Wednesday, 8 April 2015

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன்

       வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் 'திக்'கென்று என்னமோ உடைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாத்திரத்திலேயே தன்னைக் கவ்விக் கொண்ட அந்தப் பயத்தினால்தான் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததா என்று நிச்சயிக்க முடியாத நிலையில் அவனை அடையாளம் கண்டதுjk3 (2)ம் அச்சம் கொண்டதும் சுப்புக் கோனாருக்கு ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. 

அது பனிக்காலம்தான். இன்னும் பனிமூட்டம் விலகாத மார்கழி மாதக் காலை நேரம்தான். அதற்காக உடம்பு திடீரென்று இப்படி உதறுமா என்ன? பாதத்தின் விரல்களை மட்டும் பூமியில் ஊன்றி, குத்திட்டு அமர்ந்திருந்த கோனாரின் இடது முழங்கால் ஏகமாய் நடுங்கிற்று. எழுந்து நின்று கொண்டான். உடம்பு நடுங்கினாலும் தலையில் கட்டியிருக்கும் 'மப்ள'ருக்குள்ளே திடீரென வேர்க்கிறதே! 

முண்டாசை அவிழ்த்துத் தலையை நன்றாகச் சொறிந்து விட்டுக் கொண்டான் கோனார். 

காலனி காம்பவுண்டின் இரும்பாலான கதவுகளை ஓசையிடத் திறந்து பெரிய ஆகிருதியாய் உள்ளே வந்து கொண்டிருந்த அவன், தன்னையே குறி வைத்து முன்னேறி வருவது போலிருந்தது கோனாருக்கு. 

அவன் கால் செருப்பு ரொம்ப அதிகமாகக் கிறீச்சிட்டது. அவன் கறுப்பு நிறத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தான். உள்ளே போட்டிருக்கும் பனியனும், இடுப்பிலணிந்த நான்கு விரற்கடை அகலமுள்ள தோல் பெல்ட்டும், அந்த பெல்ட்டிலே தொங்குகின்ற அடர்ந்த சாவிக் கொத்தின் வளையத்தை இணைத்து இடுப்பில் செருகி இருக்கும் பெரிய பேனாக் கத்தியும் தெரிய அணிந்த மஸ்லின் ஜிப்பா; அதைப் பார்க்கும்போது சாவிக் கொத்திலே இணைத்த ஒரு பேனாக் கத்தி மாதிரி தோன்றாமல் கத்தியின் பிடியிலே ஒரு சாவிக் கொத்தை இணைத்திருப்பது போல் தோன்றும் அளவுக்கு அந்தக் கத்தி பெரிதாக இருந்தது. 

அவன் சுப்புக் கோனாரைச் சாதாரணமாகத்தான் பார்த்தான். தான் வருகிற வழியில் எதிரில் வருகிற எவரையும் பார்ப்பதுபோல்தான் பார்த்தான். போதாதா கோனாருக்கு? ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பால் கறக்கவும் முடியாமல், பசுவின் காலை அவிழ்க்கவும் முடியாமல் தன்னைக் கடந்து செல்லும் அவனது முதுகைப் பார்த்தவாறு உறைந்து போய் நின்றிருக்கும் கோனாரைப் பார்த்து வேப்ப மரத்தில் கட்டிப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிக்கு என்ன மகிழ்ச்சியோ? ஒரு துள்ளூத் துள்ளிக் கட்டை அவிழ்த்துக் கொண்டு பசுவின் மடியில் வந்து முட்டியதைக் கூட அவன் பார்க்கவில்லை. 

வழக்கம்போல் படுக்கையிலிருந்து எழுந்ததும் பசுவின் முகத்தில் விழிப்பதற்காக ஜன்னல் கதவைத் திறந்த முதல் வீட்டுக் குடித்தனக்காரரான குஞ்சுமணி இந்த மஸ்லின் ஜிப்பாக்காரனின் - காக்கை கூடு கட்டிய மாதிரி உள்ள கிராப்பையும், கிருதாவையும் பார்த்து முகம் சுளித்துக் கண்களை மூடிக் கொண்டார். கண்ணை மூடிக் கொண்ட பிறகுதான் மூடிய கண்களுக்குள்ளே அவனை அவருக்கு அடையாளம் தெரிந்தது. மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தார். அவனேதான்! 

அவனைத் துரத்திக் கொண்டு யாராவது ஓடி வருகிறார்களா என்று பார்ப்பதற்காகக் குஞ்சுமணி வெளியில் ஓடி வந்தார். 

அப்போது அவன் அவரையும் கடந்து மேலே போய்க் கொண்டிருந்தான். வெளியில் வந்து பார்த்த குஞ்சுமணி, பசுவின் காலைக் கட்டிப்போட்டு விட்டுத் தன் கால்களையும் பயத்தால் கட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் சுப்புக் கோனாரைப் பார்த்தார். கோனாருக்குப் பின்னால் காம்பவுண்டு 'கேட்'டுக்கு வெளியே நின்றிருந்த அந்த ஜட்கா வண்டியிலிருந்துதான் இவன் இறங்கி வருகிறானா என்று குஞ்சுமணியால் தீர்மானிக்க முடியவில்லை. 

ஏனெனில் - தெருவோடு போகிற வண்டி தானாகவே அதன் போக்கில் நின்றிருக்கலாமென்று தோன்றுகிற விதமாக அந்த ஜட்கா வண்டியின் குதிரை, பின்னங்கால்களை முழங்கால் வளையப் பூமியில் உந்தி விறைத்துக் கொண்டு புழுதி மண்ணில் நுரை கிளம்பச் சிறுநீர் கழித்த பின், கழுத்துச் சலங்கை அசைய அப்போதுதான் நகர ஆரம்பித்திருந்தது. காலையில் தனக்கு வரிசையாகக் காணக் கிடைக்கின்ற 'தரிசன'ங்களை எண்ணிக் காறித் துப்பினார் குஞ்சுமணி. துப்பிய பிறகுதான் 'அவன் திரும்பிப் பார்த்துவிடுவானோ' என்று அவர் பயந்தார். அந்தப் பயத்தினால், தான் துப்பியது அவனைப் பார்த்து இல்லை என்று அவனுக்கு உணர்த்துவதற்காக "தூ! தூ! வாயிலே கொசு பூந்துட்டது" என்று இரண்டு தடவை பொய்யாகத் துப்பினார் குஞ்சுமணி. 

அவன் அந்தக் காலணியின் உள்ளே நுழைந்து இரண்டு பக்கமும் வரிசையாய் அமைந்த அந்தக் குடியிருப்பு வீடுகளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல், அவற்றின் உள்ளே மனிதர்கள் தான் வாழுகிறார்களா என்றூ அறியக் கூட சிரத்தையற்றவனாய், தனது இந்த வருகையைக் கண்டபின் இங்கே உள்ள அத்தனை பேருமே ஆச்சரியமும், அச்சமும், கவலையும், கலக்கமும் கொள்வார்கள் என்று தெரிந்தும், அவர்களின் அந்த உணர்ச்சிகளைத் தான் பொருட்படுத்தவில்லை என்று காட்டிக் கொள்ளுகிற ஓர் அகந்தை மாதிரி, 'இங்கே இருக்கும் எவனையும் போல் எனக்கும் இங்கு நடமாட உரிமை உண்டு' என்பதைத் தனது இந்தப் பிரசன்னத்தின் மூலம் ஒரு மெளனப் பிரகடனம் செய்கின்ற தோரணையில், பின்னங் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்புறம் கோத்த உள்ளங்கைகளைக் கோழிவால் மாதிரி ஆட்டிக் கொண்டு, 'சரக் சரக்' என்று நிதானமாய், மெதுவாய், யோசனையில் குனிந்த தலையோடு மேலே நடந்து கொண்டிருந்தான். 

அந்த அகந்தையும், அவனது மெளனமான இந்தப் பிரகடனத்தையும்தான் குஞ்சுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், தாங்கிக் கொள்ளாமல் வேறென்ன செய்வது? ஏற்கனவே ஒரு பக்கம் பயத்தால் படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனத்துள், அவனது இந்த நடையைப் பார்த்ததும் கோபமும் துடிதுடிக்க ஆரம்பித்தது. ஆனால், அறிவு நிதானமாக வேலை செய்தது அவருக்கு. 

"இவன் எதற்கு இங்கு வந்திருப்பான்! இவன் நடையைப் பார்த்தால் திருடுவதற்கு வந்தவன் மாதிரி இல்லை. எதையோ கணக்குத் தீர்க்க வந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நிதானம் இவன் நடையில் இருக்கிறதே.... ஆள் அப்போ இருந்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் சதை போட்டிருக்கான். அப்போ மட்டும் என்ன.... சுவரேறிக் குதிச்ச வேகத்திலே கீழே விழுந்து, முழங்காலை ஒடிச்சுக்காமல் இருந்திருந்தான்னா அத்தனை பேரையும் அப்படியே அள்ளித் தூக்கித் தூர எறிஞ்சுட்டு ஓடிப் போயிருப்பான்... அன்னிக்கு முழங்கால்லேருந்து கொட்டின ரத்தத்தையும், பட்டிருந்த அடியையும் பார்த்தப்போ, இவனுக்கு இன்னமே காலே விளங்காதுன்னு தோணித்து எனக்கு. இப்போ என்னடான்னா நடை போட்டுக் காட்டறான், நடை! அது சரி! இப்போ இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?... என்ன பண்ணினாப் போவான்?... இவன் வந்திருக்கறது நல்லதுக்கில்லைன்னு தோணறதே. இன்னிக்கு யார் மொகத்திலே முழிச்சேனோ? சித்தமின்னே இவன் மொகத்திலே தான் முழிச்சேனோ?..." என்ற கலவரமான சிந்தனையோடு சுப்புக் கோனாரைப் பரிதாபமாகப் பார்த்தார், குஞ்சுமணி. அந்தப் பார்வையில் சுப்புக் கோனாரின் உடம்பையும், அந்த 'அவனு'டைய உடம்பையும் ஒப்பிட்டு அளந்தார். 

'கோனாருக்கு நல்ல உடம்புதான்... தயிர், பால், வெண்ணெய், நெய்யில் வளர்ந்த உடம்பாச்சே! சரிதான்! ஆனால், அடி தாங்குமோ? அவனுக்கு அன்னிக்கு முழங்காலிலே அடி படாமல் இருந்திருந்தா, இந்த சுப்புக் கோனார், கீழே விழுந்திருந்த அவன் முதுகிலே அணைக்கயத்தாலே வீறு வீறுன்னு வீறி இருப்பானா! அந்தக் கயறே ரத்தத்திலே நனைஞ்சு போயிடுத்தே!... அடிபட்டு ரத்தம் கொட்டற அந்த முழங்காலிலே ஒண்ணு வச்சான். அவ்வளவுதான்! பயல் மூர்ச்சை ஆயிட்டான். அதுக்கப்புறம் பொணம் மாதிரின்னா அவனை இழுத்துண்டு வந்து, வேப்பமரத்தோட தூக்கி வச்சுக் கட்டினா... அப்புறம் அவன் முழிச்சுப் பார்த்தப்போன்னா உயிர் இருக்கறது தெரிஞ்சது... 'தண்ணி தண்ணி'ன்னு மொனகினான். நான்தான் பால் குவளையிலே தண்ணி கொண்டு போய்க் குடுத்தேன். குடுத்த பாவி அத்தோடே சும்மா இருக்கப் படாதோ! 'திருட்டுப் பயலே! உனக்குப் பரிதாபப் பட்டா பாவமாச்சே!'ன்னு பால் குவளையாலேயே கன்னத்திலே ஓங்கி இடிச்சேன்... தண்ணி குடிச்ச வாயிலேருந்து கொடகொடன்னு ரத்தம் கொட்டிடுத்து... அவன் கண்ணைத் திறந்து கறுப்பு முழியைச் சொருகிண்டு என்னைப் பார்த்தான். அதுக்கு அர்த்தம் இப்போன்னா புரியறது...' 

