Showing posts with label முன்னுரைகள். Show all posts
Showing posts with label முன்னுரைகள். Show all posts

Thursday, 19 January 2023

உண்மைகளின் புனைவாளன்

 (புதுகை சஞ்சீவியின் ”எழுத்தாளன் சொன்ன கட்டுக்கதைகள்” சிறுகதை நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை )

  

 

     தமிழில் சிறுகதை இலக்கியம் என்பது தமிழ் மரபிலிருந்த வாய்மொழிக் கதைகளின் தொடர்ச்சியாகவே வந்தமைந்த ஒரு வகைமை . பொதுவாக ஆய்வாளர்களால் சொல்லப்படுவதுபோல் அது மேலைநாட்டிலிருந்து வந்ததல்ல. தமிழ் உரைநடை மரபு  குறித்து தொல்காப்பியம் இவ்வாறு கூறுகிறது.

பொருள் மரபில்லாப் பொய் மொழியானும்

பொருளொடு புணர்ந்த நகை மொழியானும்  ( பொரு 1420 )

 

இதில் பொருள் மரபில்லா பொய்மொழியானும் என்பதற்கு கற்பனை கலந்த புனைவுப் பேச்சு எனவும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பதற்கு உண்மைகலந்த வேடிக்கைப் பேச்சு எனவும் உரையாசிரியர் விளக்கம் தருவர். மேற்கண்ட  மரபுக்கூறுகளை எடுத்துக்கொண்டுதான் பாரதி தனது ஆறில் ஒரு பங்கு , காக்காய் பார்லிமெண்ட் முதலான கதைகளைப் படைத்தார்.

       மேற்கத்திய கலை வடிவங்களை இந்திய எண்ணங்களைக் கொண்டு படைத்துக் காட்டுவதே நவீனம் என்று பரவலாக இங்கு அறியப்பட்டிருந்த காலத்தில், பாரதியோ நமது தமிழ் மரபை நவீனப்படுத்த முயன்றார்..அதாவது மரபிலக்கியத்தின் பழமைவாத நம்பிக்கைகளை ஒதுக்கி  அவற்றை மறுபரிசீலனை செய்யும் புத்திலக்கியப் போக்கினை தொடங்கி வைத்தார் .

       

      ஆக தமிழின் சிறுகதை இலக்கியத்தை  நுட்பமாகப் பார்த்தால் மற்ற எல்லாக் கலைகளையும்  போலவே உலகளாவிய வடிவத் தாக்கங்களுக்கும் குறுக்கீடுகளுக்கும் உள்ளாகி நல்லதோர் வடிவக் கச்சிதத்தை அடைந்தது என்றே சொல்லவேண்டும்.  அது உலகம் முழுதும் நடந்த மறுமலர்ச்சி மற்றும் தொழிற்புரட்சிக் காலங்களின் தாக்கத்தினால் உண்டான விளைவுகளில் ஒன்று.  அதனால் சிறுகதை நம்முடையது , வடிவக் கச்சிதம் வந்து சேர்ந்தது என்றே கொள்ளவேண்டும்

                        ******  ***** ********

 

      ருவர் நடந்த ஒரு நிகழ்வை  அடுத்தவருக்கு சொல்கிறபோது ஒவ்வொரு கூறையும் காட்சிப்படுத்தி விவரித்து ரசனையாக சொல்வாரெனில் கேட்பவர் அதைக் ”கதை”போல் உணர்கிறார். . மற்றொரு நேர்வில் , நடக்காத ஒன்றை ஒருவர் புனைந்து சொல்வாரெனில் கேட்பவர் அவர் நன்றாக ”கதை அளப்பதாக” சொல்கிறார். முதலில் சொன்னபடி கதை என்பது உண்மை என்றாகிறது . இரண்டாவதில் அது பொய் என்றாகிறது. ஆக கதை என்பது உண்மையா ? பொய்யா ? . நாம் இப்படிச் சொல்லலாம். கதை என்பது உண்மையைப் புனைவது.

 

    ஒரு உண்மையைப் புனைந்து அதன் உள் ஒளியை படைப்பாக்கி அதன் மூலம் வாழ்வின் மகத்தான தருணங்களை வாசகனுக்குக் கொண்டுசேர்ப்பவன் ஒரு நல்ல எழுத்தாளன் என்றால் , அவ்வகையில் தற்காலப் படைப்பாளர்களில் இந்த தொகுப்பின் மூலம் முதல் வரிசைக்கு வந்திருக்கிறார் புதுகை சஞ்சீவி .

