான வாதங்களின் தொகுப்பாக அமைகிறது. அகல ஆசையில் ஆழத்துக்கு முக்கியத்துவம் தராத அவரின் பிற்காலக் கதைகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துச் செல்கிறது இக்கட்டுரை.
       இத்தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரை க.நா.சு.வை தெனாலிராமனா படிப்பாளியா என்று கேள்வி கேட்கும் கட்டுரை. க.நா.சு.  பிறநெது நூற்றாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்ட பின்னணியில் இக்கட்டுரை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.மொழிபெயர்ப்பில் தமிழுக்கு கநாசு அளித்துள்ள  கொடைகளையும் அவரது சோதனைப் படைப்பு முயற்சிகளையும் அங்கீகரிப்பதில் துவங்கி ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவான அவரது கருத்துவரை எல்லாவற்றையும் பதிவு செய்ததோடு இக்கட்டுரை சுபமங்களாவில் வந்தபோது எழுந்த எதிரும்புதிருமான எதிர்வினைகளையும் நேர்மையுடன் பிற்சேர்க்கையாக இணைத்திருப்பது பாராட்ட்த்தக்கது.
        இதே தரத்துடன் வந்துள்ள இன்னொரு கட்டுரை ஜெயகாந்தன் பற்றியது.தமிழ் இலக்கிய உலகின் ஆகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தனை அவருக்கு உரிய மரியாதை அளித்து பிந்திய ஜெயகாந்தனின் சறுக்கல்களைப் பட்டியலிடுகிறார்.முனியம்மாவும் ராசாத்தியும் அம்மாசியுமாக இருந்த அவரது நாயக நாயகிகள் கங்காவும் சாரதா மாமியும் கௌதம சித்தார்த்தனுமாக மாறிப்போன கதையை ஆவணப்படுத்தியுள்ளார்.விமர்சன்ங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக  ஜெயகாந்தன் நம்மை ஆகர்ஷிக்கிறார் இன்றும் என்று எனக்குச் சொல்லத்தோன்றுகிறது.
         கம்பனையும் கார்ல் மார்க்சையும் எதிர்ப்பில் விளைந்த கனிகள் என்கிர புள்ளியில் வைத்து ஒப்பிட்டுப்பேசும் கட்டுரை புதிய அணுகுமுறையோடு இருப்பதோடு அன்றைய நாட்களில் கம்பனை உயர்த்திப்பிடித்த ஜீவாவின் குரலை நினைவுபடுத்துவதாகவும் எதிரொலிப்பதாகவும் அமைந்துள்ளது.
         இன்னும் தொடர்கின்ற வலைத்தளக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு விவாதப்புள்ளியை ஆழமாகத் தொட்டுச்செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.சிறு சிறு செய்யுள்களாகத்துவங்கிய தமிழ்க்கவிதை பெருமன்னர்கள் எழுந்தபோது விரிந்து சென்றதையும் காலத்தை மீறி எழுந்த சித்தர்களையும் தேராமன்னா என்று வெகுண்டெழுந்த பெண் குரலாக்க் கண்ணகியைக் குறிப்பிடுவதும் நான்கு குறட்பாக்களில்  ஆய்த எழுத்தை வள்ளுவன் ஏன் பயன்படுத்தினான் என விரிவாகப் பேசுவதும் இலக்கியத்தில் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு குறித்து மனம் திறந்து பேசுவதும் பாரதியின் பரிசு பெற்ற கவிதை குறித்து தேடி எடுத்து முன்வைக்கும் கருத்துக்களும் எனப்பயணிக்கும்  ஒன்பது சின்னச் சின்னக் கட்டுரைகளும் காரமான கட்டுரைகள்தாம். 
         இறுதியில் இணையத்தில் புழங்க வசதியாக சில தகவல்களையும் தந்திருப்பது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.
பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் இக்கட்டுரைகள் பரவலாக வாசிக்கவும் விவாதிக்கவும்படவேண்டிய மிக முக்கியமான கட்டுரைகள்.
வாழ்த்துக்கள் தோழரே...
அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்
15.08.2014
சிவகாசி

Thursday 8 May 2014

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி பரிசுத்தொகை ரூ 50000





;

பெருமதிப்பிற்குரியீர் வணக்கம் .

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய -மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .

0 அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான இந்திய சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போட்டியினை கீழ்கண்ட 25 தலைப்புகளில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது .

0 ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்

0 தேர்வு பெறும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்

0 தேர்வு பெறும் கட்டுரைகளை புதுக்கோட்டையில் எதிர்வரும்அக்டோபர் (2014 ) மாதத்தில்
நடைபெறும் மூன்று நாள் சிறப்புக் கருத்தரங்கில் சமூகவியல் ஆய்வில் புகழ்பெற்ற படைப்பாளுமைகளின் தலைமையிலும் விமர்சனத்திலும் வாசித்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும்

0 தேர்வு பெறும் கட்டுரைகள் அனைத்தும் புகழ்பெற்ற புத்தக நிறுவனத்தால் தனி நூலாக வெளியிடப்படும்

0ஆய்வுக்கட்டுரைகளை A 4 தாளில் 10 முதல் 15 பக்க அளவினை கொண்ட தட்டச்சுப் பிரதிகளாய்
(குறுந்தகடுகளுடன் ) அனுப்பிட வேண்டும் .

0 ஆய்வுக்கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள /எடுத்தாளப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளுக்குமான ஆதார நூல்களின் விவரங்கள் தனித்தாளில் குறிப்பிடப்பட்டு இணைக்கப்படவேண்டும்

0 கட்டுரையாளரின் பெயர் ,முகவரி ,மின்அஞ்சல் முகவரி ,அலைபேசி எண்கள் போன்ற விபரங்களுடன் கட்டுரை தம் சொந்த படைப்பே என்பதற்கான உறுதி மொழியையும் தனியே இணைக்கவேண்டும் .

0 ஆய்வு கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.07.2014

0 கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி 


செயலர் , அபெகா பண்பாட்டு இயக்கம், 832, கீழ ராஜ வீதி புதுக்கோட்டை -622 001 

மின் அஞ்சல் முகவரிகள் drnjayaraman@gmail.com      rasipanneerselvan@gmail.com
jryazhini2012@gmail.com 

தொடர்புக்கு 9486752525
ராசி .பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன்அதிபா )


----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆய்வுக் கட்டுரைகளுக்கான பொருள்
--------------------------------------------------------------------------------------
1. ஆரிய வருகைக்கு முன்பான ஆதி இந்திய சமூகம்
2. வர்ணம், சாதி --தோற்றமும் இருப்பும்
3. வர்ண சாதியப் படிநிலைகளின் எதிர்ப்பு வரலாறு
4. சாதியத்தின் மீதான சமண பௌத்த குறுக்கீடுகள்
5. இந்து மதத்தின் தோற்றமும் நிலைநிறுத்தப்பட்ட விதமும்
6. மனு ஸ்மிருதி தொகுக்கப்படுவதற்கான சூழலும் தேவையும்
7. பௌத்தமும் சமணமும் அழிக்கபட்ட விதம்
8. இந்திய சாதியில் இஸ்லாத்தின் இடையீடுகள்
9. கிறிஸ்தவமும் சாதியும்
10 மத மாற்றம் போல் சாதி மாற்றம் சாத்தியப்படாதது ஏன் ?
11 இந்து மதம் ஏன் ஒரு பிரச்சார மதமாக இல்லை ?(கிறிஸ்துவ முஸ்லிம் மதங்களை போல் )
12 பிரிட்டீஷ் ஆட்சியில் சாதியம் --உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
13.பிரிட்டீஷ் ஆட்சியும் பிராமணர்களும்
14 பிரிட்டீஷ் ஆட்சியும் பிராமணரல்லாதோரும்
15 பிரிட்டீஷ் ஆட்சியும் தலித்துகளும்
16அம்பேத்கருக்கு முந்தைய சமூக சீர் திருத்த இயக்கங்கள்
17 அம்பேத்கர் சாதிய அடிப்படையிலான ஒடுக்கு முறையை
அம்பலப்படுத்தியதால் ஆதாயம் அடைந்தவர்கள்
18. அம்பேத்கரின் இந்து மத கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்கள் ( பௌத்தம் தழுவியது வரை )
19 அம்பேத்கர் சமூக நீதி என்பதை நாடளாவிய விவாதப்பொருளாக்கியதால் விளைந்த பயன்கள்
20.அம்பேத்கர் அதிகார அமைப்புகளுக்குள் பங்கெடுத்து ஆற்றிய
பணிகளால் விளைந்த பலன்கள்
21 சாதியும் பெண்களும்/பெண்களின் ஊடாக சாதியம்
22 இன்றைய சாதியும் தொழில்களும்
23 சுதந்திர இந்தியாவை சாதி கைப்பற்றிய விதம்
24 உலகமயமாக்கல் காலகட்டத்தில் சாதியம்
25 இந்திய சமுக அமைப்பும் இட ஒதுக்கீடுகளும்
------------------------------------------------------------------------------------------------------------------------