'எலே பாப்பான், இருடா வந்து பாத்துக்கறேன்'ங்கற மாதிரி அன்னிக்கே தோணித்து. இப்போ வந்திருக்கான்... நான் தண்ணி குடுத்தேனே... அதை மறந்திருப்பானா என்ன? எனக்கென்ன - மத்தவா மாதிரி 'ஒருத்தன் வகையா மாட்டிண்டானே, கெடைச்சது சான்ஸ்'னு போட்டு அடிக்கற ஆசையா? 'இப்படித் திருடிட்டு, ஓடிவந்து, இவா கையிலே மாட்டிண்டு, அடி வாங்கி, தண்ணி தண்ணின்னு தவிக்கறயே... நோக்கென்னடா தலையெழுத்து?'ன்னு அடிச்சேன். இல்லேங்கல்லை... அடிச்சேன்... அவனுக்கு அடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்போ திருப்பி அடிக்கத்தான் அவன் வந்திருக்கான். எனக்கு நன்னாத் தெரியறது. அவன் நடையே சொல்றதே! நன்னா, ஆறு மாசம் ஜெயில் சாப்பாட்லே உடம்பைத் தேத்திண்டு வந்திருக்கான். வஞ்சம் தீக்கறதுக்குத்தான் வந்திருக்கான்... பாவம்! இந்த சுப்புக் கோனாரைப் பார்க்கறச்சேதான் பாவமா இருக்கு.. அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானே? இவன் கணக்குத்தான் அதிகம். என்னமா அடிச்சான்! அடிக்கறச்சே மட்டும் நன்னா இருந்ததோ?... இப்போ திருப்பி தரப் போறான்... நேக்கும்தான்... என் கணக்கு ஒரு அடிதான்... ஆனால், அதை நான் தாங்கணுமே!.. இந்தக் காலனிலே இருக்கிறவாள் எல்லாருமே ஆளுக்கு ஒரு தர்ம அடி போட்டா... அப்படி இவன் என்ன மகா சூரன்? எல்லாரையுமா இவன் அடிச்சுடுவான்?" என்ற எண்ணத்தோடு மறுபடியும் சுப்புக் கோனாரின் உடம்பை அளந்து பார்த்தார் குஞ்சுமணி. அவன் உடம்போடு தன் உடம்பையும் - ஏதோ இலங்கைக்குப் பாலம் போடும்போது அணில் செய்த உதவி மாதிரி தன் பலத்தையும் கூட்டி அதன் பிறகு தானும் சுப்புக் கோனாரும் சேர்ந்து போடுகிற கூச்சலில் வந்து சேருவார்கள் என்று நம்புகிற கூட்டத்தின் பலத்தையும் சேர்த்துப் பெருக்கிக் கொண்ட தைரியத்தோடு குஞ்சுமணி பலமாக ஒருமுறை - இருமினார்! அவர் என்னமோ அவனை மிரட்டுகிற தோரணையில் கனைத்து ஒரு குரல் கொடுக்கத் தான் நினைத்தார். அப்படியெல்லாம் கனைத்துப் பழக்கமில்லாத காரணத்தினாலோ, அல்லது நாள் முழுவதும் அந்த நடராஜா விலாஸில் சரக்கு மாஸ்டராக அடுப்படிப் புகையில், கடலை எண்ணெயில் உருட்டிப் போட்ட புளி உருண்டை தீய்கிற கமறலில் இருமி இருமி நாள் கழிக்கிற பழக்கத்தினாலோ கனைப்பதாக நினைத்துக் கொண்டு அவரால் இருமத்தான் முடிந்தது. 

அவன், அவரையோ, அவர் இருமலையோ கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டு வாசற்படிகளில் ஏறினான். 

"நல்ல இடம்தான் பார்த்திருக்கான். திண்ணையிலே உக்காந்துக்கப் போறான். பக்கத்திலே இருக்கிற குழாயடிக்கு எப்படிப் பொம்மனாட்டிகள் வந்து தண்ணி பிடிப்பா?... இதோ! இன்னும் சித்த நாழியிலே எங்க அம்மா ரெண்டு குடத்தையும் கொண்டு வந்து திண்ணையிலே வச்சுட்டு, 'குஞ்சுமணிக் கண்ணா! என் கண்ணோல்லியோ? ரெண்டே ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்து குடுத்துடுடா'ன்னு கெஞ்சப் போறாள். பாவம். அவளுக்கு உக்காந்த இடத்திலே சமைச்சுப் போடத்தான் முடியும். தண்ணிக் குடம் தூக்க முடியுமா என்ன? ரெண்டு குடத்தையும் எடுத்துண்டு நான் குழாயடிக்குப் போகப் போறேன். அப்படியே அலாக்கா என்னைத் திண்ணை மேலே தூக்கி... சொல்லிடணும்.... 'ஒரு அடி தாம்பா தாங்க முடியும். அதோட விட்டுடணும்... அவ்வளவுதான் என் கணக்கு'ன்னு சொல்லிடணும். நியாயப்படி பார்த்தா அவன் முதல்லே சுப்புக் கோனாரைத்தானே அடிக்கணும்? இந்தக் கோனாருக்கு அவனை அடையாளம் தெரியலியோ?..." 

"ஏய், சுப்பு! பாத்துண்டு நிக்கறீயே... ஆளை உனக்கு அடையாளம் தெரியலையா?" என்று குரலைத் தாழ்த்திச் சுப்புக் கோனாரை விசாரித்தார், குஞ்சுமணி. 

"அடையாளம் எனக்குத் தெரியுது சாமி. என்னையும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோன்னுதான் யோசிக்கிறேன்" என்று முணுமுணுத்தான் சுப்புக் கோனார். 

அந்த நேரம், கையில் பால் செம்புடன் வெளியில் வந்த குஞ்சுமணியின் தாயார் சீதம்மாள், சுப்புக் கோனார் பாலைக் கறக்காமல் தன் பிள்ளையாண்டானுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதுவும் அவன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதைத் தானும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், காதை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துச் செவி மடலில் செருகிக் கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள். 

சாதாரணமாகக் குஞ்சுமணி யாருடனும் பேசமாட்டார். காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியாகப் பசுவைத் தரிசனம் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டு வெற்றிலை சீவல் போட ஆரம்பிப்பார். சீதம்மாள் பாலை வாங்கிக் கொண்டு போய், காப்பி கலந்து, அவரைக் கூப்பிடுவதற்கு முன் இரண்டு தடவையாவது வெற்றிலை போட்டு முடித்திருப்பார் குஞ்சுமணி. காப்பி குடித்த பிறகு இன்னொரு முறை போடுவார். வெற்றிலை, சீவல், புகையிலை அடைத்த வாயுடன் இரண்டு குடங்களையும் தூக்கிக் கொண்டு குழாயடிக்கு வருவார். அவர் அதிகமாகப் பேசுகின்ற பாஷையே 'உம்', 'ம்ஹீம்' என்ற ஹீங்காரங்களும் கையசைப்பும்தான். அப்படிப்பட்ட குஞ்சுமணி காலையில் எழுந்து வெற்றிலை கூடப் போடாமல் இந்தக் கோனாரிடம் போய் ஏதோ பேசுகிறார் என்றால், அது ஏதோ மிக அவசியமான, சுவாரசியமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த சீதம்மாள், மோப்பம் பிடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு நாலு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள். அவ்விதம் அவள் பார்க்கும்போது அந்தப் பூட்டிக் கிடக்கும் வீட்டின் முன்னால் நின்றிருக்கும் அவன், இவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தான். 

"இங்கேதான் பார்க்கறான்... அம்மா, நீ ஏன் அங்கே பார்க்கறே?" என்று பல்லைக் கடித்தார் குஞ்சுமணி. 

"யார்ரா அவன்? பூட்டிக் கிடக்கற வீட்டண்ட என்ன வேலை? கேள்வி முறை கிடையாதா? யாரு நீ?" என்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் குரலை உயர்த்திச் சப்தமிட்டவாறே பால் செம்புடன் கையை நீட்டி நீட்டிக் கேட்டுக்கொண்டு, அவனை நோக்கி நடந்த சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் குஞ்சுமணி. 

"அவன் யாரு தெரியுமோ? முன்னே ஒரு நாள் காலையிலே எங்கேயோ திருடிட்டு, அவா துரத்தறச்சே ஓடி வந்து நம்ப காம்பவுண்டுச் சுவரிலே ஏறிக் குதிச்சுக் காலை ஒடிச்சிண்டு, இந்தக் கோனார் கையிலே மாட்டிண்டு அடிபட்டானே...." 

"சொல்லு..." 

"பத்து மணிக்குப் போலீஸ்காரன் வரவரைக்கும் வேப்பமரத்திலே கட்டி வச்சு, போறவா வரவா எல்லாரும் ஆளுக்கொரு தர்ம அடி போட்டாளே..." 

"ஆமா..." 

"நான் கூடப் பால் குவளையாலே கன்னத்திலே ஓங்கி இடிச்சேனே... அவன்தான் - அந்தத் திருடன்தான் வந்திருக்கான்... திருடறதுக்கு இல்லே. எல்லாருக்கும் திருப்பிக் குடிக்கறத்துக்கு..."

"குடுப்பான்... குடுப்பான். மத்தவா கை பூப்பறிச்சுண்டிருக்குமாக்கும்... திருடனைக் கட்டி வச்சு அடிக்காம கையைப் பிடிச்சு முத்தம் குடுப்பாளாக்கும்...? என்ன கோனாரே! இந்த அக்கிரமத்தைப் பாத்துண்டு நிக்கறீரே? மரியாதையா காம்பவுண்டை விட்டு வெளியே போகச் சொல்லும்... இல்லேன்னா போலீஸைக் கூப்பிடுவேன்னு சொல்லும்" என்றூ அந்தக் காலனியையே கூட்டுகிற மாதிரி 'ஓ' வென்று கத்தினாள் சீதம்மாள். 

அவளுடைய கூக்குரல் கிளம்புவதற்கு முன்னாலேயே அந்தக் காலனியில் ஓரிருவர் பால் வாங்குவதற்காகவும், குழாயடியில் முந்திக் கொள்வதற்காகப் பாத்திரம் வைக்கவும் அங்கொருவர், இங்கொருவராய்த் தென்படலாயினர். 

இப்போது சீதம்மாளின் குரல் கேட்ட பிறகு, எல்லாருமே அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணையின் மேல் வந்து உட்கார்ந்திருக்கும் அந்த அவனைப் பார்த்தனர்; பார்த்ததும் அடையாளமும் கண்டனர். சுப்புக் கோனார் மாதிரியும், குஞ்சுமணி மாதிரியும் அவனது பிரசன்னத்தைக் கண்டு அவர்களும் அஞ்சினர். 

கூட்டம் சேர்ந்த பிறகு கோனாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. 'என்ன இவன்?... பெரிய இவன்!... திருட்டுப் பயல்தானே? அன்னிக்கு வாங்கின அடி மறந்திருக்கும். என்ன உத்தேசத்தோட வந்திருப்பான்னுதான் யோசிச்சேன்...' 

மப்ளரை உதறித் தோளில் போட்டுக் கொண்ட கோனார், பலமாக ஒரு கனைப்புக் கனைத்தான். 

'ம்...' என்று குஞ்சுமணி அந்தக் கனைப்பை மனசுக்குள் சிலாகித்துக் கொண்டார். 

கோனார், தைரியமாக, கொஞ்சம் மிரட்டுகிற தோரணையுடனேயே அவன் உட்கார்ந்திருந்த அந்தத் திண்ணையை நோக்கி நடந்தான். அவனுக்குத் துணையாக - ஏதாவது நடந்தால் விலக்கி விடவோ, அல்லது கூச்சலிடவோ ஒரு ஆள் வேண்டாமா? அதற்காக - குஞ்சுமணியும் கோனாரின் பின்னால் கம்பீரமாக நடந்து சென்றார். 

"எலே!... உன்னை யாருன்னு இங்கே எல்லாருக்கும் தெரியும்... இடம் தெரியாம வந்துட்டே போல இருக்கு. வேறே ஏதாவது தகராறு வரதுக்கு முன்னாடி இந்தக் காம்பவுண்டை விட்டு வெளியே போயிடு" என்று கோனார் சொல்லும் போது - 

"ஆமாம்பா... தகராறு பண்ணாம போயிடு... நோக்கு இடமா கிடைக்காது?" என்று குஞ்சுமணியும் குரல் கொடுத்தார். 

அவன் மெளனமாக ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். பின்னர் சாவதானமாய் இடுப்பை எக்கி பெல்ட்டோ டு தைத்திருந்த ஒரு பையைத் திறந்து, நான்காய் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தைத் கோனாரிடம் கொடுத்துவிட்டு, அதிலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து, அந்தப் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். 

கோனார் அந்தக் காகிதத்தைக் குஞ்சுமணியிடம் கொடுத்தான். குஞ்சுமணி அதை வாங்கிப் பார்த்ததும் வாயைப் பிளந்தார். 

"என்னய்யா கோனாரே... முதலியார் கிட்டே இரண்டு மாச அட்வான்ஸ் ஐம்பது ரூபாய் கட்டி, ரசீது வாங்கிண்டு வந்திருக்கானய்யா..." என்று ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டார். 