 

    தலைப்புக் கதையான எழுத்தாளன் சொன்ன கட்டுக்கதைகளில் கதைசொல்லியோடு அவனுக்குள் இருக்கும் எழுத்தாளன் எனும் சுய விமர்சகன்  நடத்தும் போராட்டங்களை உயிர்ப்பாய் விவரித்துச் செல்கிறார். அந்த எழுத்தாளன் எப்போதும் எதிர்மறை விவாதங்களையே புரிபவனாக இருந்தாலும் , நனவிலி மனத்தின் கனவுகளில் புதிய வெளிச்சங்களைத் தருவதும் அவனின் உள்வேலைதான். தன்னை கருவேல மரமாகக் காண்பதும் கொடிகளும் கொம்புகளும் தன்னை அழுத்திக் கொண்டிருப்பதும் அருகில் சீராக அமைக்கப்பட்ட பணங்காய்ச்சி மரத் தோட்டங்களும் தமிழ் சிறுகதைக்குப் புதிய படிமங்கள்.. கதையின் இறுதியில் அவன் சந்திக்கச் செல்வது மனைவியையும் மகனையும் மட்டுமல்ல, ஒரு புது வாழ்வையுந்தான். .கட்டுக்கதை சிதறிக்கிடக்கும் அவனது வாழ்வை மறுகட்டமைப்பு செய்கிறது.   

 

     தீராக்கடன் கதை நாம் வெளிப்படுத்தாமல்  கடக்க முயற்சிக்கிற ஒரு அடிப்படையான உடலியல் பிரச்சினையை அதி தீவிரமாகப் பேசுகிறது .

கதையின் நிகழ்வுகளில் கொஞ்சமும் தொடர்புபடுத்தப்படாத அதிர்ச்சியான இறுதி முடிவு ஒரு கணம் நம் மூச்சைப் பிடித்துப் பார்க்கிறது. இந்த வாழ்க்கைப்பாட்டின் அழுத்தங்களால் நசிவதையே  தம் வாழ்வாகக் கொண்டுள்ள எண்ணற்ற பெண்களுக்கு மொத்த ஆணினமும் பட்டுள்ள தீராக் கடனைக் காட்டி குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார் . சஞ்சீவி.

 

                 *****    ******   *****

     தைகளை மிகப்பொருத்தமான சொற்களைத் தேர்ந்து சொல்லிச்செல்லும் விதத்தில் புதுகை சஞ்சீவி ஒரு தேர்ச்சிமிக்க எழுத்துக் கலைஞராக மிளிர்கிறார் .. காட்சிகளை பொருத்தமான வரிசையில்  சரியான இடத்தில் வைப்பதில் வியப்பூட்டுகிறார்.

    ஞானச்செருக்கு எனும் கதையில் எளிய குடும்ப பின்ணணி கொண்ட ஒரு பெண்ணை மாப்பிள்ளைவீட்டார் பெண் பார்க்க வருகிறார்கள் , .

     // ”பொண்ண நல்லா பாத்துக்கப்பா ” யாரோ மாப்பிள்ளையிடம் சொன்னது கேட்டது. .அங்கிருந்த அனைவரும் அவளது பிரகாசமான கண்களை ,கூரிய மூக்கை , மென்மையான சிவந்த விரல்களை , பளிச்சென்ற சருமத்தை அவரவர் மனத்தராசுகளில் எடைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.//

கதையின் பெரும்பகுதி நகர்ந்துவிட்ட நிலையில் அந்த பெண்ணின் தோற்றத்தை முன்னர் எங்கும் சொல்லாமல் மாப்பிள்ளை வீட்டார் பார்க்கிறபோதுதான் வாசகனுக்கும் காட்டுகிறார். இந்த இடவைப்பு கவனிக்கத்தக்கது. இந்தக் கதையின் முடிவை படிக்கின்ற பெற்றோர்கள் தம் மகளின் மனதறியாமல் அவளது முன்னற்றக் கனவுகளைச் சிதைக்கிற ஒரு திருமண முடிவை எடுக்கமாட்டார்கள்.

 

     அதேபோல்,  நகரத்து பேருந்தில் பயணித்தவர் சொன்ன கதையில் அந்த மீன் வியாபாரி கதை முழுக்க ஒரு பழைய சைக்கிளில்தான் சென்றுகொண்டிருப்பான். ஆனால் ஒரு பதட்டமான சூழலில் தனக்கு உதவி செய்த ஒரு அம்மையாரை சந்திக்க செல்லும்போது மட்டும் எண்ணெய்ப் பசையில்லாத சைக்கிள் செயினின் கொடூரமான சத்தத்தை பதிவுசெய்கிறார்.

