Saturday 6 September 2014

நா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை




நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருக்கும் முகவுரை -
(“பூ“ திரைப்படக் கதாசிரியரும் இவரே என்பது ஒரு கூடுதல் தகவல்)
--------------------------------------------------------
எங்கெங்கோ அழைத்துச்செல்லும் கட்டுரைகள்
       கவிஞர் தோழர் நா.முத்துநிலவனின் இக்கட்டுரைத்தொகுப்பை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தொகுக்கப்படும்போதுதான் எழுதியவருக்கு (தனக்கே) ஓர் அடையாளம் கிடைக்கும்.இந்தப் பதினாறு கட்டுரைகளும் தமிழ் இலக்கிய உலகில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற  சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே நடந்து செல்வதால் 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டாக ஒரு முக்கியத்துவம் இத்தொகுப்பிற்குக் கிடைக்கிறது.
ஒரு பெண்ணை அவள் பெண் என்பதாலேயே இச்சமூகம் அவளை நடத்தும் விதமும்  அதில் உறைந்திருக்கும் பாலியல் வன்முறையும் ஆணாதிக்க உளவியலும் இன்றைய தமிழ்ப் பெண்கவிகளின்   கவிதை வரிகளில் எங்கனம் தெறித்து வருகின்றன என்பதை இன்றைய தமிழில் பெண் கவிகள் என்கிற கட்டுரையில் தொகுக்கிறார்.தன்னுடைய கருத்தை துறுத்தலாக முன் வைக்காமல் கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து தன்னுடைய பார்வையை இடையியையே வைத்துச்செல்கிறார். ஆணாய்ப்பிறப்பது இயற்கை தரும் லாட்டரிப்பரிசு  என்கிற நிர்மலா சுரேஷ் வரிகளைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து அதுவும்மேல்சாதி ஆணாய்ப் பிறப்பது பம்பர் பரிசு’ என்பதை அவர் சொல்லவில்லை ,நாமாகப் புரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று தன் கருத்தைப் பதிவு செய்யும் விதம் ரசமாக இருக்கிறது.
        புதுக்கவிதையின் வரவு செலவுக்கணக்கைப் பார்க்கும் அடுத்த கட்டுரை உண்மையிலேயே என்னைப் பழைய காலத்துக்கு இழுத்துச்சென்றது.புதுக்கவிதைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அன்று நடந்த விவாதங்களைத் தொகுத்துத்தரும் இக்கட்டுரை வல்லிக்கண்ணன் இல்லையே என்கிற குறையைத் தீர்க்கிறது.அன்றைய சில கவிதைத் திருட்டுகளையும்கூட இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.நமது முற்போக்குக் கவிஞர்கள் குறித்து முத்துநிலவன் கொள்ளும் நம்பிக்கையும் பெருமிதமும் எனக்கு இல்லை.அவர்களின் ஊக்கமும் நோக்கமும் பாராட்டும்படி இருப்பதுபோல் கவிதைகள் இன்னும் வந்துசேரவில்லை என்பது என் கருத்தாக இருக்கிறது.
         சங்க இலக்கியமும் தமிழ்ச்சமூக வரலாறும் குறித்துப் பேசும் கட்டுரை ஓர் அரிய வகைக்கட்டுரை.சங்கப்பரிச்சயமும் ஆழ்ந்த வாசிப்பும் இல்லாத வாசகர்களுக்கு எளிமையாக ஓர் அறிமுகத்தைச் செய்கிற கட்டுரை இது.சங்க காலத்து மக்கள் நிலை என்னவாக இருந்த்து என்பதைப் பேசும் கட்டுரையின் இறுதிப்பகுதி முக்கியமானது. மேலாண்மை பொன்னுச்சாமியின் “கொலை“ சிறுகதையை முன் வைத்து அவர் நட்த்தும் கருத்துப்போர், ஒரு சக படைப்பாளிக்குக் கேடயமாக நிற்கும் ஆவேசமான வாதங்களின் தொகுப்பாக அமைகிறது. அகல ஆசையில் ஆழத்துக்கு முக்கியத்துவம் தராத அவரின் பிற்காலக் கதைகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துச் செல்கிறது இக்கட்டுரை.