"நன்னா இருக்கே, நாயம்! சம்சாரிகள் இருக்கற எடத்துலே திருட்டுப் பயலைக் கொண்டு வந்து குடி வெக்கறதாவது? இந்த முதலியாருக்கென்ன புத்தி கெட்டா போயிடுத்து? ஏண்டா குஞ்சுமணி! நானும் இந்த வீடு காலியான பதினைந்து நாளா சொல்லிண்டு இருக்கேனோன்னோ? நம்ப சுப்புணி பிள்ளை பட்டம்பி இங்கே ஏதோ 'கோப்பரேட்டி' பரீட்சை எழுத வரப் போறேன்னு கடிதாசி எழுதினப்பவே சொன்னேனே.... 'அந்த முதலியார் மூஞ்சியிலே அம்பது ரூபாக் காசை 'அடுமாசி'யா விட்டெறிஞ்சுட்டு இந்த இடத்தைப் பிடிடா'ன்னு சொன்னேனோன்னோ?... நேக்கு அப்பவே பயம்தான்... வயசுப் பொண்கள் இருக்கற எடத்துலே எவனாவது கண்ட கவாலிப் பயல் வந்துடப்படாதேன்னு... பாரேன்.... அவனும் அவன் தலையும்.... கட்டால போறவன்... பீடி வேறே பிடிச்சுண்டு... என்ன கிரகசாரமோ?" என்று முடிவற்று முழங்கிக் கொண்டிருந்த சீதம்மாளை வாயைப் பொத்தி அடக்குவதா, கழுத்தை நெரித்து அடக்குவதா என்று புரியாத படபடப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முகத்துக்கு நேரே இரண்டு கையையும் நீட்டி - 

"அவன் காதுலே விழப் போறது. வாயை மூடு.... அவன் கையால எனக்கு அடி வாங்கி வெக்கறதுன்னு கங்கணம் கட்டிண்டு நிக்கறயா? எவனும் எங்கேயும் வந்துட்டுப் போறான். நமக்கென்ன?" என்று கூறிச் சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் குஞ்சுமணி. 

"நேக்கு என்னடா பயம்? நோக்கு பயமா இருந்தா, நீ ஆத்துக்குள்ளே இரு... புருஷாள்ளாம் வெளிலே போயிடுவேள்; நாங்க பொம்மனாட்டிகள்னா வயத்துலே நெருப்பைக் கட்டிண்டு இங்கே இருக்கணும்... இப்பவே குழாயடியிலிருந்த தவலையைக் காணோம்... கொடியிலே உலர்த்தியிருந்த துணியைக் காணோம்... போறாக்குறைக்கு திருடனையே கொண்டு வந்து குடி வச்சாச்சு... காதுலே மூக்கிலே ரெண்டு திருகாணி போட்டுண்டிருக்கற கொழந்தைகளை எப்படித் தைரியமா வெளிலே அனுப்பறது? ஓய்.... கோனாரே, பேசாம போய் போலிசுலே ஒரு 'கம்ப்ளேண்டு' குடும். இதே எடத்துலே இவனைப் பிடிச்சுக் குடுத்திருக்கோம்" என்று வழி நெடுக, வாயைப் பொத்துகிற மகனின் கையைத் தள்ளித் தள்ளிப் புலம்பியவாறு வீட்டுக்குள் சென்ற சீதம்மாள், உள்ளே இருந்தும் உரத்த குரலில் அந்தத் தெருவுக்கே அபாய அறிவிப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள். 

இதற்கிடையில், சுப்புக் கோனார், வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த பசுவின் மடியில் பாலை ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைப் பார்த்துவிட்டுக் கோபமாக வைது கொண்டு ஓடி வந்தான். பசுவின் மடியில் கொஞ்சங்கூட மிச்சம் வைக்காமல், உறிஞ்சிவிட்ட எக்களிப்பில், வாயெல்லாம் பால் நுரை வழியத் துள்ளிக் கொண்டிருந்தது கன்றுக் குட்டி. பசு, கோனாரைக் கள்ளத்தனமாகப் பார்த்தது. ஆத்திரமடைந்த கோனார் பசுவின் காலைக் கட்டியிருந்த அணைக் கயிற்றை அவிழ்த்துச் 'சுரீர்' என்று ஒன்று வைத்தான். அடுத்த அடி கன்றுக் குட்டிக்கு. பசுவும் கன்றும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு காம்பவுண்டு கேட்டைத் தாண்டி ஓடின. 

கையில் பால் செம்புடன் வெளியில் வந்த சீதம்மாளைப் பார்த்துச் சுப்புக் கோனார் கத்தினான்: "பாலுமில்லை ஒண்ணுமில்லை, போங்கம்மா... கன்னுக்குட்டி ஊட்டிப்பிடுத்து... இந்தத் திருட்டுப் பய முகத்திலே முழிச்சதுதான்" என்று சொல்லிக் கொண்டே இது தான் சந்தர்ப்பமென்று அவனும் அங்கிருந்து நழுவினான். 

திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டிருந்த குஞ்சுமணி, "மத்தியானத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடு" என்று குரல் கொடுத்தார். 'அதற்குள்ளே இங்கு என்னென்ன நடக்கப் போகிறதோ?' என்று எண்ணிப் பயந்தார். 

சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் காலனி முழுவதும், ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாள் விடியற்காலையில், எங்கோ திருடிவிட்டு, தப்பி ஓடிவந்து, சுவரேறிக் குதித்து, இங்கே சிக்குண்டு, எல்லோரிடமும் தர்ம அடி வாங்கி, போலீசில் ஒப்படைக்கப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்ற ஒரு பழைய கேடி, இங்குள்ள, இத்தனை நாள் காலியாக இருந்த, இதற்கு முன் ஒரு கல்லூரி மாணவன் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அந்தக் கடைசிப் போர்ஷனில் குடி வந்திருக்கிறான் என்கிற செய்தி பரவிற்று. 

திண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தத் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார். ஆமாம். அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் ஓங்கி இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களூக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார். 

'அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸிலே வேலை செய்யற நாயுடு - சைக்கிளிலே வந்தவன் - சைக்கிளிலே உக்காந்தபடியே, ஒரு காலைத் தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே... அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்க மாட்டான்னு நெனைச்சேன்... இப்போ திரும்பி வந்திருக்கான்! அவனை இவன் சும்மாவா விடுவான்? இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான்? பெரிய கொலைகாரனாகவும் இருப்பான் போல இருக்கே...' என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே அந்த மஸ்லின் ஜிப்பாகூட இல்லை. முண்டா பனியனுக்கு மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் 'பிலுபிலு'வென வளர்ந்திருக்கிறது. தோளூம் கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன. 

'ஐயையோ... கத்தியை வேற எடுத்துண்டு வரானே... நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்... இங்கேதான் வரான்!' என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று 'படா'ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார். 

அவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான். 

'ஏண்டாப்பா... எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சான். அவனையெல்லாம் விட்டுட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே?... இந்த அம்மா கடன்காரி வேற உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா... நேக்குப் புரியறது... மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே 'லேசா' ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு... என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே?' என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி. 

அந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். 'அடப் போறாத காலமே! ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான்!' என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு. 

'எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன?' என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும் பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் - சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, 'படக்'கென்று அரை அடி நீளத்துக்கு 'பளபள'வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான். 

குஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு, சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: 'நல்ல வேளை! தப்பிச்சே... ஆத்தை விட்டு வெளிலே வராதே... பலி போட்டுடுவான், பலி!' 

அவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார். 

அவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துலக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும் குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு அவனே எழுந்து உள்ளே போனான். 

அங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும் அவன் வெளியே தலை காட்டவே இல்லை. 

அந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவும், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும், "வீட்டில் பெண்டு பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி. 

"ஆமாம் ஆமாம்" என்று அவர் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுப் பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள். 

அப்படிப் போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார். 

காலை பதினொரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான். 

வீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டு விட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான். 

இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான். 

காலனியில் ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து 'தப தப'வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான். 

திடீரென்று, 

"மாமா... உங்க பனியன் மண்ணிலே விழுந்துடுத்து..." என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது. 

அப்போதுதான் அவன் பயந்தான். 

தன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை யாராவது பார்த்து விட்டார்களோ? என்று சுற்று முற்றும் திருடன் மாதிரிப் பார்த்தான். 

"நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?... உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா... அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு... அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு..." 

அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோ டு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான். 

அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை: "அம்மா பாத்தா அடிப்பா... சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன்..." 

அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான். 

ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான். 

திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! 'இது உன் வீடு' என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு. 

அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். 'யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ?' என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது. 

"பாப்பா... பாப்பா" என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான். 

'உஸ்' என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு கதவுக்குப் பின்னால் ஒளிந்து, காத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது. 

"இங்கேதான் இருக்கேன்... வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ" என்று அவனை இழுத்து உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை. 

குழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான். 

"எல்லாம் எனக்கே எனக்கா?" 

"ம்..." 

இரண்டு மூன்று சாக்லெட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில் இனிப்பின் சாறு வழிந்தது. 

"இந்தா! உனக்கும் ஒண்ணு" என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும் தந்தபோது - 

"ராஜி... ராஜி" என்ற குரல் கேட்டதும் குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது. 

"அம்மா தேடறா..." என்று அவனிடம் சொல்லி விட்டு "அம்மா! இங்கேதான் இருக்கேன்" என்று உரத்துக் கூவினாள் குழந்தை. 

"எங்கேடி இருக்கே?" 

"இங்கேதான்... திருட வந்திருக்காளே புது மாமா! அவாத்திலே இருக்கேன்." 

அவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே கொடுத்து, "அம்மா அடிப்பாங்க. இப்போ போயிட்டு அப்புறமா வா" என்று கூறினான் அவன். 

"மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா... இதோ! மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்புறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷீக்குக் கூட..." 

குழந்தை போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான். 

மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன் வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி, பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டுச் சற்று நேரம் படுத்து உறங்கினான். 

நான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினான். 

குழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீதம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. 

போலீஸ்காரரை வணங்கிய பின் தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன். 

"தெரியும்டா... பொல்லாத ரசீது... ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா? உடனே யோக்கியனாயிடுவியா, நீ? மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும். என்ன? நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு... என்னைக்கிடா நீ ரிலீஸானே?" என்று மிரட்டினான் போலீஸ்காரன். 

"முந்தா நாளுங்க, எஜமான்" என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன. 

அப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார். 

முதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோ டி வந்தார். 

"உங்களுக்கே நன்னா இருக்கா? நாலு குடித்தனம் இருக்கற எடத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா?" 

'வாக்கிங் ஸ்டிக்'கைத் தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார். 

"அட அசடே! அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும்? திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா? அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு... அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே?" என்று குஞ்சுமணியைச் சீதம்மாள் அடக்கினாள். 

முதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன் வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான். 

"இங்கே உனக்கு என்ன வேலை?" என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார். 

"இவன் ஒரு கேடி, ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க. அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்." 

முதலியார் அவனையும் போலீஸ்காரனையும் மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார். 

"என்னுடைய 'டெனன்டை' காலி பண்ணச் சொல்றதுக்கு நீ யார்? மொதல்லே 'யூ கெட் அவுட்'!" 

முதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான். 

"எஸ், ஸார்" என்று இன்னொரு முறை சலாம் வைத்தான். 

"அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க? திருடாதப்போ அவன் எங்கே போறது? அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ" என்று கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார். 

"ஓய், குஞ்சுமணி! இங்கே வாரும். உம்ம மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர் திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படறீர். நான் ஜெயிலுக்குப் போகாத பல திருடன்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்." என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார். 

"என்ன கோனாரே... நீயும் சேர்ந்துகிட்டு யோக்கியன் மாதிரிப் பேசிறியா?... நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே?..." என்று கேட்டபோது கோனார் தலையைச் சொறிந்தான். 

கடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார்: 

"இந்தாப்பா... உன் கிட்டே நான் கை நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா எங்கிட்டே சொல்லு. நான் பாத்துக்கறேன்..." என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார். 

அன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தன். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது. 

காலையில் பால் கறக்க வந்த கோனார் அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான். 

குஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து பசுவைத் தரிசனம் செய்தார். 

குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீதம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது. 

அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள். 

மத்தியானமாயிற்று; மாலையாயிற்று. மறுநாளும் ஆயிற்று... 

இரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும், அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள். 

அந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும் ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி, திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது. 

மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது. 

"ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?" என்று கண்களைக் கசக்கிக் கொண்டு தனிமையில் அழுதது குழந்தை. 

(எழுதப்பட்ட காலம்: 1969) 

நன்றி: அனைத்திந்திய நூல் வரிசையில் நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி, "ஜெயகாந்தன் சிறுகதைகள், - ஜெயகாந்தன்" தொகுப்பு. (1973)


நன்றி ; அழியாச்சுடர்கள் 

Saturday, 20 December 2014

முத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்

  -ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா)

( செம்மொழித்தமிழ்  உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது   உரை- ஜனவரி 2014, புதுக்கோட்டை)
---------------------------------------------------------------------------------------------------------------

மனிதகுல நாகரிகம் நதிக்கரையில் தோன்றி வளர்ந்ததென்று பார்க்கிறோம். உணவு தயாரிக்கவும், உடை உடுத்தவும், இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதுமான அடிப்படை தேவைகளையும் - உற்பத்தி முறைகளையும் அறிந்து கொண்டது மட்டும் நாகரிகமல்ல. ஆண் பெண் தாம்பத்ய உறவை முறைப்படுத்திக் கொண்டதும், மொழியை வடிவமைத்து சிந்தனைக்கு உருவங்கொடுத்தும் தான் உண்மையான நாகரிகம்.