அவனது மன அவதிக்குப் பின்னிசையாக அது பொருந்துகிறது.

 

   பாறைக்குளம் கதையில் வரும் ஐந்து விடலைப்பருவ ந்ண்பர்கள், கிளிப்பட்டி அம்மன் கோயிலில் போய் இரவில் தூங்கினால் கனவில் வருங்கால மனைவி தெரிவாள் என்று ஒரு பாட்டி சொன்னதைக் கேட்டு அங்கு தூங்கப் போகிறார்கள் . அவர்கள் தூங்கினார்களா கனவில் மனைவி வந்தாளா எனச் சொல்லாமல் அப்படியே வைத்துவிட்டு கதையின் அடுத்தப் பகுதிகளைச் சொல்லிச்செல்வார். முனைப்பான பகுதியில், நண்பர்களின் ஒருவனான  சந்திரன் பாறைக்குளத்தில் மூழ்கி இறந்து விட காவல் துறையினர் இவர்கள்மீது கூற்றம் சுமத்த முயற்சிக்க அப்போதுதான் தூங்கிய கதையினை இணைக்கிறார்.

அன்று யாருடைய கனவிலும் ஒருத்தியும் வரவில்லை என்றும் அப்ப நம்ம ஒருத்தருக்குமே கல்யாணம் ஆகாதா என சந்திரன் கேட்டதையும் சொல்லி நம்மை காவல்துறை கைது செய்துவிட்டால் பிறகேது கல்யாணம் என அவர்கள் புலம்பும் இடத்தையும் அழகாகச் சேர்க்கிறார். இது அவரது எழுத்தின் வரைகலைச் சிறப்பு.

 

            ******      *******     *******

       தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே விவரணைகளால் சொல்லப்பட்டிருப்பதைவிட காட்சி மொழிகளாலேயே அதிகமாய் சொல்லப்பட்டிருக்கின்றன. .ஒவ்வொரு நிகழ்வும் காட்சிகளாக நம் முன்னே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன அல்லது அந்த கதைக்களத்தில்  பாத்திரங்களோடு  நாமும் உடனிருக்கிறோம். வாசகனையும் கதைக்குள் கொண்டுபோய் வாழவைப்பது மிகுந்த சவாலான எழுத்துவகை.. அது படு இயல்பாக புதுகை சஞ்சீவிக்கு கைவந்திருக்கிறது.

   எளிய மனிதர்களின் மிக எளிய வாழ்க்கையை, அவ்வளவாக கவனத்தில் கொள்ளப்படாத உள்ளடக்கங்களை கதைப்பரப்புக்கு கொண்டுவருவது படைப்பாளரின் மனிதத்துவ அன்பின் மேன்மை என்றே சொல்லவேண்டும். அதுதான், வாசிப்பவரின் சமனை குலைக்கக்கூடிய ”தீராக்கடன்” , உறவு புறக்கணித்தபோதும் நாங்கள் இருக்கிறோமென நண்பனின் கல்லறையை மெழுகி வணங்கும் நண்பர்களைக்காட்டி நட்பை உயர்த்தும் ”கல்லறைத்தோட்டம்” ஆகிய கதைகளை எழுத வைத்திருக்கிறது.

 

      செல்லாக்கோபம் கதை முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை  வாசகனை அடக்கமுடியாத சிரிப்பலைகளில் ஆழ்த்துகிறது.. இந்த வகைமையில் ஒரு கதையை தமிழ் வாசகப்பரப்பு அண்மைக்காலத்தில் கண்டதில்லை என்றே சொல்லவேண்டும். கொல்லெனச் சிரிக்கும் சிரிப்பு , வாய்பொத்தி கமுக்கமாய் சிரிக்கும் சிரிப்பு , நமட்டுச் சிரிப்பு என அதில் வரும் பாத்திரங்கள் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு சிரிப்பிலும்  , சிரிப்புக்கு காரணமான சுப்பனை போன்ற ஏதுமறியா அப்பாவி மனிதர்களின் வலியை வாசகன் உணரமுடிகிறது. ..அது அறியாமைகளின் மீது நிகழ்த்தப்படும் அரசியல் சமூக அதிகாரங்களின் குறியீடாக வெளிப்படுகிறது.