       இத்தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரை க.நா.சு.வை தெனாலிராமனா படிப்பாளியா என்று கேள்வி கேட்கும் கட்டுரை. க.நா.சு.  பிறநெது நூற்றாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்ட பின்னணியில் இக்கட்டுரை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.மொழிபெயர்ப்பில் தமிழுக்கு கநாசு அளித்துள்ள  கொடைகளையும் அவரது சோதனைப் படைப்பு முயற்சிகளையும் அங்கீகரிப்பதில் துவங்கி ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவான அவரது கருத்துவரை எல்லாவற்றையும் பதிவு செய்ததோடு இக்கட்டுரை சுபமங்களாவில் வந்தபோது எழுந்த எதிரும்புதிருமான எதிர்வினைகளையும் நேர்மையுடன் பிற்சேர்க்கையாக இணைத்திருப்பது பாராட்ட்த்தக்கது.
        இதே தரத்துடன் வந்துள்ள இன்னொரு கட்டுரை ஜெயகாந்தன் பற்றியது.தமிழ் இலக்கிய உலகின் ஆகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தனை அவருக்கு உரிய மரியாதை அளித்து பிந்திய ஜெயகாந்தனின் சறுக்கல்களைப் பட்டியலிடுகிறார்.முனியம்மாவும் ராசாத்தியும் அம்மாசியுமாக இருந்த அவரது நாயக நாயகிகள் கங்காவும் சாரதா மாமியும் கௌதம சித்தார்த்தனுமாக மாறிப்போன கதையை ஆவணப்படுத்தியுள்ளார்.விமர்சன்ங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக  ஜெயகாந்தன் நம்மை ஆகர்ஷிக்கிறார் இன்றும் என்று எனக்குச் சொல்லத்தோன்றுகிறது.
         கம்பனையும் கார்ல் மார்க்சையும் எதிர்ப்பில் விளைந்த கனிகள் என்கிர புள்ளியில் வைத்து ஒப்பிட்டுப்பேசும் கட்டுரை புதிய அணுகுமுறையோடு இருப்பதோடு அன்றைய நாட்களில் கம்பனை உயர்த்திப்பிடித்த ஜீவாவின் குரலை நினைவுபடுத்துவதாகவும் எதிரொலிப்பதாகவும் அமைந்துள்ளது.
         இன்னும் தொடர்கின்ற வலைத்தளக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு விவாதப்புள்ளியை ஆழமாகத் தொட்டுச்செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.சிறு சிறு செய்யுள்களாகத்துவங்கிய தமிழ்க்கவிதை பெருமன்னர்கள் எழுந்தபோது விரிந்து சென்றதையும் காலத்தை மீறி எழுந்த சித்தர்களையும் தேராமன்னா என்று வெகுண்டெழுந்த பெண் குரலாக்க் கண்ணகியைக் குறிப்பிடுவதும் நான்கு குறட்பாக்களில்  ஆய்த எழுத்தை வள்ளுவன் ஏன் பயன்படுத்தினான் என விரிவாகப் பேசுவதும் இலக்கியத்தில் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு குறித்து மனம் திறந்து பேசுவதும் பாரதியின் பரிசு பெற்ற கவிதை குறித்து தேடி எடுத்து முன்வைக்கும் கருத்துக்களும் எனப்பயணிக்கும்  ஒன்பது சின்னச் சின்னக் கட்டுரைகளும் காரமான கட்டுரைகள்தாம். 
         இறுதியில் இணையத்தில் புழங்க வசதியாக சில தகவல்களையும் தந்திருப்பது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.
பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் இக்கட்டுரைகள் பரவலாக வாசிக்கவும் விவாதிக்கவும்படவேண்டிய மிக முக்கியமான கட்டுரைகள்.
வாழ்த்துக்கள் தோழரே...
அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்
15.08.2014
சிவகாசி

1 comment:

  1. நன்றி தோழர் ராசி!
    நம் கவிஞர் பாலா அவர்களின் நூலுக்கு நீங்கள் எழுதிய ஆழமான-அழகான விமர்சனத்தை அந்த நூலின் இரண்டாம் பதிப்பில் பின்னுரையாக அவரே விரும்பிச் சேர்த்தது நினைவிலாடுகிறது! எனது நூலின் இரண்டாம் பதிப்பிற்கும் அப்படி ஒரு பின்னுரையை எதிர்பார்க்கிறேன் தோழரே! மூன்று நூல்களுக்கும் அல்லது நீங்கள் விரும்பும் நூல்களுக்கு அல்லது நூலுக்கு! இதற்கும் அதற்கும் நன்றி.

    ReplyDelete