அம்மாதிரியான மொழி நாகரிகத்தில் உலக அளவிலான மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, சீனம், வடமொழி ஆகியவற்றோடு கால ஓட்டத்தில் முன்னும் பின்னுமாய் ஊடாடி இன்றைக்கும் மொழிகள் குலத் தனி விளக்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பது தமிழ்.

கிரேக்கமொழி ஹோமரின் இலியட்;, ஒடிசி ஆகிய மகாகாவியங்களாலும் ஹெரடோட்டஸின் வரலாற்றுப் பதிவுகளாலும், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவ நூல்களாலும் சிறந்திருந்த காலம் உண்டு.

இலத்தீன் இனீட் ஈக்கலாக், ஜார்ஜிக்ஸ் ஆகிய காவியங்களாலும் வர்ஜில், சிசிரோ படைப்புகளாலும் சிறந்திருந்த காலம் உண்டு.

பாரசீகம் ருதகி, பிர்தௌசி ஆகியோரது காப்பியங்களாலும், நிஜாமியின் புனைகதைகளாலும், ரூமியின் மறைப்பாடல்களாலும் சிறந்திருந்த காலம் உண்டு.
   ஹீப்ரு, விவிலியத்தின் மொழியாக இருந்து தன்னுள் தேவனின் வேதத்தை தாங்கி சிறந்திருந்த காலம் உண்டு.

சீனம் கன்பூசியஸ், லாவுட்ஸ் ஆகிய தத்துவவாதிகளாலும், தாவோ நெறிகளாலும், உச்சத்தை அடைந்த காலம் உண்டு.

தமிழ் அகமும் புறமும் சார்ந்த சங்க இலக்கியங்களால் மானிட வாழ்வுப் பதிவை மாண்புறச் செய்து தன்னை செவ்வியல் மொழியாக்கிக் கொண்ட காலம் உண்டு.

வேதங்களின் தத்துவ விசாரணைகளை, தன்னகத்தே தாங்கி செழுமையான மொழியாக சமஸ்கிருதம் வெற்றிகண்ட காலம் உண்டு.
இவற்றுள் இன்றைக்கும் உயிரோடு புழக்கத்தில் வெற்றிகரமாய் வலம் வருகிற மக்கள் மொழிகளாய் திகழ்பவை. இரண்டு தான் ஒன்று சீனம், மற்றொன்று தமிழ்.

அத்தகைய செவ்வியல் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழிக்கு, உலக அறிஞர்கள் அனைவராலும் செம்மொழி என அறிவுப்பரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்மொழிக்கு, நமது இந்திய அரசு செம்மொழி தகுதி அளித்து அங்கீகரிக்க வேண்டுமென நாம் பரிதிமாற் கலைஞர் காலத்திலிருந்து நடத்திய கோரிக்கைச் செயல்பாடுகளின் விளைவாக 12.10.2004-ல் நடுவண் அரசு ஒரு அரசாணை மூலம் தமிழுக்கு செம்மொழிப் பட்டியல் தகுதியை வழங்கியது.

அந்த அரசாணை ஒரு செவ்வியல் மொழிக்கான தொன்மை, இலக்கிய மூலங்கள் மற்றும் அசல்தன்மை ஆகியவற்றை பற்றியெல்லாம் குறிப்பிடுகிறது. அவையெல்லாம் கூட நமக்கு முக்கியமில்லை.

அரசாணையின் பத்தி 1 இப்படி ஆரம்பிக்கிறது. இந்திய அரசு செவ்வியல்மொழிகள் என ஒரு புது மொழிப்பிரிவினை உருவாக்குவதென முடிவு செய்துள்ளது.

இதன்பொருள் என்ன? இப்போதுதான் செவ்வியல் மொழிப் பிரிவு என்ற ஒன்றே தொடங்கப்படுகிறது எனில் ஏற்கனவே பட்டியலில் உள்ள சமஸ்கிருதம், பாரசீகம், அரேபியம், பாலி, பிராக்கிருதம் ஆகிய மொழிகள் எப்படி செவ்வியல் மொழிப்பட்டியலில் உள்ளன என கேள்விகள் எழுவது இயற்கை.

இன்று செம்மொழி தகுதி அறிவிப்புக்கு பிறகு தமிழுக்கு வழங்கப்படும் சிறப்புகளும் ஆய்வு நிதிவகைகளும், மேற்கண்ட ஐந்து மொழிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பெற்று வருகின்றன.

அப்பட்டியல் எப்படி வந்தது? 1835-ல் மெக்கால பிரபு இந்நாட்டுக்கான கல்வித் திட்டத்தை முடிவுசெய்ய ஆலோசனைகளை பெற்ற போது ஆங்கில வழிக் கல்வி மற்றும் அறிவியல் கல்வியை ஏற்றுக் கொண்டவர்கள் மேலைச் சிந்தனையாளர்கள் எனவும் இம்மண்ணின மொழிகளையும் கலை கலாச்சாரத்தையும் கற்க வேண்டும் என்றவர்கள் கீழைச் சிந்தனையாளர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
மெக்காலே பிரபு மேலைச்சிந்தனையாளர்களின் ஆலோசனைகளை ஏற்று ஆங்கிலம் அறிவியல் கலந்த மேலைக் கல்வியை நடைமுறைப்படுத்திவிட்டு கீழைச் சிந்தனையாளர்களையும் ஆதரிப்பதற்காக பண்டைய மொழிகளை அங்கீகரிக்க அவற்றின் வழியாகவும் கல்வி வழங்க ORIENTAL SCHOOLS   ஏற்பாடு செய்தார்.

அந்த காரணத்தில் பட்டியலில் அமைந்த அம்மொழிகள் நாளடைவில் இந்தியாவின் செம்மொழிகள் என்று ஆகிப்போயின.

ஆக எந்த அரசாணையின் மூலமும் இன்று நாம் புரிந்து கொள்கிற செம்மொழி என்ற பொருளில் அம்மொழிகள் அறிவிக்கப்படவில்லை.

ஆக இந்தியாவின் அரசாணைப்படியான முதல் மற்றும் ஒரே செம்மொழி தமிழ் மட்டும்தான்.

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம், தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்குவதற்கான பரிசீலனைக் கோப்பில் 41 தமிழ்நூல்களை ஆதார நூல்களாய் வைத்திருந்தது.

அவை பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய மேற்கணக்கு நூல்கணக்கு நூல்கள் 18, அறநூல்களில் பதிணென் கீழ்கணக்கு நூல்கள் 18, காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை – 2, தொல்காப்பியம் 1, இறையனார் அகப்பொருள் 1, மற்றும் முத்தொள்ளாயிரம் 1 ஆகியவை அந்த 41 நூல்களாகும்.

ஆக தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்த 41 நூல்களுள் ஒன்று என்ற சிறப்பை “முத்தொள்ளாயிரம்” பெறுகிறது.

அம் முத்தொள்ளாயிரத்தை அழகியல் நோக்கில் நாம் காணக் கிடைத்திருக்கிற இவ்வாய்ப்பினை எண்ணி மகிழ்கிறேன்.

நண்பர்களே, தமிழ்க்கவிதை இரண்டாயிரமாண்டு கால வாழ்வியல் அனுபவத்தைக் கொண்டது. நம் ஒவ்வொருவரின் அணுத்திரளிலும் நம் முன்னோர்களது கவிப்பிரதிகள் மிதந்துகொண்டிருக்கின்றன.
அதனால்தான் அனைத்துமே உரைநடையாயிருக்கிற இந்த நவீன காலத்திலும் ஒரு நவீன இளைஞன் கவிதை வரிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிற வாழ்த்து அட்டைகளின் மூலம் தம் அன்பை பரிமாறிக் கொள்ள விரும்புகிறான். ஒரு சமானியன் தன் காதல் பெண்ணை கவிதைகளால் அர்ச்சிப்பதையே விரும்புகிறான்.

திரையரங்குகளில் எதுகை மோனைகளோடு உள்ள வசனங்களை தமிழன் கைதட்டல்களால் ஆர்ப்பரித்து ரசிக்கிறான்.

நுட்பமாக கவனித்தால் தமிழின் அடுக்குகளும் அலங்காரங்களும் சிலேடைகளும் அணிநயங்களும் இலக்கிய வரிகளும் தமிழ் மண்ணில் ஆட்சி அதிகாரங்களை சாத்தியப்படுத்தி இருப்பதை நாம் பார்க்க முடியும்.

இவற்றிலிருந்தெல்லாம் தப்பி ஒருவன் பேருந்தில் ஏறினால் கூட கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்று இரண்டாயிரம் ஆண்டுகால கவி மரபு கையைப் பிடித்து இழுக்கிறது.

அப்படி தமிழ்க்கவிதை நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாதையில் சென்று முத்தொள்ளாயிரத்தின் அழகியல்களைக் காணலாம்.

படைப்பு அனுபவங்களின் அடிமனச் சர ஓடையில் இறங்கி உணர்வுகளின் அழகை வகைப்பிரித்து உணர்தலே அழகியல் பார்வை.

தமிழில் அழகியல் என்றும் ஆங்கிலத்தில் AESTHETICS என்றும் இந்திய மரபில் ‘ரசம்’ என்றும் இவ்வுணர்வு குறிக்கப்படுகிறது.

தமிழில் காதல், நகை, இரக்கம், கோபம், வீரம், அச்சம், வெறுப்பு, வியப்பு, தன்மை என்று வகைபெறும் அழகியல் கோட்பாடு வடமொழியில் சிருங்கார், ஹாஸ்யம், கருணை, ருத்திரம், வீர், பயனாகம், பீபஸ்தம், அற்புதம் மற்றும் சாந்தம் என்று நவரசக் கோட்பாடாகிறது.
   நகை அழுகை  இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை
என்று மெய்ம்மை அழகியலை தொல்காப்பியம் பேசுகிறது.

என்றாலும் கோட்பாடுகளின் வழிகளில் நில்லாமல் நம் மனம் சார்ந்த ரசனையின் அடிப்படையிலேயே,  அனுபவப்புரிதல்களின் அடிப்படையிலேயே, முத்தொள்ளாயிர அழகியலை நாம் அணுகலாம்.


பாடலெங்கும் கதவுகள்… அழகின் திறப்புகள்

உள்ளே நுழையும்போது வாயில் இருக்கிறது. வாயிலெங்கும் கதவுகள் இருக்கின்றன. கதவுகள் தோறும் அழகின் மூடலும் திறப்பும் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கின்றன.

கதவு1
சேரன்கோதை உலாவருகின்றான் அவனை  காணவிடாமல் தாயார்கள் கதவுகளை அடைக்க, காணும் ஆர்வத்தில் இளம்பெண்கள் கதவுகளைத் திறக்க கதவுகளின் உச்சியில் அமைந்துள்ள நிலையோடு பொருந்திய இணைப்புக் குமிழ் தேய்ந்தது என்கிறான் கவிஞன்.
“தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே ”  என்று மட்டும்  சொல்லி நிறுத்தவில்லை. அடுத்து வருகிற சில குறியீட்டுச் சொற்கள் நுட்பம் வாய்ந்தவை.
“ஆய்மலர் வண்டு உலா அங்கண்ணி”

சேரனின் மாலையில் தேர்ந்தெடுக்கப்பெற்ற மலர்கள்: மன்னனின்  மார்பை அலங்கரிக்கும் மலர்களல்லவா! வண்டுகள் உலாவும் மாலை.
ஆவலுடன் பார்க்கும் பெண்களுக்கு மலர்களை குறியீடாக்கினால் ஒரு பொருளும் வண்டுகளை குறியீடாக்கினால் எதிர்ப்பொருளும் வருவது அழகு.

தாயார் கதவுகளைச் சாத்துவதிலும் உட்காட்சி இருக்கிறது. அவர்களின் மனக் கதவுகளும் ஒரு காலத்தில் திறந்து மூடியவை தானே காதல் மாயையை கண்டுமயங்கும்  மகளை காக்கத் துடிப்பது நியாயந்தானே.

“கண்டுலா அம் வீதிக் கதவு” என பாடல் முடியும் அம் - என்பதை அழகிய என்றும் கொள்ளலாம். உ.வே.சா. உரைப்பது போல் அகம் என்றும் கொள்ளலாம்.

கதவு2
சேரன் மீது காதல் வயப்பட்ட பெண்ணை வீட்டுக்;குள் வைத்து கதவினை அடைத்தாள் அனிக் கதவம் அன்னை
சேரனையும் என்னையும் இணைத்து பேசும் வாய்களை அடைக்க அவனால் முடியுமோ எனக் கேட்கிறாள்தலைமகள்.
‘என்னை யவன்மே லெடுத்துரைப்பார்
வாயு மடைக்குமோ தான்”.
இதை அலர்நாணல் என மெய்ப்பாடு காண்பார் தொல்காப்பியர்

கதவு 3
சேர மன்னனைக் காண கதவருகே செல்கிறாள் அவள். ஆர்வத்தால் முன்சென்ற அவள் நாணத்தால் பின்வாங்குகிறாள்.

“காணிய சென்று கதவடைத்தேன் - நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு.
செல்வம் படைத்தவரிடம் பொருள் கேட்க செல்லும் வறுமையுற்றவர் போல... வரும் செல்லும் நெஞ்சம்.