 

     அண்மையில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் எழுதியுள்ள  தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் ( முதல் ஐம்பது ஆண்டுகள் ) நூலுக்காக ஐயாயிரம் கதைகளை படித்ததாக கூறினார். அதன் இரண்டாவது ஐம்பது ஆண்டுகள் பகுதி வெளிவரவிருக்கும் நிலையில் அதற்காக இன்னும் ஐயாயிரம் கதைகளுக்குமேல் அவர் படித்திருக்ககூடும். அதைப்பற்றி அவர் கூறும்போது நம் படைப்பாளர்கள் எல்லாவற்றையும் , எதையும் இல்லையெனச் சொல்லமுடியாத அளவுக்கு எழுதிவிட்டார்கள். எத்தனை பார்வைகள் எத்தனை கோணங்கள் ,எத்தனை வடிவங்கள் ..என சிலாகித்தார்.

 

      அப்படி நிறைந்து கிடக்கிற கதைப்பரப்பில் இன்னும் இன்னும் எங்கள் தமிழ் வாழ்வில் எழுத வேண்டியது ஏராளமாய் இருக்கிறது என்று கிளர்ந்துவரும் அடுத்தக்கட்ட எழுத்தாளர்களில் புதுகை சஞ்சீவி குறிப்பிடத்தக்கவராய் இருப்பார் என்பதற்கு அவரின் இந்த தொகுப்பே சான்று.

 

 

புதுக்கோட்டை                      -           ராசி.பன்னீர்செல்வன்

27.12.2022

 

 

.

 

 

 

 

 


Saturday, 7 April 2012

பாலாவின் விரல்களின் குரல்கள்


கவிஞர் தங்கம்மூர்த்தி தொகுத்துள்ள கவிதைவெளியினிலே நூலில்
                                      நான் எழுதியுள்ள முன்னுரை


                             மிழ்க்கவிதை, தனது உணர்ச்சியின் திவலைகள் சொட்டி நனைந்த காவியப் படிமானங்களிலிருந்தும், மண்ணில் கால்பதிக்காத அதீத கற்பனாவாதத்திலிருந்தும், மக்களை மறுதலித்த நிலஉடைமைக் கால கருத்தோட்டங்களிலிருந்தும், மொழியின் பூட்டப்பட்ட சட்டகங்களிலிருந்தும் வெளியேறவேண்டிய நிர்பந்தத்தை முதலில் எதிர்கொண்டவன் பாரதி.  அவன்தான் புதிய யுகத்திற்கான கவிதை மொழியோடு தமிழின் நவகவிதையை ஆரம்பித்து வைத்தான்.

தொடர்ந்து இந்தியத் தத்துவச் சாயலோடும், தமிழ் மரபின் ஓசையோடும் ‘எழுத்து” மற்றும் பிற கவிதை இயக்கங்கள் எழுச்சி பெற்றன.  பழைய வடிவம் மற்றும் உள்ளடக்கத் தளைகளிலிருந்து கவிதையை விடுவிக்க அவர்கள் தம் “புதுக்குரல்”;களால் முயற்சித்தனர்.

அவர்களுக்கு முற்றிலும் எதிர் நிலையில் நின்று புத்தாக்கம் செய்யப்பட்ட படிம, உருவக அழகுகள் கொண்ட வடிவத்தோடும், மனித குலத்தின் மாபெரும் துயரங்களுக்கு மாற்றுகாண விழைந்த உள்ளடக்கத்தோடும் வானம்பாடிகள் தங்கள் இயங்குதலை ஆரம்பித்தனர்.  இடதுசாரி கருத்தமைவுகளோடு கூடிய உணர்ச்சிகளை கவிதைகளில் வைத்து அவர்கள் மானுடம்பாடவந்த வானம்பாடிகள் என்று தங்களை அறிவித்துக் கொண்டனர்.


     இந்நிலையில் புதுக்கவிதைக்கான எதிர்ப்புக் குரல்கள், அறிஞர்களின்
புறக்கணிப்புகள், பண்டிதர்களின் ஏளனங்கள் கிளம்பின. கவிதையின் புத்தியக்க எழுச்சி கண்டுகொள்ளப்படாத எழுபதுகளில் அனைத்து புதுக்கவிஞர்களையும் தன் தோளில் ஏற்றிக்கொண்டு அனைத்துக் கவிதைகளையும் தன் மடியில் குவித்துக்கொண்டு அக்கவிதைகளின் ஆழத்தின் உச்சிகளையும் சிகரத்தின் ஆழங்களையும் உலகுக்கு உரத்த குரலில், ஒப்பற்ற கவிதை மொழியில் முன் வைத்து அதன் மூலம் தமிழில் ஒரு புதிய கவிதைக் காலத்தை நிர்மாணித்து புதுக்கவிதையை தன் புதுப்பார்வையால் அனைவரையும் உணர்ந்து ஏற்கச் செய்தவர் கவிஞர் பாலா.