கதவு 4
சேரனைக் காணச் செல்கிறாள் அவள்.

பனியின் மார்கழியில் அரண்மனைக் கதவருகில் குளிருக்கு இரண்டு கைகளாலும் போர்த்திக் கொண்டு நிற்கிறாள்.

வீட்டுக்கதவைத் தாண்டி வெளியே போய்விட்டாளே என்று ஆச்சரியப்பட்டால் கடைசி வரி அதை கலைத்து விடுகிறது.

கடைசி வரி ..... “காணிய சென்றவென் னெஞ்சு”
மனம்’ கிடந்து அலைந்து திரிகிறது. மன்னவனைப் பார்க்க....

“பொறி நுதல் வியர்த்தல்” என்று மெய்ப்பாடு கண்ட தொல்காப்பியர் ... இந்த பொறி மனம் சென்றலைதலை “மடன்” என்பார்.

 கதவு 5
     பாண்டிய மன்னனின் பகைவர்களிடம் சொல்லப்படுவதான பாடல்
“கண்ணார் கதவந் திறமின்...” உங்கள் கண்கவர் கதவுகளைத் திறந்து விடுங்கள் பகைவர்களே .. பாண்டியன் தான் பிறந்த இந்த நட்சத்திரத்தில் உங்களுடன் போர்புரிய வரமாட்டான் என்கிறது அந்தப்பாடல்.
கதவு 6
பகைவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் தும்பை மாலை அணிந்திருக்கும் பாண்டியனின் யானையின் ஒரு தந்தம் பகை மார்பை கிழிக்கும் மறுதந்தம் கோட்டைக் கதவை உடைக்கும்.

“பெருகோடு மாற்றார் மதில் திறக்குமால்”

கதவு 7
அன்னை காவல் நிறைந்த வீட்டில் வைத்து இரண்டு கதவுகளையும் அடைத்துவிட்டுச் சென்ற பிறகும் பாண்டியனின் காண முடிகிறது தாம் அவளுக்கு எப்படி அவள் நன்றி தெரிவிக்கிறாள். கதவில் சாவித்துளையை வைத்தவருக்கு..

நன்னலங் காண கதவந் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி.

பொன்னூறிய பசலை
      காதல் நினைவுகளால், பிரிவின் ஏக்கத்தால், ஆற்றா முடியாத ஆவலால், காதல் மகளிர் நலிவுற்று அழகுவாடி தளர்கின்ற, சோழை இழக்கின்ற “பசலையைத் தான் தமிழின் இலக்கியச் சாளரங்களில் நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால் இங்கு ஒரு இளம்பெண் கூறுகிறாள்.

மாமையிற் பன்னூறு கோடி பழுதோ என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு”

சேரன் உலாவை கண்ட பெண்கள் காதல் விரகத்தில் அயர்களது அழகை வேண்டுமானால் இழக்கலாம்.  ஆனால் அவர்கள் அடையும் “பசலை” யானது அழகைவிட பலநூறு கோடிப்பங்கு உயர்ந்தது “என்கிறாள் அதுவும் அப்பசலை பொன்ஊறித் ததும்பி மேனியில் பிரகாசிப்பது போல் இருக்கிறது.
இப்படியொரு பசலையை அநேகமாக இங்குமான் பார்க்கின்றோம்.

நவீன கவிதைப் பாணியில்
வினை ஒரு இடத்திலும் அதன் விளைவு ஒரு இடத்திலும் அழகுற அமைந்து தொடர்புகொண்டு பொருள் தருவது நவீன கவிதை வடிவத்தில் ஒன்று.

மகளை கரைசேர்த்த தந்தை முழுகிப்போனார்.
அவன் குடித்தான், குடும்பம் தள்ளாடியது.
அவன் பொட்டில் அடித்தான், அவன் மனைவி பூவை இழந்தாள்.
அவன் ரிக்ஷாவின் பெடலை மிதித்தான் குடும்பம் ஓடியது.

இந்த நவீன பாணியில் முத்தொள்ளாயிரத்தை பாடல் இருப்பது அதுதான் இப்போது நவீனமாகியிருக்கிறது என நமக்கு புரிய வைக்கிறது.

கிள்ளி வளவனின் யானை காலை எடுத்து வைத்தால், சங்கிலிப் பிணைப்பு மட்டும் விடுபடுவதில்லை. பகை மன்னர்களின் மான் போன்ற பார்வையினை உடைய மனைவியரின் மங்கலநாணும் அறுபட்டு விழுமாம்.
“புல்லாதார் – மானனையார் மங்கல நாண் அல்லவோ – தான
மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேற்கிள்ளி
புழைத்தடக்கை நால்வாய் பொருப்பு”
யானை சங்கிலியை அறுத்தால் - அங்கு
மங்கலநாண்கள் அறுபடுமாம்.

சுடும் பனிக்காற்று

இளம் மகளிரின் பசலைக்கும் தீராத் தாபத்திற்கும் குழலிசையும், இனிய பனிவாடையும் கூட காரணமாக இருக்கின்றன.

மண்ணுலகைக் காப்பதில் சிறந்தவனாகிய சோழன் மாலைப்பொழுதில் கோவலர்கள் இனிமையாக இசைக்கும் குழல் ஒலியால் துன்புறும் என்னைக் காக்க மாட்டானோ,

“காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்”
என்று வினவுகிறாள் ஒரு பெண்.

0 இன்னொரு பெண்ணோ “பேயோ பெருந்தண் பனிவாடாய்” என்று குளுமை வீசும் பனிவாடைக் காற்றைக் கேட்கிறாள். பிரிவில் நாங்கள் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து துன்புறுத்துவது நியாயமா? எனக் கேட்கிறாள்.

அத்திக்காய்  ஆலங்காய் வெண்ணிலவே பாடல்களுக்கெல்லாம் மூலாதார சுருதி முத்தொள்ளாயிரத்தில் அல்லவா. ஒலித்துக்கொண்டிருக்கிறது.
“அலமரல் அசைவளி அலைப்ப என் உயவு நோய் அறியாது துஞ்சும்
ஊர்க்கே” என்ற ஒளவையின் குறுந் தொகை பாடலையும் இது நினைவூட்டுகிறது.



புண்ணின் பெருமை
 வீரன் மார்பிலே புண்பட வேண்டும் என்கிறது புறநானூறு. புறமுதுகு காட்டி முதுகிலே புண்பட்டால் அதைப்போன்ற இழிவு வேறெதுவும் என்ற வீரவாழ்வு வாழ்ந்தான் தமிழன்.

ஆனால் முத்தொள்ளாயிரத்திலோ ஒரு உன்னதமான புண் பேசப்படுகிறது.
சோழனுக்கு திரை  செலுத்த வந்தவர்களில் மணிமுடிகள் அவர்கள் குனிந்து வணங்கிய போது அவனின் பாதங்களில் அழுத்தி அழுத்தி நேற்றைக்கு பலபேர் திரைசெலுத்த முடியாமல் போனது இன்றைக்கும் அப்படித்தான். ஆகவே பொறுத்திருந்து திரை செலுத்த மன்னர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மார்பு புண் வீரத்தின் பெருமிதம் என்றால் பாதப்புண் வெற்றியின் பெருமிதம் அல்லவா?
“முன்றந்த மன்னர் முடிதாக்க - இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி யிலனே”

கவிதை வலைக்குள் உவமை மீன்கள்

உலா வருகின்ற சோழனை சாளரங்கள் வழியாக காண்கிறார்கள் இளம்பெண்கள்.

சாளரத்தின் வெளியிலிருந்து அக்காட்சியைக் காணும்போது வலைகளில் சிக்கிக்கொண்ட கெண்டை மீன்களைப்போல் பெண்ணின் கண்கள் பிறழ்ந்து நகர்கின்றன.
“நீல வலையிற் கயல்போற் பிறமுமே
சாலேக வாயில் தொறுங் கண்”

இக்காலத்தில் ‘விழிமீனே தூண்டில் போடுதே’ என்று நவீன கவி கேட்பதற்கு இங்கல்லவா இருக்கிறது அடிப்படை.




விலங்குகள் காக்கும் வீரமரபு
0 பாண்டியன் மாறனுடைய களிறு தனது தந்தத்தை எழுது கோலாகவும் பகை மன்னர்களின் மார்பு பனை ஓலையாகவும் கொண்டு செல்வம் நிறைந்த இவ்வுலகம் எம்முடையது என எழுதிச் செல்லும்.


“உருத்தரு மார்போலை யாகத் - திருத்தக்க
வையக மெல்லா மெமாதன் றெமுதுமே”

மாறனை கண்டு மட்டுமல்ல ; மாறனின் யானைகளை கண்டே பகைவர்கள் பறந்தோடி விடுவார்கள் என யானையின் வீரம் சொல்லப்படுகிறது.

0 சோழனின் குதிரைகள் பகை மன்னர்களின் மார்பை உதைத்துத் தாக்கியதில் கீழே விழுந்த மணிமுடிகளையும் அணிகலன்களையும் காலால் மிதித்துக் கடந்ததால் அவற்றின் குளம்புகள் பொன் உரைத்த கல் போல விளங்குவதாக அமைகிறது என அழகிய காட்சியில் குதிரை வீரம் பதிவு செய்யப்படுகிறது.

“மன்னது முடியுதைத்து மார்பகத்து பூணுழக்கிப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு.

அகிற் புகையின் வளையங்களாய் கமழும் கனவுகள்

கன்னடத்தில் பழமையான நாகர்ஜுன மானஸ சரித படைப்பில் ஒரு கனவுக் காட்சி அகிற் புகையின் வளைங்களாய் தவழ்ந்தோடும்.

“அக்கா கேளுவா நானொந்து கனாச கண்டே
அக்கி அடுக்கி தெங்கின காயி கண்டே நோவா
மிக்கி மீறி போவேனோ வெம்பதி விளிதனு
சந்திர மல்லிகார்சுனரு கண்டே நோவா...”
என்று அந்த காதற்கன்னியின் கனவு தவழும்...

களியானை தென்னன் கனவின்வந் தென்னை
யளியா னளிப்பானே போன்றான்”

என்று முத்தொள்ளாயிர தலைவிக்கும் கனவில் தென்னன் பாண்டியன் வருகின்றான்.

யானைக்கும் மெய்ப்பாடு
அவள் சோழன் உலாவை லயித்து நின்று பார்க்கிறாள். அவனைச் சுமந்துசெல்லும் யானையின் மீது அவளுக்கு பொறாமை வருகிறது.
அது ஒரு பெண் யானை – பிடி
அவள் கேட்கிறாள். சோழ நாட்டு பெண் யானையே சேரன் எனும் அழகன், வீரன் உன்மேல் அமர்ந்திருந்திருக்கிறானே அவ்வுணர்வு சிறிதும் இன்றி சோழநாட்டு பெண்டிருக்கு உண்டான நாணம் சிறிதும் இன்றி சுமந்து செல்கிறாயே உனக்கு கூச்சம் இல்லையா எனக் கேட்கிறாள்.

நாணின்மை யின்றி நடத்தியால் - நீனிலங்
கண்டன்ன கொண்டல் வருங்கா விரிநாட்டு
பெண்டன்மை யில்லை பிடி.

0 பாண்டியனின் யானை கோட்டை மதிலின் மீது மோதி மதிலை சாய்த்ததில் மதில் அழிந்தது. அதனால் சிதைந்த தன்னுடைய உடைந்த தந்தத்தோடு பெண் யானையிடம் செல்ல நாணம் கொண்டு மணி முடி அணிந்த பகை மன்னர்களின் குடலால் தந்தந்தை மறைத்துக் கொண்டு செனறதாம்.

வெற்றிப் பெருமையை விட நாணமே யானைக்குப் பெரிதாய்ப் போய்விட்டது. காதலின் வலிமைதான் என்னே!
மன்னர் குடறால் மறைக்குமே செங்கனல்வேற்
றென்னவர் கோமான் களிறு”




தரைக்கு வந்த வானவில்

சோழனின் உறையூர் நகரில் மாலைப்பொழுதில் பூக்களை விலை கூறி விற்பவர்கள் கிள்ளி எடுத்துப் போட்ட பூவின் இதழ்கள் வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன.

காலையே
விற்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை யகம்

காலையில் தரைகளில் வானவிற்கள் தோன்றிக் கிடப்பதை போல இருந்து என்று அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

0 இந்தக் காட்;சியை அப்படியே பாண்டிய மன்னனுக்கு கொண்டு செல்கிறது மற்றொரு பாடல்....

பூமிப்பரப்பெங்கும் ஆட்சி செய்யும் மன்னர்கள் தங்கள் தலையில் சூடியிருக்கிய பூக்கள் வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்திருக்கும் பாண்டியன்p மாறனின் காலடியில் குவிந்து கிடக்கும் என்கிறது அப்பாடல்...

“முடிமன்னா சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப்படும்”...

நாராய் நாராய் ....

தமிழில் நாரை பிரபலமானது. ஒரே பாடலில் புகழ்பெற்றார் சத்திமுத்தப்புலவர்.
“பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவள கூர்வாய்”
அழகில் மெய்மறந்து போயிருக்கிறோம் நாம்.
இங்கும் ஒரு நாரை தூது விடப்படுகிறது.

“செங்கான் மட நாராய்” யைப் பார்த்து தூது சொல்கிறாள் அவள். மருதநிலத்தின் இருபுறங்களிலும் கரைகளில் மீன்கள் எதிர் ஏறிவரும் காவிரிநாட்டு சோழனுக்கு என்னுடைய காதல் நோயை எடுத்துக் கூறு என்கிறாள்.

“காவிரி நீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய்”
நாரையிடம் சொல்லும்போது எவ்வளவு கவனமாய் மீன்களை நினைவுபடுத்துகிறாள்  பாருங்கள்.

“யாருமில்லை தானே கள்வன்” எனத் தொடங்கும் குறுந்தொகைப்
பாடலில் “தினைத் தாள் அன்ன சிறு பசுங்கால குருகும் உண்டு ஞான் மணந்த ஞான்றே” என்று தங்களின் காந்தர்வ மனத்திற்கு நாரையை சாட்சி வைப்பாள் தலைவி.. இங்கு தலைவி தூது அளவிலேயே நாரையை வைக்கிறாள். கவனமான தலைவிதான்.


அலர் நாணம்
அவள் வைகை ஆற்றின் குளிர்ந்த நீரில் நீராடினால் இவள் பாண்டியன் மேல்கொண்ட காதலால்தான் இவ்வாறு மகிழ்ந்து நீராடுகிறாள் என்பார்கள். நீராடாமல் இருந்தால் கொண்ட காதலை மறைக்க முயற்சிக்கிறாள் என்று கூறுவார்கள். இவை எல்லாமே துன்பத்தை தருகின்றன என்று கூறுகிறாள்.

“ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றியிருந்தாள் எனவுரைப்பார்”

ஊடலின் சந்தனச் சேறு
மதுரைச் தெருக்களில் மாளிகையின் மேல் மடத்தில் இருந்து இரவுப் பொழுதில் தங்கள் கணவர்களோடு ஊடல் கொண்டு உதிர்த்து விட்ட குளுமையான சந்தனமும் குங்குமமும் தெருவெல்லாம் நிறைந்திருக்க நடந்த செல்வார்க்கு தடுமாற்றம் ஏற்படுகிறது.

மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழுக்கி”

குதிரை வணக்கம்
காதல் தலைவன் கால்வரும் திசை கூட மகளிர்க்கு இன்பம் தருவதாகும். காதல் தலைவனை நினைவூட்டக்கூடிய அல்லது அவனுக்கு தொடர்புடைய அனைத்துமே அவளுக்கு வணங்கத் தக்கதாக இருக்கிறது.

அதனால்தான் அவள் சோழன் உலா வரும்போது சோழனை அல்ல அவனது குதிரையைப் பார்த்தே பரவசமடைந்து காதலால் கசிகிறாள். உணர்ச்சிப் பெருக்கால் கலங்கி நிற்கிறாள்.

ஆனால் தோழியிடமோ தூசியினால் கண் கலங்கிற்று என்பர்.

“பொங்கும் படைபரப்ப மீதெழுந்த பூந்துகள் சேர்ந்
தெங்கன் கடலுழ்ந்தனவால் என்று”

அன்னையின் உன்னதம், அன்னையின் பேதமை
தோழியிடம் சொல்கிறாள் அவள். தோழி, பாண்டியனிடம் என்னைப் பற்றியோ என் ஊரைப் பற்றியோ சொல்லவேண்டாம். உன் நினைவால் கண்துயிலாமல் இருக்கிறாள் என்பதை மட்டும் சொல். அவள் இன்னொன்றும் சொல்கிறாள்.
“நம் அன்னை இப்படிப்பட்டவள்” என்றும் சொல்ல வேண்டாம் அன்னை எப்படிப்பட்டவள் எத்தகைய நடப்பும் குணமும் வாய்ந்தவள் என்ற அடிப்படையில் அவள்தம் மகளை, மக்களை மதிப்பிடும் வழக்கம் அப்போது இருந்திருக்கிறது என்பதை இது சுட்டுகிறது.
 
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், தாயைப் போலப் பிள்ளை போன்வற்றிற்கு அடிப்படை வேர் புரிகிறது.

0 அதே அன்னையின் பேதமையை இன்னொரு தலைமகள் குறிப்பிடுகிறாள். அவளின் நெஞ்சமோ ஒரு பறவையாய் கூட்டைவிட்டு வெளியேறி பாண்டியனைக் கூடி இன்புற எண்ணி சென்றுவிட்டது அதனையறியாத தாய், பறவை வெளியே சென்றறியாமல் வெறுங்கூட்டினை காவல் காக்கும் வேடன்போல் உயிரற்ற என் உடம்பை வீட்டுக்குள் வைத்து பாதுகாக்கிறாள் - என்கிறாள்.

தன் உடம்பை உயிரற்ற வெறுங்கூடு என்றும் உயிர்ப்பறவை மன்னனை நோக்கி சென்றுவிட்டது என்றும் சொல்வதற்கு ஒரு யோகி நிலை வேண்டும் அது முத்தொள்ளாயிரத் தலைவிக்கு வாய்த்திருக்கிறது.

கண் திறந்தால் காட்சி மறைந்துவிடும்
  கம்பனின் சீதை தான் கண்களுக்கு மை தீட்டாத காரணத்தை தோழி நீலமணியிடம் சொல்வாள். கண்ணுக்குள் இராமன் இருக்கிறான் அவன் இருக்கும்
கண்ணுக்குள் கறுப்பை ப+சலாமா !.. அதனால்தான் நான் கண்ணுக்கு மை எழுதவில்லை என்பாள்

இங்கு முத்தொள்ளாயிரத்தில் இரு கைகளாலும் கண்களை மூடிக் கொண்டாள் ஒரு தலைவி  பாண்டியன் என் கண்களுக்குள் புகுந்த விட்டான்.என் உயிர் பிரிந்தாலும் கண்களை மூடிய கைகளை எடுத்து அவனை வெளியே விடமாட்டேன் என்கிறாள் அவள்.
“ஆவி களையினும் என் கை திறந்து காட்டேன் “

அழகியலும் வீரமும்
இலக்கியங்களில் பெரும்பாலும் சொல்லப்படும் வீரத்தின் விளைவுகள் என்ன?
இரத்த நதியில் மிதக்கும் உடலங்கள் .. மனித அன்பின் கல்லறைகள் மீது
அடுக்கி கட்டிய வெற்றிக்கோட்டைகள் ..கொம்புகளின் முழக்கத்தினை தோற்கடிக்கும் உயிர் பிரியும் ஓலங்கள் …
அவற்றை  அழகியல் காட்சியாகத்தான் காண வேண்டுமா ?.நம் மனது இதை ஒப்புவதில்லை ஏனெனில் அடிப்படை மனித தர்மம் அவற்றில் இல்லை.  தமிழ் வீரத்தை அழகியலில்தான் சேர்க்கிறது..வடமொழி மரபும் ருத்ரத்தை ரசங்களில் ஒன்றாகத்தான் குறிக்கிறது.
குவிந்திருக்கும் மண்டை ஓடுகளும் குடல்களில் விளக்கெரிக்கும் பேய்களும் ஊளையிடும் நரிகளும் நிறைந்திருக்கிற முத்தொள்ளாயிரம் நம்மை அழகியல் ரசனைக்குத்தான் இட்டுச் செல்கிறதா ?
யுhனைகள் மன்னர் மார்புகளை கிழிப்பதும் குதிரையின் குளம்புகள் மணிமுடிகளை உதைத்து பொன்னுரைக்கும் கல்லாக மாறிப்போவதும் அழகுதானா? அழகியலுக்குரியதுதானா ?
பூக்களை எரித்து விட்டு அவர்கள் எந்த சாம்பலில் ஒப்பனை செய்து கொண்டார்கள்.
இப்படி,  பொதுவாக போரின் வெற்றிகளை சொல்லுகிற இலக்கியங்களில் அவ்வளவாக எளிதில் காணக்கிடைக்காத ஒரு பாடல் அதுவும் ஒரே ஒரு ஒற்றை வரி.... வீரத்தை அழகியலில் வைத்திருப்பதன் உண்மைப்பொருளை வெளிப்படுத்துகிறது இம் முத்தொள்ளாயிரத்தில்……

அக்காட்சி… கண்களை  உருட்டி முறைத்தபடி ,கீழ் உதட்டைக்   கடித்து  மடித்த வாயுடன் எய்யும்படி கையில் பிடித்த வேலுடன் ஆண் யானையையே படுக்கையாகக் கொண்டு தம் மண்ணை விட்டுக்கொடுக்காமல் இறந்து கிடக்கும்   பகை மன்னனைப் பார்த்து தம் கையில் வெற்றிக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு நின்றான் பாண்டியன்.
 எப்படி நின்றான் என்று முத்தொள்ளாயிரக் கவிஞன் கூறுகிறான் தெரியுமா…
கொடித்தலைத்தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான்”
பரணிகளையெல்லாம்  புரட்டிப்போடும் வரிகளல்லவா இவை.
ஒற்றை வரியில்... அழகியல் காட்டும் வீரம் என்பது மானுடத்தை காத்தல்
மன்னுயிர் காத்தல் என்ற பொருளிலேதான் அமைகிறதே தவிர அழித்தலில் அல்ல ஆதிக்க வெறியை நிலை நாட்டல் அல்ல என்பதை முத்தொள்ளாயிரக் கவிஞன் நிறுவிச்செல்கிறான்.
வெற்றியைப்போல் அது பொய் முகம் காட்டினாலும் அவலத்தால் அது தோல்வி என்றான்.இரண்டு தரப்பினருமே வீரத்தை காத்தலுக்கே தர வேண்டும் என்பதே அழகியல் வீரம்’.




முத்தொள்ளாயிரத்தை முன்வைத்து  ஒரு உரையாடல்…

 ஆக, நண்பர்களே ...சில குறுக்கு வெட்டு உரையாடல்களோடு உரையை நிறைவு செய்ய எண்ணுகிறேன்....

1)  முத்தொள்ளாயிரம் ஒரு தொள்ளாயிரமோ மூன்று தொள்ளாயிரமோ கிடைத்திருப்பவை மிகக்குறைவான பாடல்களே .  இருக்கின்ற பாடல்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக மூவேந்தர்களை மட்டுமே பேசுவதால் மற்றவை மறைக்கப்பாட்டு இவை மட்டும் பொறுக்கி எடுத்து தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

2)  பெண்கள் முழுவதும் தாயார்களால் வீட்டுக்குள் வைத்து அடைக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.  சதாகாலமும் மன்னன் மீதான காம இச்சையில் உழல்பவர்களாக இருக்கிறார்கள்.  உண்மையில் அக்காலப் பெண்கள் அப்படியா இருந்திருப்பார்கள்?  (காதலும் களவும் இங்கு பேசப்படவில்லை).

3)  “வினையே ஆடவருக்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என்று சங்கப் பாடல் பேசினாலும்… “அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ” என்று எழுச்சிகரமான பெண்சமத்துவத்தை பெண்விடுதலையை குறுந்தொகை 63ல் உகாய்க்குடி கிழார் ஆரம்பித்து வைக்கிறார்.   ஆனால் அநேகமாக அதற்குப் பின்னால் எழுதப்பட்டிருக்கும் இதில் பெண் காம மடமைக்குள் தள்ளப்படுகிறாள்.

மன்னனைப் பார்த்த மாத்திரத்தில் குடத்து விளக்காய் இருந்து காமம் மலையுச்சி விளக்காய் மாறிவிட்டது, ஏறிவிட்டது என்று பேசப்படும்போது (பாடல்கள் 122) பெண்மையை முத்தொள்ளாயிரம் கொச்சைப்படுத்தவும் செய்திருக்கிறது என நாம் துணிய வேண்டியிருக்கிறது.

4)  எந்தவித தத்துவார்த்தப் பின்புலமும் இன்றி வாழ்க்கையை உய்விக்கும் உன்னதப் பதிவுகள் இன்றி அதீதப் புனைவுகளாக ஒரே மாதிரியான வார்ப்பில் எழுதப்பட்டிருக்கிறது முத்தொள்ளாயிரம்.

5)  என்றாலும் புனைவுகளின் ஊடாக அடுக்கடுக்காய் அகக் காட்சிகளில் கசிந்து பரவுகிற படைப்புச்சுவையின் வசீகரம் நம்மை முத்தொள்ளாயிரத்தை வாசிக்கச் செய்கிறது. வணக்கம் .
                                         
                                               ...............................................................................................

                                            

Sunday, 26 October 2014

இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி

இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன்.