வானம்பாடிக் கவிஞர்கள் எழுச்சி பெற்ற பின்தான் புதுக்கவிதை மக்கள் அரங்கத்துக்குச் சென்றது. அதுவரை குறுகிய வட்டத்திற்குள் இயங்கி வந்த கவிதை கல்வித்துறையின் ஏற்பினைப் பெற்றது.  புதுக்கவிதை ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது. இவற்றுக்கெல்லாம் காரணமாயிருந்த கவிஞர்சிற்பி முதலான கவிஞர்களில் மிக முக்கியமானவர் பாலா.

கவிஞர் பாலா தனது “புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை”  நூலின்  மூலமும் விமர்சனக் கட்டுரைகள், முன்னுரை பின்னுரைகள் ஆகியவற்றின் மூலமும் புதுக்கவிதைகளின் மீது சரியான அளவிலும் கோணத்திலும்  வெளிச்சம் பாய்ச்சி அதன் நுட்பமான உண்மையின் பரிமாணங்களை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், அவற்றின் வெற்றி நிலை மந்தப்பட்டிருக்கும் என்பதை திறந்த நேர்மையோடு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

தமிழ்க் கவிதையின் அடிமனச் சரஓடையில் இறங்கி அதன் அகவெளியை பாலா அளந்து காட்டினாலும் ஒட்டுமொத்த இந்தியக் கவிதையுலகமும் எடுத்துக் கொள்ள வேண்டிய உயிர் ஓளி மிக்கதாய் இருப்பதை கற்போர் யாரும் அறிய முடியும்.

கவிதைகள் பற்றி அறியவும் உணரவும் விழையம் தற்கால, பிற்காலத் தலைமுறையினர் பாலாவின் கவிதை குறித்த நுட்பமான பார்வைப் பதிவுகளை, அவரின் சொற்களின் ஊடாக, வாழ்வின் உண்மைகளை கவிதையின் ஆன்மா கடந்து செல்லும் தருணங்களை புரிந்து கொண்டால் முழுமையான கவித்துவம் வாய்க்கப் பெறலாம்.

அம்மாதிரியான ஒரு அறிவுக் கொடையை அனைவருக்கும் வழங்கிடு ம்  பெருங்குணத்தோடு, கவிஞர் தங்கம் மூர்த்தி செம்மையாக உழைத்து பாலாவின் அனைத்து நூல்களிலிருந்தும் கவிதை குறித்த பார்வைகளை எடுத்துக் கோர்த்து இத்தொகுப்பினை உருவாக்கியுள்ளார்.


ந்திய இலக்கியத்தில் இவ்வளவு உரத்த தெளிவோடும் அதே சமயம்  ஆழ்ந்த அமைதியோடும் கவிதை விமர்சனத்தைப் பதிவு செய்திருப்பவர் கவிஞர் பாலாதான்.  நுட்பமான கவிதைகளின் ஒளிகசியும் படைப்பு ரகசியத்தை அவர் திறப்பு செய்து காட்டியுள்ளார்.

தமிழன் மிகப்பிரபலமான புதுக்கவிதை நூலான கவிஞர் மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப்பூக்கள்’ 25 பதிப்புகளுக்கு மேல் கண்டிருக்கிறதென்றால் அதற்கு அந் நூலில் பாலா எழுதிய முன்னுரையும் ஒரு முக்கிய காரணம்.

வானம் பாடிக் கவிஞர்கள் தொடங்கி தற்காலத் தமிழன் முக்கியக் கவிஞர்களுள் ஒருவரான தங்கம் மூர்த்தி வரை பாலாவின் கவிதை மண்டலம் விரிந்திருந்தது.  நூற்றுக் கணக்கான கவிஞர்களின் கவியாற்றலை அவர் வியந்து போற்றி வெளிப்படுத்தினார்.

இந்நூலில் கவிதைகள் குறித்து அவர் சொல்லிச் செல்லும் சித்திரங்கள் வசீகரமானவை அதே சமயம் மிகுந்த தத்துவ வலிமை கொண்டவை.