'எளவட்ட முறுக்கிலே எவளோடயாவது போறவன்... கம்மாக்கரை, கிணத்தடி, படப்படிப் பக்கம் போயிறுங்க. தப்பி நடந்தா... காளி கண்ணைக் கெடுத்திடும்’ என்பார்கள். மற்றபடி பகம் பூராவும் வெட்டுச் சீட்டு, ரம்மி, தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் நடக்கும். தென்புறம் இருளாண்டித் தேவர் படுத்திருந்தார். அவர் தலைமாட்டில் கந்தையாத் தேவர். வட ஓரம் ஏழு பேர் ரம்மி, ஏழு பேரில் இருளாண்டித் தேவர் மகன், மகள் புருஷன், கந்தையாத் தேவர் மகன், தம்பி மகன் ஆடிக் கொண்டிருந்தார்கள். மேலப்புறம் வெட்டுச் சீட்டு, கிழக்கே பத்ரகாளி பார்வையில் தாயக் கட்டம். இருளாண்டித் தேவரின் கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம். எல்லோரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு சொந்தம். தகப்பன், மகன், மாமன், மச்சினன்.
சீட்டுப் பிடிக்க கை பழகாத சின்னப் பயலுகளுக்கு நிறைகுளத்தம்மன் கோயில் ஆலமரத்தில் காக்கா குஞ்சு விளையாட்டு. ஊர்க் கிணறுகள் அத்தனையும் குட்டப்புழுதி ஆகிவிடும். குதியாட்டம்தான்.
இருளாண்டித் தேவரின் இடதுகை மடங்கி தலைமாட்டில் பாந்தப்பட்டிருந்தது. இரண்டு தொடை இடுக்கிலும் வலது கையைக் கொடுத்திருந்தார். தொடை இடுக்கில் கிடந்த தழும்புகள் மேடு தட்டிக் கிடந்தன. கவுல்பட்டியில் ஆடு திருடப்போய் பிடிபட்டு பெருநாழி போலீஸார் கம்பியைக் காய வைத்து இழுத்தத் தழும்பு.
பெருநாழிக்கு மேற்கே நாலாவது மைலில் கவுல்பட்டி. தெலுங்கு பேசுகிற ரெட்டிமார் ஊரு. வண்ணான் குடிமகனைத் தவிர்த்து எல்லோரும் ரெட்டிமார்கள் தான். சம்சாரிகளுக்கான எல்லாக் கோப்புகளும் உள்ள ஊர். வீட்டு வீட்டுக்கு உழவு மாடு. கிடை கிடையாக ஆடு, ஊரைச் சுற்றி பெரும்பெரும் படப்புகள். வாய் அகன்ற மண்பானை போல் ஊரணி. மாட்டுக்கும் மனுசருக்கும் அதுதான் குடிதண்ணீர். யாரும் கால், முகம் கழுவக் கூடாது. கட்டு செட்டான ஊர். களவுக்கு இடங்கொடுக்காத ஊர்.
பத்து பேர் எதிர்த்து வந்தாலும் அடித்து விரட்டுகிற வீரன் இருளாண்டித்தேவர். அன்றைக்குக் கவுல்பட்டி களவுக்குப் போனவர்களில் யாரும் குறைந்த ஆளில்லை. முருகேசத் தேவர், ஒத்தையிலே நின்னு ஊரையே அடிக்கிற தாட்டியன். அதே மாதிரி கந்தையாத் தேவர், நாகுத்தேவர், கருப்பையாத் தேவர், முத்துத்தேவர், சுந்தரத்தேவர், குருசாமித் தேவர் எல்லாரும் வீரவான்கள். இத்தனை பேரும் கம்பு கட்டி நின்றால் எந்தப்படையும் பின்வாங்கும்.
அன்றைக்குச் சாமத்துக்கு மேலே எல்லாரும் கிளம்பி வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள். பின் நிலாக் காலம். ராத்திரி ஒரு மணிக்கு மேலே தான் நிலா கிளம்பும்.
ஆலமரம். பாறையில் வேர்ப்பிடித்து உச்சியில் நின்றது. ஆலமரத்துப் பட்சி உத்தரவு கொடுத்தால்தான் களவுக்குக் கிளம்புவது வழக்கம். ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தால் நல்ல சகுனம். போகிற இடத்தில் ஆபத்தில்லை. இடமிருந்து வலம் ஆகாது. வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். எல்லோர் கையிலும் வேல் கம்பு. கனத்த செருப்பு, கருப்புப் போர்வை, குத்துக்காலிட்டு காத்திருந்தார்கள். வெகுநேரம் கழித்து ‘கீச்ச்....’ என்ற சத்தத்தோடு ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தது.
இருளாண்டித் தேவர் எழுந்தார்.
“வைரவன் உத்தரவு கொடுத்துட்டாரு ஒரு குறையும் வராது. எல்லாரும் கெளம்புங்க”. கிளம்பினார்கள், பத்துப் பேருக்கு மேல் இருக்கும். நிலா கிளம்பி விட்டது. நாலு மைலும் வண்டிப்பாதை. ரெண்டு பக்கமும் முள்ளுக்காடு. இருளாண்டித்தேவர் முன்னால் போனார். பேச்சும் சிரிப்புமாக நடந்தார்கள்.
வனாந்தரம். இருட்டு. யாராவது கொஞ்சம் பலத்து பேசினாலோ, சிரித்தாலோ இருளாண்டித்தேவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

இடையிலே ரெண்டுமூணு ஓடைக்காடு. முழங்காலுக்கு வண்டல் இறக்கியது. செருப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடைகளைக் கடந்தார்கள்.
மணிப்பத்தா ஓடையைத் தாண்டி பத்து எட்டு நடந்திருப்பார்கள். வண்டிப்பாதையின் இந்தத் தடத்துக்கும் அந்தத் தடத்துக்கும் சரியாக ஒரு பாம்பு புழுதியைக் குடித்துக்கொண்டு படுத்திருந்தது. தொடைக்கனம். முன்னே போன இருளாண்டித்தேவர் ரெண்டு எட்டு இடைவெளியில் பாம்பைப் பார்த்துவிட்டு நின்றார். நாகம் தலை தூக்கிச் சீறுமுன், வேல்கம்பால் தலையில் ஒரு குத்துக் குத்தி முள்வேலிக்குள் தூக்கி எறிந்துவிட்டு நடந்தார். கவுல்பட்டி ஊரணிக்கரையைச் சுற்றி பெரும் பெரும் புளிய மரங்க்ள் பேயாய் நின்றன. நிலா வெளிச்சத்தில் ஊரணி புளியமரங்கள் தட்டுப்பட்ட உடனே இருளாண்டித்தேவர் உதட்டில் விரல் வைத்து ‘உஸ்... உஸ்...’ என்று எச்சரித்தார். செருப்புச் சத்தம் கேட்காதபடி பொத்தி பொத்தி நடந்து முன்னேறினார்கள். ஊர்க்கிட்டே அண்ட முடியாது. வீட்டு வீட்டுக்கு நாய் கெடக்கும். ராஜபாளையத்துக்கோம்பை நாய்கள். துரத்திப் பிடித்தால் தொடைக் கறியை தோண்டி எடுத்துவிடும்.

குளிருக்குக் குன்னிப் படுத்திருக்கும் அனாதைக் கிழவி மாதிரி ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரை தெற்கே விட்டு, ஊரணிக்கு வடக்காக நடந்தார்கள். ஆட்டுக்கிடை ஊருக்கு வெளியே மந்தைக் காடுகளில்தான் கெடக்கும்.
“யோவ்.... குருசாமித் தேவரே.... எட்டி நடங்க...”
ஊரணிக்கு வடக்கே நாலு புஞ்சை கடப்புக்கு ஆட்டுச் சத்தம் கேட்டது.
இருளாண்டித்தேவர் வலது கையை லாத்தி காட்டினார். எல்லோரும் வடக்காக எட்டி நடந்தார்கள்.
சுந்தரத்தேவருக்கு இருமல் முட்டியது. நெஞ்சுக்குள் அமுக்கினார்.
“கந்தையாத்தேவரே.... செருப்பு சத்தம்....”
கந்தையாத் தேவர் பொதுமலாய் நடந்தார்...
எல்லா ஆடுகளும் படுத்துக்கிடந்தன. ஒரு ஆடு ‘புர்ர்ர்ர்.... ர்....ர்...’ எனத் தும்மியது. தென்கோடியில் ஒரு கயிற்றுக்கட்டில். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெரியாமல் போர்த்திக்கொண்டு கிடைக்காரன் படுத்திருந்தான். கட்டிலில் ஒரு வேல்கம்பு சாத்தி இருந்தது. கட்டிலுக்கடியில் நாய். சுருட்டிப்படுத்திருந்தது.
‘நேய் படுத்திருக்கு.”
அடுத்த புஞ்சைப் பொழியில் எல்லாஅரும் பதுங்கி உட்கார்ந்தார்கள். வேல் கம்புகளைக் கிடத்தி விட்டு போர்வைகளை இறுக்கிப் போர்த்தினார்கள். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டார்கள்.
”தெற்கயும் மேற்கயும் யாரும் போகாதீங்க. வடக்க பாதிப்பேரும் கிழக்கப் பாதிப்பேரும் போகணும். சுருக்கா முடியணும்.”
வேல்கம்பை கையில் எடுத்துக் கொண்டார்கள். இருளாண்டித் தேவரோடு சேர்ந்து பாதிப்பேர் கிழக்கேயும், முருகேசத் தேவரோடு பாதிப்பேர் வடக்கேயும் பிரிந்தார்கள்.
பச்சைப் பனை ஓலையைக் கிழித்ததுபோல் குட்டி ஆடுகள் சிணுங்கின. சின்னச் சின்ன சத்தங்களோடு ஆடுகள் கிடந்தன. கிடைக்காரனும், நாயும் அசையவில்லை. நல்ல தூக்கம். நிலா வெளிச்சத்தில் ஆடுகளின் நிறம் தெரியும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள். சுந்தரத்தேவர் மறுபடியும் இருமலை நெஞ்சுக்குள் அமுக்கினார்.
’புர்ர்...ர்...ர்’ என்று ஒரு ஆடு தும்மியது. பத்தடி நெருக்கத்திலேயே நின்று அவரவருக்குத் தகுதியான ஆடுகளை இனம் குறித்தார்கள். கிடாயாக இருந்தால் கறி நல்லா இருக்கும். பெருத்த கிடாயாக இருந்தால் தோளில் போட்டுக் கொண்டு நாலு மைல் தூரம் ஓட வேண்டும். இருளாண்டித் தேவரின் சைகைக்காக காத்திருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்த கிடைக்காரன் புரண்டு படுத்தான். நாய் அசையவில்லை. கிழக்கே இருந்து இருளாண்டித் தேவர் துண்டை வீசினார்.
அவரவர் குறித்து வைத்திருந்த கிடாய்களை நெருங்கி இடது கையால் வாயை இறுக்கிப் பிடித்தார்கள். வலது கையால் குரல்வளையை ‘கடக்’ என நெறித்து ஒதுக்கி விட்டார்கள். கிடாய்கள் கால்களை உதறிய சத்தந்தான் லேசாய் கேட்டது. கத்த முடியவில்லை. கைக்கு இரண்டு கால்களைப் பிடித்துத் தூக்கி, துண்டைப் போர்த்துவதைப் போல் தோளில் போட்டார்கள்.
கிடைக்காரனுக்கும், நாய்க்கும் நல்ல தூக்கம். இடது கையால் ஆட்டுக் கால்களையும் வலது கையில் வேல் கம்பையும் பிடித்துக் கொண்டு ‘லொங்கு... லொங்கு’ என ஓடக் கிளம்பினார்கள். மூன்றாவது புஞ்சைப் பொழியைக் கடந்தால்தான் வண்டிப்பாதை. முருகேசத் தேவர் முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். தோளில் கிடந்த ஆட்டின் சூடு, இந்தக் குளிர்ந்த நேரத்தில் எல்லோருக்கும் இதமாக இருந்தது. வண்டிப்பாதைக்கு வந்து விட்டார்கள். யாரும் வாய் திறக்கவில்லை. ஓட்டம் குறைந்து ’ஓட்டமும் நடையு’மாகப் போனார்கள்.
முத்துத்தேவரின் கழுத்தில் கிடந்த கிடாயின் குரல்வளை சரியாக நெறிபடவில்லை