கவிதையை ‘வர்ணமடித்து பொய்யன்று, வாழ்க்கை உரைக்கும மெய்’- "அகவெளியில் கருதிகூட்டும் மௌன வெப்பம்" -"காற்றைக் கிழிக்கும் ஒரு பறவையின் எழுச்சி"- "சேரத்துச் சேர்த்து சேமித்த கனல்"-" உணர்வும் அறிவும் உயர்ந்த பிணைப்பில்இறுகிக் கிடக்கும் சொற்களின் கூட்டு"- என்றும்

"கவிதையின் சொற்கள் மறைந்து போய்விடுகிற பொழுது தான் கவிதை கிடைக்கிறது"என்றும அவர் எழுதிச் சொல்லும் அழகு அனைவரின் மனதிலும் கவிதை விளக்கினை ஏற்றி வைக்கும்.

“அடிக்கடி வந்து நம்முடன் ஒரு ஞாபகயுத்தம் செய்வதுதான் உயிருள்ள கவிதை.  நாம் விட்டுவிட்டுப் போன பின்னும், பின்னால்  ஓடிவந்து நம்விரல் தொட்டுப் பேசுவதுதான் கவிதை” என்ற பாலாவின் வரிகள் கூட நம் பின்னால்  எப்போதும் வந்து நிற்கின்றன. ஒரு ஞாபகயுத்தம் செய்தபடி.

வெற்று ஆரவாரங்களையும் வாழ்வனுபவத்தின் உட்பரிமாணங்களற்ற உணர்ச்சிப் பிரவாகங்களையும் காட்டும் செல்வாக்குமண்டலக் கவிஞர்கள், பாலாவின் கவிதைப் பார்வைகளை உள்ளேற்றிக் கொள்ள வேண்டும்.

 கவிதையின் விமர்சனச்சித்திரங்கள் ஒரு சிறந்த கவிஞராலேயே எழுதப்படும்போது அது எவ்வளவு அற்புதமாக அமைந்துவிடும் என்பதற்கு இத்தொகுப்பு உதாரணம்.

  
                        
ந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வருபவர் கவிஞர் தங்கம் மூர்த்தி. அவருடைய முக்கியமான கவிதைகள் பல ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டு திசைகளெங்கும் பரவி வெற்றி பெற்றிருக்கின்றன.

பல இலக்கிய அமைப்புகள் தம் விருதுகளை தங்கம் மூர்த்திக்கு  வழங்கியிருப்பதன் மூலம் தமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.  தொலைக்காட்சி ஊடகங்களிலும் அவரது கவியரங்கங்கள் - வாசகப் பார்வையாளர்கள் வசப்படுத்தி வருகின்றன.

இவ்வாறு சிறப்புப் ப+க்களால் நிறைக்கப்பட்டிருந்தாலும் கவிஞர் தங்கம் மூர்த்தியின் பாதங்கள் வேர்களின் ஈரம்தரும் குளிர்ச்சியில் தான் லயித்து  நிற்கின்றன என்பதற்கு அவரின் ஆசிரியரும் ஆத்மார்த்த வழிகாட்டியுமான கவிஞர் பாலாவின் இலக்கியப் பணிகளை எடுத்துச் செல்வதே எடுத்துக்காட்டு.

கவிஞர் பாலாவின் “கவிதை வெளியினிலே” எனும் இந்தக் கவிதைப் பார்வைகள் கவிதையில் தோய்ந்து ஆழம் கண்ட மாகவிகள் முதல் இன்றைய புதுமொக்குகளாய் வரும் இளையகவிஞர்கள் வரை அனைவரின் சிந்தாநதியிலும் வெள்ளம் பாய்ச்சக் கூடியவை.

இத்தொகுப்புநூல் மற்ற இந்தியமொழிகளிலும் பெயர்க்கப்படுமானால் இந்திய இலக்கியப் பரப்புக்கு அது ஒரு பெருங்கொடையாக அமையும்.  கவிஞர் தங்கம் மூர்த்தியின்  வெற்றிகரமான பெருமுயற்சிகள் அதை சாத்தியப்படுத்தும் என நம்புகிறேன்.

நம்மை கடந்து சென்றுவிட்ட ஒரு பறவையின் குரல் மட்டுமே நம்மோடு தங்கிவிட்டதைப் போல பாலாவின் விரல்களின் குரல் இத்தொகுப்பு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.