‘ம்மே... ம்மேய்... ம்மேம்...’ என்று கத்தக் கிளம்பி விட்டது. முத்துத்தேவரின் பிடி தவறியது. கிடாய் துள்ளவும் பிடியை விட்டு விட்டார்.
கீழே குதித்த கிடாய், ‘ம்  மே... மே... மேம்... ய்..’ என்று கத்தித் தீர்த்து விட்டது.
முத்துத்தேவர் சுதாரித்து, கிடாயின் குரல்வளையை கடித்துத் துப்பினார். கிடாய் சத்தம் நின்றது.
‘லொள்... லொள்... லொள்...’
இராஜபாளையத்தைக் கோம்பை கிளம்பி விட்டது. கிடை ஆடுகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன.  கிடைகாரன் போர்வையைச் சுருட்டி வீசிவிட்டு வேல் கம்பை கையில் எடுத்துக் கொண்டு ஊரைப் பார்த்துக் கத்தினான்.
“ஏய்..... கள்ளன்... கள்ளன்.... ஓடியாங்க...”
இருளாண்டித் தேவரோடு சேர்ந்து எல்லோரும் வண்டிப்பாதையில் கெதியாய் ஓடினார்கள். முத்துத்தேவர் கடைசியாக வந்தார். வாயில் ஆட்டு ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. முதல் புஞ்சைப் பொழியை நாய் தாண்டி விட்டது. ஊர் எழுந்து கொண்டது.
ஹூ...ஹூவெனக் கூச்சல்.
சுந்தரத் தேவருக்கு மூச்சு இரைத்தது. எல்லோரும் வேல் கம்பு இருந்த வலது கையில் செருப்பைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள்.
மணிப்பத்தா ஓடை வண்டலுக்குள் சதக்.. பொதக்.. என மிதித்து வெளியேறி ஓடினார்கள். நாய் ஒரு புஞ்சைக் கடப்பில் வந்து கொண்டிருந்தது. ஊர்ச்சனங்கள் கம்புகளோடும் ஆயுதங்களோடும் வண்டிப் பாதையில் ‘திமு திமு’ என ஓடி வந்தனர்.
‘வேய் ரா.... வேய் ரா...”
நாய், வண்டலைக் கண்டதும் மலைத்து நின்று குரைத்தது. ஓடையின் தென்கரையில் கொஞ்ச தூரம் ஓடியது. வண்டல் மாறி தண்ணீர் தட்டுப்பட்டது. பாய்ந்து நீந்தி வடகரையில் ஏறிக் கிழக்கே வண்டிப் பாதையில் விரட்டி ஓடியது.
அதற்குள் முருகேசத் தேவர் கூட்டத்தினர் எட்டிப் போய்  விட்டார்கள். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம்தான் இவர்களுக்குக் குறி. கெதியாக ஓடினால் ஒன்னுக்கு இருக்கும் நேரம்தான். எல்லையைத் தொட்டு விடலாம். அப்புறம் வெளியூரான் நெருங்க மாட்டான்.
நாய், நாலுகால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. கவுல்பட்டிச் சனம் மணிப்பத்தா ஓடையைக் கடந்து விட்டது.
“வேய் ரா..... வேய் ரா....”
களவாணிப் பயலுகளை ஒரு தடவை ஊருக்குள் விட்டுவிட்டால் அப்புறம் ஒண்ணும் மிஞ்சாது. மனுஷன் குடியிருக்க நீதி இல்லாமல் போயிரும். இதுவரைக்கும் அக்கம்பக்கத்திலே, அடுத்த ஊரு மூணாவது ஊருலேதான் களவுபோனது. கவுல்பட்டிக்குக் களவாணிப்பயலுக வந்தது இதுதான் முதல் தடவை. அவிழ்ந்த தலைமயிரைக் கூட அள்ளி முடியாமல் பெண்கள் சேலையை ஏத்திச் செருகிக் கொண்டு ஓடி வந்தார்கள்.
“வேய்  ரா... வேய்   ரா...”
கடைசியாகப் போய்க் கொண்டிருந்த முத்துத்தேவரை நாய் எட்டிக் கவ்வியது. வேட்டி பிடிபட்டது. முத்துத்தேவர் செருப்பை ஓங்கி நாயின் வாயில் அடித்தார். வேட்டியை விட்டுவிட்டது. போர்வையைக் கவ்வியது. பிடறியில் கிடந்த கிடாயை கீழே போட்டார். செருப்புக்களையும் கீழே போட்டார். போர்வையை உதறி விட்டார். வேல் கம்பு மட்டும் கையில் இருந்தது. நாய், நெஞ்சில் குதறியது. இடது கையால் நாயின் மூஞ்சியில் அடித்தார், வேல் கம்பை ஓங்கினார். வலது மணிக்கட்டை கவ்விக் கொண்டது. திமிர முடியவில்லை. வேல் கம்பு நழுவியது. இடது கையால் நாயின் மேல் வாயைப் பிடித்து, வாய்க்குள் மாட்டி இருந்த வலது கையை கீழே அமுக்கினார். நாய், பக்கத்து முள் வேலியில் விழுந்தது. குனிந்து வேல் கம்பை எடுப்பதற்குள் நாய் முதுகில் பாய்ந்தது. கீழே சாய்ந்தார்.
முன்னால் போனவர்கள் வெகு தூரம் போய்விட்டார்கள். பின்னால் ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது.
“வேய் ரா... வேய் ரா....”
நிலா வெளிச்சத்தில் சனம் வருவது தெரிந்தது.
நாயைப் புரட்டினார். கால் நகத்தால் உடம்பைப் பிறாண்டியது. நாயோடு முள் வேலியில் புரண்டார். பாளம் பாளமாய் முள் குத்திக் கிழித்தது. மறு புரட்டில் வண்டிப் பாதைக்கு வந்தார். மேலே கிடந்த நாயின் வாயெல்லாம் ரத்தம் ஒழுகியது. இரண்டு கைகளையும் நாயின் வாய்க்குள் கொடுத்துக் கிழித்தார்.
பலமான சத்தத்தோடு நாய் மல்லாக்க சரிந்தது. முத்துத் தேவரின் வாய், கை, உடம்பெல்லாம் ரத்தம்.
”வேய் ரா... வேய் ரா...”
சனம் நெருங்கிக் கொண்டிருந்தது.
முத்துத்தேவர் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டினார். போர்வையைக் காயங்களின் மேலே போர்த்திக் கொண்டார். கிடாயைத் தூக்கி தோளில் போட்டு, வேல் கம்பு, செருப்புகளை வலது கையில் எடுத்துக் கொண்டு கெதியாய் ஓடினார். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம் நெருங்கித் தெரிந்தது.
மறுநாள், பெருநாழி போலீஸ் நிலையத்தில் கவுல்பட்டி கிராமமே வந்து நின்றது.
முதல்நாள் ராத்திரி களவுக்குப் போனவங்க, போகாதவங்க எல்லா ஆம்பளைகளுக்கும், போலீஸார் கம்பியைக் காய வைத்து துடிக்கத் துடிக்க, கதறக்கதற சூடு போட்டார்கள். கன்னத்திலே, தொடையிலே, கையிலே, கழுத்திலே, வயிற்றிலே, முதுகிலே என்று பலமாதிரி சூடு. அன்றைக்கு இழுத்த சூடுதான், இருளாண்டித் தேவரின் தொடை இடுக்கில் தழும்பேறிக் கிடந்தது.
இருளாண்டித் தேவர் புரண்டு படுத்தபோது, கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த நாகுத் தேவரின் இடுப்பில் கால் பட்டுவிட்டது.
“நல்லா மிதிங்க மச்சான்.”
நாகுத் தேவர் நக்கலாய்ச் சிரித்தார்.
“எங்கிட்ட மிதி வாங்கணும்னா முன் ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருக்கணும் மாப்ளேய்...”
இருளாண்டித் தேவர் உதட்டோரம் சிரித்தபடி கால்களை ஒடுக்கி மறுபடியும் தலை சாய்த்துக் கொண்டார்.
ரம்மி ஆட்டத்தில் ஜோக்கர் வெட்டியதில் தகராறு. தாயக் கட்டத்தில் ஒருநாய் வெட்டுப்பட்ட சந்தோஷம். சிரிப்பும் கேலியுமாய்ச் சத்தம்.
கிழக்கே இருந்து முருகேசத் தேவர் வந்தார்.
“ஏய்ய்... நம்ம மூத்தவர்மகன் சேது வந்திருக்குதாம்...”
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். சீட்டாட்டம், ஆடு புலி, வெட்டுச் சீட்டு, தாயக்கட்டம் எல்லாவற்றையும் கலைத்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த இருளாண்டித் தேவரையும் கந்தையாத் தேவரையும் எழுப்பினார்கள்.
எல்லோரும் கிளம்பி மூத்தவர் வீட்டுக்கு நடந்தார்கள்.
சேது, கால், முகம் கழுவி துடைத்துவிட்டு அப்பாவுடைய போட்டோவுக்கு முன்னால் நின்றான். அய்யாவின் நெற்றியில் குங்குமம் இட்டிருந்தது. உச்சிநத்தம் காசிநாதன்செட்டி வீட்டில் கன்னம் போட்டு களவாடப் போனபோது அந்த ஊர்ச் சனங்களோடு நடந்த சண்டையில் வெட்டுப்பட்டு அய்யா இறந்து போனார். சேதுவுக்கு அருகில் அம்மா நின்றது. படத்தில் இருந்த கணவரையும் பக்கத்தில் நின்ற மகனையும் மாறி மாறிப்பார்த்து அம்மா அழுதது. சேதுவுக்குக் கண்கலங்கிப் பார்வையை மறைத்தது. வீட்டு வாசலில் ஆள் அரவாட்டம் தெரிந்ததும் சேது திரும்பி வாசலைப் பார்த்தான்.
“மருமகனே”.. கூட்டத்துக்கு முன்னால் முருகேசத் தேவர் நின்றார். சேது வாசலுக்கு வந்தான்.
“கும்பிடுறேன் மாமா.. கும்பிடுறேன் சின்னய்யா.. கும்பிடுறேன் மச்சான்.. வாங்க எல்லாரும் வாங்க...”
கண்டதும் சேது, கையெடுத்துக் கும்பிட்டதில் எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியலே.
“எப்போ வந்தீங்கப்பூ...?”
”இப்போதான் மாமா.”
அம்மா திண்ணையில் பாய்களை விரித்தது. எல்லோரும் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள்.
“டூட்டி ஒப்புக்கொண்டுட்டீங்களா?” - நாகுத்தேவரின் கன்னத்தில் தழும்பு கிடந்தது.
“நாளைக்குப் போயி ஜாய்ன்ட் பண்றேன் மாமா.”
”எங்கே டூட்டி?” - குருசாமித் தேவரின் வலது கையில் தழும்பு இருந்தது.
“பழனி பக்கத்திலே மடத்தாகுளம் போலீஸ் ஸ்டேசன்லே”
“சப்-இன்ஸ்பெக்டருதானே?” - கந்தையாத் தேவருக்குப் பிடறியில் தழும்பு.
“ஆமாம், சின்னய்யா, ஒரு வருசம் ட்ரெயினிங் முடிஞ்சு... முதல் போஸ்டிங்”
திண்ணையின் மூலையில், ஓரத்தில் உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் எம்பி எம்பி சேதுவைப் பார்த்தார்கள்.
‘உடுப்பு போட லாயக்கான ஆளு.’ எல்லோருக்கும் பெருமை தாங்கலே.
“உங்க அண்ணனை எங்கே காணோம்?”
“எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கெடைச்சா.. இருளப்ப சாமிக்குக் கிடாவெட்டி பொங்கல் வைக்கணும்னு அம்மா நேர்த்திக் கடன் வச்சதாம். அதுக்கு ஒரு கிடாக் குட்டி வெலைக்கு வாங்க அண்ணன் வெளியே போனாரு.”
முருகேசத் தேவர் கன்னத்தில் கிடந்த தழும்பைத் தடவிக்கொண்டே “என்னது..! கிடாக்குட்டியை வெலைக்கு வாங்கப்போனாரா? பைத்தியக்காரப் பிள்ளைக. நம்ம வீட்டுப் பிள்ளைக்கு சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கெடச்சிருக்கு. நம்ம சனமெல்லாம் சேர்ந்து கொண்டாட வேண்டாமா? நம்ம குலதெய்வம் இருளப்பனுக்கு நாளைக் காலையிலே ஒரு கிடாய் இல்லே.. இருபத்தியோரு கிடாய் வெட்டுப்படுது.” என்றவர் திண்ணையில் இருந்த எல்லோரையும் பார்த்து “ஏய்...ய்... வீட்டு வீட்டுக்கு ஒரு கிடாயைப் பிடிச்சுக் கொண்டு வந்து இங்கே கட்டுங்கடா” என்று உத்தரவிட்டார்.
“எதுக்கு மாமா.. வேண்டாம்...” சேது மருகி மருகி எல்லோரையும் பார்த்தான்.
“கள்ள ஆடு இல்லே மருமகனே.. எல்லாம் நம்ம சொந்த ஆடு.”
சேதுவின் கண்களில் குபுக் என நீர் அடைத்தது. காலமெல்லாம் காயம் பட்ட சனங்கள்.
“தம்பி சேதூ... இந்தப் பயலுகளுக்கு ஒரு ஆசை...”
“என்ன மாமா சொல்லுங்க”
“நீங்க சப்-இன்ஸ்பெக்ட்டர் உடுப்பு மாட்டிக்கிட்டு வந்து, கொஞ்ச நேரம் எங்க எல்லாரோடயும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும்.”
முருகேசத் தேவரின் கைகளைச் சேது பிடித்துக் கொண்டான்.
“இதோ வர்றேன் மாமா.” வீட்டிற்குள் போனான். எல்லோரும் உள்வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் சேது சப்-இன்ஸ்பெக்டர் உடுப்போடு திண்ணைக்கு வந்தான். எல்லோரும் பதறியெழுந்து, தோளில் கிடந்த துண்டைக் கையில் எடுத்தபடி திண்ணையைவிட்டு இறங்கிக் கீழே நின்றார்கள்
*******